Last Updated : 14 Jan, 2014 01:19 PM

 

Published : 14 Jan 2014 01:19 PM
Last Updated : 14 Jan 2014 01:19 PM

பொங்கலும் புதிரும்

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து தமிழின அடையாளத்தை வலுப்படுத்தும் பண்பாட்டு அம்சங்களுள் பொங்கல் முதன்மை பெற்று, அதுவரை இல்லாத பொருள் பொதிவுடன், ஒரு குறியீட்டுத் தகுதியோடு வழங்கத் தொடங்கியது. அப்போது கொண்டையராஜு, கே. மாதவன் ஆகியோரின் வண்ணத்தூரிகைகள் வரைந்த வாழ்த்துமடல் ஓவியங்களும் எழுத்தோவியங்களும், பிறவும், பொங்கலுக்கு முகம் போன்று இருந்த பொருட்களையும் விஷயங்களையும் மட்டுமே மக்களின் மனதில் பதியவைத்தன. ஆனால், இந்தப் பண்பாட்டின் செறிவைக் காட்டும் மற்ற அம்சங்களை அவற்றில் காண முடியாது. அவற்றை வண்ணங்கள் கொண்டோ சொற்களைக் கொண்டோ அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திவிடவும் முடியாது.

போகியில் புதுக்குவதும் உண்டு

மார்கழி செம்பாதிக்கு மேல் கார் மேகங்களின் ஓட்டம் நின்றுவிடும். விடுபட்டு வெளிக்கிளம்புவதுபோல வெள்ளைவெளேரென்று மேகக் கூட்டங்கள் வடகிழக்கிலிருந்து தென் மேற்காக நாளெல்லாம் விரைந்து கொண்டிருக்கும். கர்ப்போட்டக் காலத்தின் (மார்கழியின் பிற்பாதியில் ஒரு 10 நாட்கள் கொண்ட காலத்துக்குக் கர்ப்போட்டக் காலம் என்று பெயர்) இந்த வெண் மேகங்கள்தான் ‘பொங்கல்’ என்பார் எனது ஆசிரியர் அருணாச்சலம் பிள்ளை. இதைக் கண்டவுடன் தமிழர்கள் மாரிக் காலம் முடிந்ததென்று வீடுவாசலைத் துப்புரவாக்கி, வெள்ளையடித்து விழா எடுக்கத் தயராவார்களாம்.

‘போவியல்’ என்று எழுத்தறியாதவர்கள் இனிமையாகச் சொல்லும் போகியில் கழிக்க வேண்டியவற்றைத் தீயிலிட்டுக் கழிப்பார்கள். கழிக்க மனமில்லாத மண்பாண்டங்களைத் தீயில் மீண்டும் சுட்டுப் புதுக்கி வைத்துக்கொள்வார்கள். ‘பொங்கலும் புதிரும்’ என்று சொல்வதுண்டு. புதிர் என்பது தனது வயலிலிருந்து முதன்முதலாக வீட்டுக்கு வரும் புது நெல். புதிரின் வரவுக்காக எல்லாமே புதிதுதான் - பச்சரிசி, புதுப் பானை, புது அடுப்பு, புது அகப்பை, புதுப் பிரிமணை, புதுப் பாய். துணிகளையும், பழைய பாய்களையும் நனைத்துக் காயவைப்பார்கள். இப்படி எல்லாமே புதியதாக அல்லது நீரிலோ நெருப்பிலோ இட்டுப் புதுக்கியதாக இருக்கும்.

நெற்கதிர்களை ஆய்ந்து தெருவாசலின் நிலைக்கு மேல் சாணத்தைக் கொண்டு ஒட்டி, குஞ்சம்போல் தொங்கும். பெரும் குஞ்சங்கள் கிராமக் கோயில்களில் தொங்கும். மார்கழி முப்பதும் வாசலில் கோலமிட்டு பரங்கிப் பூக்களைச் சாண உருண்டையில் செருகி வைப்பார்கள். கோலத்தைப் பூக்கோலமாக விரிக்கும் இவற்றைத் தட்டிக் காயவைத்துப் பொங்கல் அடுப்புக்காகச் சேர்த்துக் கொள்ளலாம்.

