Last Updated : 13 Jun, 2017 09:39 AM

 

Published : 13 Jun 2017 09:39 AM
Last Updated : 13 Jun 2017 09:39 AM

மோடியின் பொருளாதாரத் தோல்விகளை ஏன் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பேசுவதில்லை?

சத்தியமங்கலம் வனத்தில் பிரபுவைச் சந்தித்தேன். பள்ளி செல்லும் சிறுவன். ஒடிசலான உருவம். கருத்த தேகம். துடியாகப் பேசுபவன். பள்ளிக்கூடப் பாடங்களோ, வெளி விவகாரங்களோ அவனிடத்தில் பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கவில்லை. ஆனால், வனம் அவன் உடம்புக்குள் இறங்கியிருந்தது. புலிகளைப் பற்றி நிறைய சுவாரஸ்யமாகப் பேசினான். அவன் படிக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடம் அவனுடைய வீட்டிலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது. மலைப் பாதை. புலி நடமாட்டம் மிகுந்த பகுதி. புலி தண்ணீர் குடிக்க வந்து செல்லும் ஓடையைத் தாண்டிதான் அன்றாடம் அவன் பள்ளிக்கூடம் போக வேண்டும். “காட்டில் நடக்கும்போது புலி பயம் இருக்காதா?” என்று கேட்டேன். “காட்டில் எப்பவும் புலி உலாத்துதோ, உலாத்தலையோ; நெனப்பில் எப்பவும் புலி உலாத்தும்” என்றான். “பயந்து ஆவப்போவது என்ன? காட்டிலே புலி மட்டும் இல்ல. ஓநாய் இருக்கு. காட்டெருமை இருக்கு. கருநாகம் இருக்கு. புலி மட்டும் இல்ல; இதுகளும் மேல பாய்ஞ்சா ஆளைத் தூக்கிரும். புலி கண்ணுல நாம சிக்காம இருக்கணும்னா, புலியைத் தவிர காட்டுல தட்டுபடறதையெல்லாம் புலியாப் பார்த்துக் குழப்பிக்காம இருக்கணும்; புலியை மட்டும் நெனைச்சுக் கெடந்தா கண்ணு மறைச்சுடும். எதுவும் கண்ணில் படாது. மரம் செடி கொடியெல்லாம் புலியா தெரிஞ்சா பாம்பும் ஓநாயும் காட்டெருமையும் கண்ணுல படாது; கடைசில புலியே கண்ணு முன்ன வந்து நின்னாலும் அது புலியா தெரியாது!” என்றான். பிரமிக்க வைத்த விழிப்புநிலை அது. கண் மட்டும் கண் அல்ல என்பதை உணர்த்தியவன் அவன்!

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.120 விற்கிறது. அதன் வழக்கமான விலையைப் போல இது மூன்று மடங்கு. ஏன் இதுகுறித்து எந்த அரசியல் கட்சியும் பேச

வில்லை; ஊடகங்கள் எழுதவில்லை? மன்மோகன் சிங் ஆட்சிக் காலம் நெடுகிலும் விலைவாசி உயர்வில் தொடங்கி, பொருளாதார நெருக்கடிகள் வரை இடைவிடாது பேசிக்கொண்டிருந்த ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது அதுபற்றியெல்லாம் ஏன் வலுக்கப் பேசுவதில்லை அல்லது அவர்கள் பேசுவது ஏன் நம் காதுகளுக்கு வந்து விழவில்லை? மோடி அரசையும் பாஜகவையும் யாரும் விமர்சிக்காமல் இல்லை; ஆனால், எது தொடர்பில் அவர்கள் பெருமளவில் விமர்சிக்கப்படுகிறார்கள் - மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலா; அடையாள அரசியல் சர்ச்சைகள் தொடர்பிலா? இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் விவாதிக்க வேண்டும்!

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எப்படி மதிப்பிடுவது என்பதற்கு என்னுடைய தாத்தா ஒரு எளிய அளவீட்டு முறையைச் சொல்வார். “ஆட்சியாளர் பொறுப்பேற்ற காலகட்டத்தில் ஒரு ஏழையின் மாத வருமானம் - செலவினம்; நாம் கணக்கிடும் காலகட்டத்தில் ஒரு ஏழையின் மாத வருமானம் - செலவினம்… இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தைப் பார்! நாட்டின் பொருளாதாரம் உண்மையாகவே வளர்ந்திருக்கிறதா, தேய்ந்திருக்கிறதா என்பது புரியவரும்!”

