Published : 28 Jun 2017 09:11 AM
Last Updated : 28 Jun 2017 09:11 AM

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையில் இவ்வளவு அலட்சியம் ஏன்?

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தொடர்புடைய இரண்டு முக்கியமான சர்வதேச உடன்பாடுகளில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்புக்குரியது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பிறகுதான், முன்குறிப்பிட்ட இரண்டு சர்வதேச உடன்பாடுகளில் இந்தியா கையெழுத்திட்டிருப்பது, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது எல்லாம் கடுமையான விமர்சனத்துக்கு உரியவையே. எனினும், இப்போதாவது நிகழ்ந்ததே என்று ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம்.

ஒருவர் பணிபுரியத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது, அவர் பணிபுரியக் கூடாத ஆபத்தான தொழிலகங்கள் என்னென்ன என்பதைப் பற்றி சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் உடன்பாடுகள் அமைந்துள்ளன. முக்கியமாக, ஐநா அமைப்பின் 138 மற்றும் 182-வது உடன்படிக்கைகள், வெவ்வேறு வயதுகளில் உள்ள குழந்தைகள் எந்தத் தொழில்களைச் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பற்றி முடிவெடுக்கும் வாய்ப்பை உறுப்பினர் நாடுகளுக்கு வழங்கியுள்ளன. 2016 சட்டத் திருத்தமானது ஒருங்கிணைந்த வகையில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சில குறைகளையும் நெகிழ்வுத்தன்மையையும் கொண்டிருக்கிறது. எனினும், சர்வதேசத் தர நிலைகளைப் பின்பற்ற முடியாதபோது, இந்திய அரசு தனது முடிவுகளில் திருத்தம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை இத்தகைய நெகிழ்வுத் தன்மை வழங்கியது. இந்தச் சட்டம், குடும்பத் தொழில்கள் என்று கணக்கு காட்டப்படுபவை மற்றும் ஆபத்தான தொழில்கள் என்ற வகைப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டவற்றில் 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது பற்றிய சர்ச்சைக்குரிய பிரிவொன்றையும் கொண்டிருக்கிறது. 1986-ம் ஆண்டு சட்டத்தை இத்தகைய காரணங்களைக் காட்டி நீர்க்கச் செய்ததால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் இன்னும் அதிகமாகக்கூடும்.

சற்றேறக்குறைய 90% தொழிலாளர்கள், அமைப்பு சார்ந்த தொழில்துறையின் வரம்புக்கு வெளியில் இருக்கும் நிலைதான் இன்னும் தொடர்கிறது. இதன் காரணமாக, குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றுவது சிரமமாகிறது. சலுகைகளுடன் கூடிய 2016 சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின்படி, குழந்தைகள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, குடும்பத் தொழில்களில் 3 மணி நேரங்கள் மட்டுமே வேலை பார்க்கலாம். ஆனால், இரவு 7 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் அவர்கள் அத்தகைய வேலைகளைச் செய்ய அனுமதியில்லை. இத்தகைய நிபந்தனைகள் பள்ளிக்கூடங்களில் வருகைப் பதிவை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. எனினும், பாரம்பரியக் குடும்ப அமைப்புமுறையில் கண்காணிப்புச் செயல்பாடுகள் மிகவும் சிரமமே. இந்த அமைப்புமுறையில், விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்பதும்கூட சவாலாகவே இருக்கும்.

வயதுவந்தோருக்கான அடிப்படை ஊதியத்தில் நம்பிக்கையூட்டும் முன்னேற்றங்கள் ஏற்பட்டால்தான், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கூடவே, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் தரப்புகளும் இந்த மாற்றங்களுக்கு அவசியம். இவையெல்லாம் இல்லாமல், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது, சிரமமானதாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x