பொங்கலின் முதல் நாளை அப்போது ‘பெரும்பொங்கல்’ என்போம். வீட்டைப் போலவே அன்று புது அடுப்புகளுக்கும் மாக்கோலம். பெரிதும் சிறிதுமாக இரண்டு பொங்கல் பானைகள் சந்தனம், குங்குமம் இட்டு, தாலி அடர்த்தியாகப் படர்ந்திருக்கும் மஞ்சள், இஞ்சிக் கொத்து களோடு அவை கழுத்து நிறைந்த கட்டுக்கழுத்திகளாகவே களைகட்டும். சிலர் அச்சுப்போடாத மொழுக்கம் பானை களையும், பெரும்பாலானோர் புடையில் அச்சுப் போட்டு அலங்கரித்தவற்றையும் வைத்துக்கொள்வார்கள்.

கோடு திறந்து ஈடுகாட்டுவார்கள்

பானைகளை அடுப்பில் ஏற்றுவதற்கு முன்பு கோடு திறப்பது வழக்கம். வானம் பார்த்துத் திறந்திருக்கும் உள்ளுமுற்றத்தில் அரிவாளால் தெற்கு வடக்காக இரண்டு கோடுகள் கீற வேண்டும். இது ஊரின் பொதுவெளியில் கோடு வெட்டி ஆதவன் பார்க்கப் பொங்கலிடுவதற்கு ஈடு. கீழத் தஞ்சையில் ஊர்ப்பொதுவில் அல்லாமல் அவரவர் வீட்டில்தான் பொங்கல் கூறுவார்கள்.

‘பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கல்கூற பானைகள் பொங்கி வரும். கிழக்காகவோ வடக்காகவோ வழிய வேண்டுமென்று கவலையோடு பார்த்துக்கொண்டு இருப்பார்கள். பானை மூடிகளின் தூரில், பொங்கிவரும் நுரை படியும். பொங்கலின் நுரைக் கறையைக் காணுமாறு இரண்டு மூடிகளும் சாமிக்கு முன்னால் கவிழ்த்திருக்கும்.

கிராம ஊழியம் பார்ப்பவர்களுக்கு வெற்றிலைப்பாக்கு, நெல், கரும்பு, பழம் பொங்கல் படியாகக் கொடுப்பார்கள். வீட்டுக்கு ஒரு தார் வாழைப்பழமாவது செலவாகும். பொங்கலுக்கு முன்பே பிறந்தகத்திலிருந்து அக்காள், தங்கை களுக்கு மஞ்சள் குங்குமத்தோடு ஆண்டு தவறாமல் வரிசை வரும்.

கள்ளிவட்டம்

மாட்டுப் பொங்கலன்று வீட்டு முற்றத்திலோ கொட்டிலிலோ கள்ளிவட்டம் போடுவது முதல் வேலை. சாணத்தால் சிறிய சதுரமாக வரப்புக் கட்டி நான்காகத் தடுத்திருக்கும். பிள்ளையார் பிடித்து வைத்துத் தடுத்திருப்பவற்றில் மஞ்சளைக் கரைத்து ஒன்றிலும், ஆரத்திக் கரைத்து ஒன்றிலும், கரியைக் கரைத்து ஒன்றிலும், பொங்கல் சாதத்தைக் கரைத்து ஒன்றிலுமாக நிரப்பியிருக்கும். வயலிலிருந்து தூரோடு கதிரும் கொண்டுவந்து வைப்பார்கள். வரப்பில் கண்பூளை, கள்ளி, அருகு நடுவார்கள். இப்படி வயலையே குறியீட்டு வடிவில் வீட்டுக்குள் கொண்டுவருவதுதான் கள்ளிவட்டம்.