அமைப்பின் பார்வையிலிருந்து ஒரு நாட்டின் வளர்ச்சியை அணுகுவற்கும் மக்களின் பார்வையிலிருந்து ஒரு நாட்டின் வளர்ச்சியை அணுகுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. நாட்டின் பொருளாதாரம் அச்சமூட்டும் பாதையில் செல்வதை இன்று இந்த இரு வழிப் பார்வைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

அரசின் எரிபொருள் கொள்கை என்ன?

விவசாயத்தோடும், விலைவாசியோடும் மிக நெருக்கமான தொடர்புடைய பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் தொடர்பில் மிக முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது மோடி அரசு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2013-2014 காலகட்டத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 112 டாலர்; பின்பு படிப்படியாகக் குறைந்து ஒருகட்டத்தில் 30 டாலர் வரை இறங்கி இன்று 45 டாலருக்கு விற்கிறது. ஆனால், மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தில் பெட்ரோல் - டீசலுக்கு என்ன விலையைக் கொடுத்தோமோ, அந்த விலையைக் காட்டிலும் அதிக விலையை மோடியின் ஆட்சிக் காலகட்டத்தில் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலை விற்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து அரசு வசூலித்த வரி 2013-14-ல் ரூ.88,000 கோடி. 2015-16-ல் ரூ.1.99 லட்சம் கோடி. பெட்ரோலியப் பொருட்கள் மூலம் வரி வருவாயை அரசு உயர்த்திக்கொள்வது தவறல்ல. ஆனால், கோடிக்கணக்கான மக்களை அன்றாடம் ஏற்றிச் செல்லும் அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்கள், ரயில்கள், விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய பல கோடி ரூபாய் ஆடம்பர கார்களுக்கும் ஒரே விலையில், ஒரே வரியில் டீசல் விற்பது அநீதியானது. பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும், தனியார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ‘புதிய போக்குவரத்துக் கொள்கை - புதிய எரிபொருள் கொள்கை வேண்டும்’ என்று வெகுநாட்களாகப் பேசிக்கொண்டிருந்தோம். இன்று பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை அன்றாடம் சந்தை நிலவரத்துக்கேற்ப நிர்ணயிக்கும் முடிவை எடுத்திருப்பதன் மூலம் வரி விதிப்புக்கு அப்பால், எண்ணெய் விநியோகத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது மோடி அரசு. இதுபற்றி ஏன் யாரும் பேசவே இல்லை?

விவசாயத்தின் வீழ்ச்சி ஏன் உலுக்கவில்லை?

நாட்டிலேயே அதிகமானோருக்கு வேலை அளிக்கும் களமான விவசாயத் துறையின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த மோடி அரசிடம் எந்த வியூகமும் இருப்பதாகத் தெரியவில்லை. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார் மோடி. விவசாயிகள் வருமானம் உயரவில்லை; மாறாக, செலவினம் இரட்டிப்பாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார நிபுணர்களின் வார்த்தைகளில் சொல்வது என்றால், இந்த மூன்றாண்டுகளில் 1.7% வளர்ச்சியையே வேளாண் துறை அடைந்திருக்கிறது. நாம் பெரிதும் ஆவேசப்பட்ட மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தின் கடைசி மூன்று ஆண்டுகளோடு ஒப்பிட்டால் அன்றைய 3.6% வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதி அளவு இது. எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் உற்பத்திசெய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதைக்கூட இந்த அரசாங்கத்தால் உறுதிசெய்ய முடியவில்லை. தங்கள் கோரிக்கைகளோடும் மாற்றுத் திட்டங்களோடும் ஆட்சியாளர்களை நோக்கிப் பேச வரும் விவசாயிகளிடம் பேசவும் இந்த அரசு தயாராக இல்லை. மாறாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் தொடங்கி இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கான தடை வரை மரபார்ந்த விவசாயத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே மோடி அரசு மும்முரமாக இருக்கிறது.

விவசாயத்தின் வீழ்ச்சி நாட்டின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலிருந்தும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இளைஞர்களை நகரங்களை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா,சென்னை என்று பெருநகரங்களின் ரயில் நிலையங்கள் மூச்சுத்திணறுகின்றன. கிராமங்களோ ஆளரவமற்ற பேய்களின் ஊர்கள் ஆகின்றன.

எங்கே முதலீடுகள்?

