Last Updated : 23 May, 2017 09:19 AM

 

Published : 23 May 2017 09:19 AM
Last Updated : 23 May 2017 09:19 AM

ஆண் என்ற பெருமிதம் அழிக்கப்பட வேண்டும்!

பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ வெளிவந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. கற்பு, காதல், திருமணம், மறுமணம், பாலியல் தொழில், விதவைகள் நிலை, சொத்துரிமை, கர்ப்பத் தடை, ஆண்மை அழிய வேண்டும் என்று பத்து அத்தியாயங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் காரணங்கள், பின்னணி, தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றி தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கருத்துகளின் தொகுப்பு அந்நூல். இன்றும் மேடைகளில் உரத்துச் சொல்லத் தயங்கும், சொன்னால் பன்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பெண்ணுரிமைக் கருத்துக் களை மிக எளிதாய், உறுதியாய் கூறியிருக்கிறார் பெரியார். புனிதம் ஏற்றப்பட்ட, மந்திரச் சொல்லாக முன்னிறுத்தப்படும் கற்பு என்பதைப் பற்றி தெளிவாகத் தன் வாதங்களை முன்வைக்கிறார் பெரியார். “கற்பு என்ற சொல்லுக்கு பொருளைப் பார்த்தால் அறிவின்மை, உறுதிப்பாடு, மாசற்றது என்பதாகச் சொல்லப்படுகிறது. ஆணுக்கென்றோ, பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்துக்கே உரியதான சொல் என்பது தெளிவாகிறது. ஆனாலும், பெண்ணை அடிமைப்படுத்தும் நோக்கத்துடன் கற்பு என்பதற்கு பதிவிரதம் என்று பொருள் எழுதிவிட்டனர்’.

தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான பேசுபொருளான காதலைப் பற்றிய அவரது கருத்தும் முக்கியமானது. ‘அன்பு, ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத் தவிர, வேறு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் - பெண் சம்பந்தத்தில் இல்லை.’

இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் அவரது கருத்துக்கள் மாற்றுச் சிந்தனைகளை முன்வைப்பதாய் அமைந்திருக்கின்றன. பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும் என்ற பெரியாரின் வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனாலும், ஆண்மை என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தற்போதும்கூட அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியபடியேதான் உள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும் என மகளிர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்மை என்பது இழிவானது என்ற கருத்தாக்கத்தை உறுதிப்படுத்தும் இத்தகைய சிந்தனைப்போக்கு முக்கியமான அரசியல் கட்சியின் அதிகாரபூர்வ அமைப்பில் இன்றும் இருக்கிறது. ஆண் என்ற பெருமிதம் அழிக்கப்பட வேண்டும் என்ற பெரியாரியக் கருத்துக்கு இன்னும் தேவையிருக்கிறது.

ரஞ்சனி பாசு, தொடர்புக்கு: ranjanibasu75@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x