அன்றைக்கு ஒரே பானை வைத்துப் பொங்கல். மொச்சையும், சர்க்கரைவள்ளிக் கிழங்கும் சேர்த்து மாட்டுக்குக் கறி சமைக்க வேண்டும். உலக்கையைப் போட்டு நீளமான கோடுகள் விழுமாறு அதன்மேல் செங்காமட்டியைத் தேய்த்துக் கொட்டி லிலும், வீட்டு வாசலிலும் கோலமிடுவார்கள். இணை கோடாகக் கரிப்பொடியாலும் கோலம் இழைப்பதுண்டு. மாலையில், மாடுகள் குளிப்பாட்டிக் கொட்டிலுக்குள் நுழையும்போது வாசலில் குறுக்காக உலக்கை போட்டிருக்கும். அருகிலேயே தீக்கொழுந்தாக வைக்கோலும் எரிந்து கொண்டிருக்கும். மாடுகள் இவற்றைத் தாண்டிக் கொட்டிலுக்குள் செல்லும்.

வயலுக்கும் அடுப்புக்கும் வழிபாடு

கள்ளிவட்டத்துக்கு, அடுப்புக்கு, சாமிக்கு என்று மூன்று படையல்கள் உண்டு. கள்ளிவட்டப் படையல் கிராமத்தில் வெட்டுமை பார்ப்பவருக்கு, அடுப்புக்குப் போட்டது மாட்டுக்கு. சூரியனையும் மாட்டையும் மட்டுமல்ல, பொங்கலில் வயலையும் அடுப்பையும் கும்பிடுகிறோம். கிரேக்க நாட்டில் வீட்டுக்கு மங்கலங்களைத் தரும் தெய்வமாகவே அடுப்பை ஆராதிப்பது புராண காலத்து வழக்கம்.

விரல் மொத்தத்தில் வேப்பங்குச்சிகளை ஒரு முனையில் கூராக்கித் தெருவாசல், கொல்லைவாசல் படிகளின் இருபுறமும், மாட்டுக்கொட்டில் வாசலின் இருபுறமும் ஒரு காப்பாக அடித்து வைப்பார்கள்.

வெள்ளாமை வீடுவருவதால் ஆரத்தி

மாடுகளைக் கிழக்குமுகமாக நிறுத்தி, தலையில் எண்ணெய் வைத்து, அரைத்த நெல்லிக்காய், பசுமஞ்சளைத் தேய்த்துவிடுவார்கள். சந்தனம், குங்குமம் இட்டு, மாங்கொத்து, வேப்பங்கொத்து, நெல்லிக்கொத்து, ஆவாரம்பூ இவற்றைப் பனை நாரால் தொடுத்திருக்கும் மாலைகளைக் கட்டி, சாதத்தோடு மாட்டுக்குச் செய்த கறியையும் ஊட்டி விடுவார்கள். தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டிக் காலில் விழுந்து சேவிப்பார்கள். பிறகு, மஞ்சள் நீரை மாடுகளின் மேல் தெளித்துக்கொண்டும், பொங்கல் கூறிக்கொண்டும், தப்பு அடித்துக்கொண்டும் மும்முறை வலம் வருவார்கள். கீழத் தஞ்சையில் மாடுகளை மந்தையில் அடைத்துப் பொங்கல் கூறுவதில்லை. அவரவர் வீட்டிலேயே கும்பிட்டுக்கொள்வார்கள்.

பிறகு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுத் திரும்பும் ஆண்களுக்கு வீட்டுப் பெண்கள் ஆரத்தி எடுத்து அழைத்துக்கொள்வார்கள். ஆடியில் துவங்கிய சாகுபடியை நிறைவாக முடித்து வீடு திரும்பும் வெற்றியின் அங்கீகாரமான ஆரத்தி இது. திருஷ்டி கழித்துக் கொட்டுவதோடு மாட்டுப் பொங்கல் நிறைவுறும். மறுநாள் நல்ல நேரம் பார்த்து மேய்ச்சலுக்கு மாடவிழ்ப்பார்கள்.