பயணங்களுக்கு மேல் பயணங்கள் என்று வெளிநாடுகள் சென்றாலும், மோடியால் பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகள் சூழலைக் கடுமையாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கண்ணில் தெரியும் வாய்ப்புகளையும் எப்படிக் கையாள்வது என்று மோடிக்குத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 130 நாடுகளை இணைத்து சீனா தொடங்கியிருக்கும் ‘ஒரே பாதை - ஒரே பிராந்தியம் திட்டம்’ ஒரு வரலாற்றுப் போக்கு. பூடான் நீங்கலாக இந்தியாவுக்கு அருகிலுள்ள எல்லா நாடுகளும் இணைந்துள்ள இத்திட்டத்தின் தொடக்க விழாவையே புறக்கணிப்பது என்று மோடி அரசு எடுத்த முடிவை சமீபத்திய உதாரணமாகச் சொல்லலாம். எந்த அமெரிக்காவுக்குச் சவாலாக வல்லரசுக் கனவோடு இத்திட்டத்தை சீனா முன்னெடுக்கிறதோ அந்த அமெரிக்காவேகூட தன்னுடைய உயர்நிலைக் குழுவைத் தொடக்க விழாவுக்கு அனுப்பியிருந்தது. எடுத்த எடுப்பில் இந்தியாவை அந்நியப்படுத்திக்கொண்டிருக்கும் மோடியின் முடிவைத் தொலைநோக்குள்ள எவரும் ராஜதந்திரம் என்று சொல்ல முடியாது.

எங்கே வேலைவாய்ப்புகள்?

வருஷத்துக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியால், பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புகளைக் கொண்டுவர முடியவில்லை; உள்நாட்டிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. தவிர, ஏற்கெனவே உருவாகிவந்த வேலைவாய்ப்புகளையும்கூட இந்த அரசால் தக்கவைக்க முடியவில்லை என்பதை அரசாங்கம் தரும் புள்ளிவிவரங்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அமைப்பு சார்ந்த துறைகளில் மட்டும் 9.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவான சூழல் போய் கடந்த நிதியாண்டில் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. முக்கியமாக, ஜவுளி, உலோகம்,தோல், விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைகள், தகவல்தொழில்நுட்பம், போக்குவரத்து, வாகனம் மற்றும் கைத்தறி ஆகிய எட்டு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்துள்ளது. 2015-ல் இத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 லட்சமாக ஆகியிருக்கிறது. தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் (ஜிடிபி) வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் இடையேயான இடைவெளி மிக மோசமான விளைவுகளுக்குக் கட்டியம் கூறுகிறது. திட்டவட்டமாக இந்தியா ஒரு பொருளாதார மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இப்படியே போனால், பெரும் பொருளாதார நெருக்கடியோடு, வேலையில்லாத் திண்டாட்டம் உருவாக்கும் சமூகச் சிக்கல்களையும் நாடு எதிர்கொள்ளும்.

ஏன் பேசவில்லை?

இவை எல்லாம் ஏன் பேசப்படுவதில்லை அல்லது இவை எல்லாம் மக்களிடத்தில் வலுவாகச் சென்றடையவில்லை என்றால், பாகிஸ்தானையோ, மாட்டையோ, ராமனையோ, யோகி ஆதித்யநாத்தையோ காட்டி இவை அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் கவனத்தை பாஜகவால் திசை திருப்ப முடிகிறது. பாகிஸ்தானையும் மாட்டையும் ராமனையும் யோகி ஆதித்யநாத்தையும் காட்டி மக்களின் கண்கள் - காதுகளை ஆக்கிரமிக்க முடிகிறது.

இது வெறும் கவனத் திசைத் திருப்பல் அல்ல; ஆடுகளத்தையே மாற்ற முற்படும் திசைத் திருப்பல்; எதிர்க்கட்சிகளின் அரசியல் பாதையையே மாற்ற முற்படும் திசைத் திருப்பல்; வாழ்வாதார அரசியல் பாதையிலிருந்து அடையாள அரசியல் பாதையை நோக்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பாதையையும் திருப்பிவிடும் திசைத் திருப்பல்! காட்டில் பயணிக்கையில் புலி கவனம் மட்டும் அல்ல; காட்டெருமை, ஓநாய், கருநாகம் எல்லாவற்றின் மீதும் கவனம் இருக்க வேண்டும். நாடு இன்று இந்த விழிப்புநிலையை இழந்துகொண்டிருக்கிறது!

(உணர்வோம்...)

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x