Last Updated : 25 Nov, 2014 09:04 AM

 

Published : 25 Nov 2014 09:04 AM
Last Updated : 25 Nov 2014 09:04 AM

அஞ்சலி: செல்வா கனக நாயகம்

டொரண்டோ பல்கலைக் கழகத்தில், தெற்காசியவியல் ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பணிபுரிந்துவந்தவரும் தமிழியல் தொடர்பான ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவருமான பேராசிரியர் செல்வா கனக நாயகம் ஞாயிறு அன்று, தனது 62-வது வயதில் காலமானார்.

தமிழில் வெளியான பல்வேறு படைப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தவர் செல்வா கனக நாயகம். தமிழ் உரைநடை வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களை எழுதிய இலங்கைத் தமிழறிஞர் பேராசிரிய வி. செல்வநாயகத்தின் மகன் இவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பல தமிழ் மாணவர்களை உருவாக்கியவர் வி. செல்வநாயகம்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற செல்வா கனக நாயகம், டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். காமன்வெல்த் இலக்கியம் தொடர்பான ஆய்வில் நிபுணரான இவர், டொரண்டோ பல்கலைக்கழகத்தில், தமிழியல் தொடர்பான ஆய்வுகளுக்கு உரிய இடத்தைப் பெற்றுத்தந்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக, டொரண்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் ஆய்வுகள் தொடர்பான வருடாந்திரக் கருத்தரங்குகளை நடத்திவந்தார். தமிழ்க் கவிதைகளை, தனது நம்பகமான மொழிபெயர்ப்பின் மூலம் உலக அரங்குக்குக் கொண்டுசென்றதுடன், பல தமிழ் அரங்குகளிலும் பங்கேற்றுவந்தார்.

தமிழ் இலக்கியம், ஆய்வுகள் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு வழங்கப்படும் ‘இயல்’ விருதை வழங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தை நிறுவியவரும் செல்வ கனக நாயகம்தான். இந்த விருதை கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் – டொரண்டோ பல்கலைக்கழக தெற்காசிய மையமும் இணைந்து வழங்குகின்றன. சுந்தர ராமசாமி, ஏ.சீ. தாஸிசியஸ், வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ், எல்.ஹார்ட், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ். பொன்னுதுரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், டொமினிக் ஜீவா போன்றோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

‘பல்லவர் கால இலக்கியங்களின் வழி, அக்காலச் சமுதாயம் மற்றும் பண்பாட்டுக் கூறுகள்’ என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றை செல்வா கனக நாயகம் எழுதிவந்தார். ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் என்று பலதளங்களில் இயங்கியவர் அவர். அவரது புத்தகங்களில் சில: நெடுநல்வாடை (இலக்கிய வரலாறும் திறனாய்வும்), லுட்சாங் அண்டு லேமண்ட்: தமிழ் ரைட்டிங் ஃப்ரம் லங்கா (Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka), இன் அவர் டிரான்ஸ்லேட்டட் வேர்ல்டு (In Our Translated World), கவுன்ட்டர் ரியலிஸம் அண்டு இந்தோ ஆங்லிகன் ஃபிக்ஷன் (Counter realism and Indo Anglican Fiction), எ ஹிஸ்டரி ஆஃப் சவுத் ஏஷியன் ரைட்டிங் இன் இங்லீஷ்(A History of South Asian Writing in English), கான்பிகிரேஷன்ஸ் ஆஃப் எக்ஸைல்: சவுத் ஏஷியன் ரைட்டர்ஸ் அண்டு தேர் வேர்ல்டு (Configuration of Exile: South Asian Writers and Their World). ‘இன் அவர் ட்ரான்ஸ்லேட்டட் வேர்ல்டு’ புத்தகத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகளிலிருந்து வெளியான சுமார் 80 கவிதைகள் திரட்டப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

அவரது பங்களிப்புகளுக்காகக் கடந்த வாரம், ‘ராயல் சொசைட்டி ஆப் கனடா’ அவருக்கு ‘ஃபெல்லோ’ விருதை அறிவித்தது. சிறந்த கல்வியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் கனடா நாட்டின் அறிவுலகுக்கு அளித்துவரும் சிறந்த பங்களிப்புக்காக அந்நாட்டின் உயர் அறிவுப் பீடமான ‘ராயல் சொசைட்டி ஆஃப் கனடா’ வழங்கும் உயரிய விருது இது. இந்த விருது நிகழ்ச்சிக்காக மான்ட்ரியல் நகருக்குச் சென்றிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்.

“இயல்பாகப் பழகும் பண்பாளரான செல்வ கனக நாயகத்தின் மரணம் தமிழ் இலக்கிய ஆய்வுலகுக்குப் பேரிழப்பு” என்று வரலாற்று ஆய்வாளர் ஆ.ரா. வேங்கடாசலபதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x