உடன்பிறந்தாருக்காகக் கணுப்பிடி

பல குடும்பங்களில் மாட்டுப் பொங்கலன்று கணுப்பிடி என்று ஒரு வழக்கமுண்டு. இது உடன்பிறந்தார்களின் நலனுக்காகச் சகோதரிகள் வேண்டிக்கொள்வது. பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கொத்து இலைகளை விரித்துப் படிய வைத்திருக்கும். அதன்மேல் மஞ்சள் சாதம், ஆரத்தி கலந்த சிவப்புச் சாதம், தயிர் சாதம் - வண்ணமயமாய் இவற்றைப் பிடிப்பிடியாகப் பிடித்து வைப்பார்கள். இதைக் கணுப்பிடி என்பார்கள். இப்படியே குளக்கரைக்குக் கொண்டுபோய், தேங்காய் பழத்தோடு கும்பிட்டுக் காக்காய், குருவிகள் சாப்பிட வைத்துவிடுவார்கள். பெரியவர்கள், வீட்டுப் பெண்களுக்குப் பசுமஞ்சளை முகத்தில் பூசி வாழ்த்துவதும் வழக்கம்.

நகரங்களில் கறவைகள் இருந்தபோது பால் கறந்துகொடுப்பவர்களுக்கு மாட்டுப் பொங்கலில் மரியாதை செய்வது வழக்கம். அவர்களை மேளதாளத்தோடு வீடுவீடாக ஊர்வலமாக அழைத்துவருவார்கள். அணைகயிறும், கறவைக் குவளையுமாக வேட்டி, துண்டு, பாக்குவெற்றிலை பெற்றுக்கொண்டு புது வேட்டிகளை மேலும்மேலும் தோளில் போட்டபடி அவர்கள் பெருமிதமாக நடந்து செல்வார்கள்.

திட்டாணிப் பொங்கல்

காணும்பொங்கல் எழுத்தறியாத வர்கள், அறிந்தவர்கள் எல்லோராலும் கன்னிப்பொங்கல் என்றே அழைக்கப் பட்டது. சிறுமிகள் அலங்கரித்துக்கொண்டு வீடுவீடாகச் சென்று கும்மியடித்து, கோலாட்டமாடி ஆசியோடு சன்மானமும் பெறுவார்கள். கிராமங்களில் அப்போது அரையாள் என்ற ஏற்பாடு இருந்தது. ஓர் ஆளின் வேலையில் பாதி அளவு செய்யக்கூடிய வளர்ந்த சிறுவர்களை மாடு பார்த்துக்கொள்ளவும், ஏர் பிடிக்கவும் வருட சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலும் தலித் சிறுவர்கள். அரையாட்கள் சேர்ந்து பல நாட்கள் மண்ணை வெட்டி ஏற்றி, ஆள் உயரத்துக்கு மேல், உச்சியில் சதுரமான பெரிய பரப்புடன் மேடை கட்டுவார்கள். மேலே செல்வதற்குப் படிகள் இருக்கும். இதற்குப் பெயர் திட்டாணி. சில கிராமங்களில் அருகருகே இரண்டு இருக்கும். கன்னிப்பொங்கலில் பெண்கள் இதை மெழுகி மாக்கோலமிட்டுப் புதுப் பானை அரிசியோடு வந்து பொங்கலிடு வார்கள். பிறகு, பானைகளைத் திட்டாணியின் மேலே கொண்டுபோய்ப் படையலிட்டு, ஊர்வலமாக வீட்டுக்கு எடுத்துப் போவார்கள். இது அரையாட்களின் பொங்கலாகவே இருந்து, பின்பு நின்று போன தொன்மையான பண்பாட்டு அற்புதம்.

தொடங்கிய ஒரு வாக்கியத்தை வளர்த்து முடிப்பது, ஒரு பாவுக்குப் பொருள் விரித்துத் தலைக்கட்டுவது, களம் இறங்கி மீண்டு வந்து வாகைப்பூ சூடுவது - இவை போன்றது பொங்கல். ஆடியில் வயலில் இறங்கி, இயற்கையோடு ஒரு இன்பச் சமர் புரிந்து, தை முதலில் வெள்ளாமையோடு வீடுவரும் இவர்களுக்கு ஆரத்தி எடுத்து அழைப்பதை வேறு எப்படிச் சொல்வது!

- தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x