Published : 23 Jun 2016 10:20 AM
Last Updated : 23 Jun 2016 10:20 AM

துறைகளில் நடந்தது என்ன?- சுற்றுச்சூழல்: சாதனைகள்; சோதனைகள்

சாதனைகள்:

பருவநிலை தொடர்பாக பாரிஸில் நடந்த உச்சி மாநாட்டில், பொதுவான மற்றும் வெவ்வேறு பொறுப்புகளை வலியுறுத்துவதில் வெற்றி கண்டது இந்தியா.

கங்கை நதிக் கரையின் முக்கியமான எட்டு இடங்களிலும், யமுனை நதியின் இரண்டு இடங்களிலும் தண்ணீர் தரச் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2015 ஏப்ரலில் தேசியக் காற்றுத் தரக் குறியீட்டு எண் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லி, லக்னோ, சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் காற்றுத் தரக் குறியீட்டு அறிவிப்புப் பலகை வைக்க முடிவுசெய்யப்பட்டது.

ரூ. 10 லட்சம் கோடியிலான 2,000-க்கும் மேற்பட்ட திட்டங்கள் கடந்த பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, அவை நடைமுறைக்கு வந்தன.

சாலை, ரயில் போக்குவரத்து, குடிநீர்க் குழாய் இணைப்புகள், பாசனக் கால்வாய் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேங்கிக் கிடந்த திட்டங்கள் அவை.

சோதனைகள்:

ஆண்டுக்கு 16 மில்லியன் டன்னுக்கும் குறைவாக உற்பத்திசெய்யும் நிலக்கரிச் சுரங்கங்கள், பொது விவாதங்கள் இல்லாமல் விரிவாக்கம் செய்துகொள்ளலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. இதனால், உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கங்களுக்கான விரிவாக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

2,000 ஹெக்டேருக்கும் குறைவான அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சொல்லிவிட்டது மோடி அரசு.

மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் கொண்ட பகுதிகளில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக, காஸியாபாத், இந்தூர், லூதியானா, பானிப்பட் உள்ளிட்ட மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் கொண்ட இடங்களில் புதிய தொழில் தொடங்க வழிவகை செய்தார் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு வழிவகை செயப்பட்டிருக்கிறது.

வெறுமனே அலுவலகச் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலமாக ஏராளமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளுக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் பிஹாரில் விவசாய நிலங்களுக்குச் சேதம் விளைவிப்பதாகக் கூறி நீலா மான்களைச் சுட்டுக்கொல்ல மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையானது. மகாராஷ்டிரத்தில் காட்டுப் பன்றிகளையும், இமாச்சலப் பிரதேசத்தில் குரங்குகளையும், கோவாவில் மயில்களையும், மேற்கு வங்கத்தில் யானைகளையும் சுட்டுக் கொல்ல பிரகாஷ் ஜவடேகர் அனுமதி வழங்கியதை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி அமைந்தது முதலே சுற்றுச்சூழல் விவகாரங்கள் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கின. தொழில் வளர்ச்சி, காற்று மாசுபாடு, பழங்குடிகள் வாழ்வு, வன உயிர் பாதுகாப்பு என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது சுற்றுச்சூழல் துறை. என்ன நடந்திருக்கிறது?

எண் களம்: ஊழல் கட்டுப்பாடு - ஒப்பீடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x