Published : 25 Nov 2014 08:58 AM
Last Updated : 25 Nov 2014 08:58 AM

ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?

ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பை அறுவடை செய்வாரா சிறிசேன?

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது.

இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 8 என்றும், வாக்கெடுப்பு 8 ஜனவரி 2015-ல் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆசிர்வாதத்துடன் அரசின் எதிரணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராகக் களமிறங்குகிறார். இதனை அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, 21 நவம்பர் அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

சரியும் சீட்டுக்கட்டு வீடு

மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்

சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்துகொண்டிருக்கிற பெருந்தலை களும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஅபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன.

ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத் தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்

போம் என்றும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே சவால் விடுத்திருந்தபோதும் அரசு பொருட்படுத்தியிருக்க வில்லை. ஆகவே, முன்னர் கூறிய விதமாக ஜாதிக ஹெல உறுமய அரசப் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாதிருந்ததுடன், அனுமானத்

துக்குக்கூட இடமளிக்காதிருந்தது. 1989-ல் பாராளு மன்றத்துக்குப் பிரவேசித்த மைத்திரிபால சிறிசேன 1994-ல் அமைச்சராகப் பதவிவகிக்கத் தொடங்கியதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் வலக்கரமாகவும் இருந்துவந்தவர். எனவேதான், சந்திரிகா பண்டார நாயக்க இவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் நியமித்திருந்தார்.

பொது அபேட்சகருக்கு ஆதரவு கிடைக்குமா?

இத்தகைய பின்னணிகளில் இடம்பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அரசியல் விமர்சனங்கள் பல தளங்களிலிருந்தும் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடு மளவு மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது தெளிவானது. ஆனால், பொது அபேட்சகர் என்கிற அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் கூட்டு ஒருங்கிணைப்பு பலம்பெற்றதாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளும் இணைந்துகொள்ளக்கூடும். சிங்களக் கடும் போக்குவாதிகளின் ஆதிக்கமிக்க இந்தக் கட்சிகள் பொது அபேட்சகருக்கு ஆதரவாக இணையும்போது இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்துக்கான முஸ்தீபு களாக இவை பார்க்கப்படுகின்றன. 20 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டாட்சி இத்தோடு முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்பதான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பாராமுகம் கொண்ட சிறிசேன

இலங்கை அரசியலில் என்றென்றைக்குமானதாக இருந்துகொண்டிருக்கும் இனப் பிரச்சினையை இந்த மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்பதற்கான எந்த உத்தரவாதமுமில்லை. மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத் தவரோ கிளர்ந்தெழுந்தவரோயில்லை. அநீதிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருட்படுத்தியவரும் இல்லை. ஆக, அரசிலிருந்து வெளியேறியவர் என்ற தகுதி கொண்டு சிறுபான்மை மக்களுக்கு விமோசனத் தைப் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை எந்த முடிவுகளையும் அறிவிக்கவில்லை. பொது அபேட்சகர்கள் தேர்தல் விஞ் ஞாபனங்களை (தேர்தல் அறிக்கை) வெளியிட்டதன் பின்னதாக, அதன் அடிப்படையிலேயே தமது ஆதரவைத் தெரிவிப்பதென்று இவ்விரு சிறுபான்மைக் கட்சிகளும் தீர்மானம் எடுத்திருக்கின்றன. இந்தக் கட்சிகளின் தீர்மானங்கள் நிர்மாண சக்திகளாக விளங்க இடமிருக்கிறது.

‘யுத்த வெற்றி; என்ற மாயை

ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு மேலும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு அறிவிப்பு செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் கணக்கு பிழைத்துவிடுமோ (பிழையாகிவிடுமோ) என்கிற பதற்ற நிலையையே அடைந்துள்ளார்.

2009-ல் புலிகளை இல்லாதொழித்துப் பெற்ற ‘யுத்த வெற்றி’யைத் தேர்தல் வெற்றியாகச் சந்தைப் படுத்தியே இரண்டாவது முறையாக இவர் ஜனாதிபதியாகி யிருந்தார்.

இன்னும் இரு ஆண்டுகளில் தமது பதவிக் காலம் முழுவதும் முடிவடைந்த பின்னர் இன்னொரு தேர்தலை எதிர்கொள்வதற்கு ‘யுத்த வெற்றி’யைச் சந்தைப்படுத்தும் தந்திரம் சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே எடுபடாதென்றும், அதற்குள்ளாக இந்த மாயை காலாவதியாகிவிடும் என்பதையும் அனு மானித்தே தேர்தலை அறிவித்தார்.

சட்டத் திருத்தம்

1978-ல் ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் பிரகடனம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் இருந்த ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையிய’லிலும், ‘ஒருவர் இரு முறைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்’ என்பதையும் ‘ஒருவர் எத்தனை முறையும் பதவி வகிக்கலாம்’ என்பதாக மாற்றியமைத்து

18-வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார் மகிந்த ராஜபக்ச. எனினும், திருத்தத்தை மொழிந்தவர் என்ற வகையில் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி அபேட்சகராகக் களமிறங்க முடியாதென்ற சட்டச் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து ஆலோசனை தரும்படியாக நீதித்துறையை மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதுக்கு அமைய அதி உயர்நீதிமன்றத்தில் கூடிய பத்து நீதிபதிகள் அடங்கிய குழு, மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராகக் களமிறங்க முடியும் என்பதாக ஒருமித்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதி (ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள்) மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியே ஆகும். இதே விதமான அரசியல் கூட்டுச் சித்தாந்தமொன்றைப் பிரதியீடு செய்கின்ற நடவடிக்கையினூடாகவே, மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பது போன்ற வியூகத்துடன் அட்டவணைப் படுத்தப்பட்ட நிரல்களாகவே அரசியல் நிகழ்ச்சிகள் யாவும் அமைந்துள்ளன. எதிர்க் கட்சி தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கின்ற கூட்டணியை இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது. இதற்கமைய, எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியையும், சிறு கட்சிகளையும் கொண்ட பலம் பொருந்திய கூட்டணியாக உருமாறிக்கொண்டிருக்கிறது.

சந்திரிகாவின் மறுபிரவேசம்

ஜனாதிபதிப் பதவியிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் தூக்கி வீசப்பட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைதியாகக் கழித்த அஞ்ஞாதவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார். தனது தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரா நாயக்க வினால் தோற்றுவிக்கப்பட்டு, பிரதமராக இருந்த தனது தாய் சிறிமாவோ பண்டார நாயக்கவினால் வளர்த்தெடுக்கப்பட்டு, தன்னை ஜனாதிபதியாக உயர்த்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒழித்துக்கட்டப் பட்டதால் அதற்குக் காரணமான துரோகிகளைக்களை யெடுக்கவும், பலிதீர்க்கவும் இப்படியொரு ஜனாதிபதித் தேர்தலுக்காகவே காத்திருந்தவர்போல உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார் சந்திரிகா பண்டார நாயக்க!

இந்தப் பின்னணியில் சந்திரிகா பண்டார நாயக் கவுக்கு இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து மீட்பதற்கான போராட்டம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்து வதற்கான போராட்டம்.

- ஸர்மிளா ஸெய்யித், ‘உம்மத்’ என்ற நாவலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: sharmilaseyyid@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x