Last Updated : 25 Feb, 2014 12:00 AM

 

Published : 25 Feb 2014 12:00 AM
Last Updated : 25 Feb 2014 12:00 AM

அது என்ன மேகக் கணினி?

ஆதியில் இனியாக் இருந்தது. 2,000 சதுர அடி இடத்தில் 18,000 மண்டை வால்வுகளை அடுக்கி, இணைத்து உருவாக்கிய கணிப்பொறி அது. 10 இலக்க எண்களை நினைவில் வைத்துக் கூட்டிக் கழித்து, அந்த முதன்மை (மெயின் ஃப்ரேம்) கணிப்பொறி 1940-களில் அமெரிக்க சர்க்கார் கணக்குகளைப் போட்டது.

“இனியாக் போல இன்னும் 10 முதன்மைக் கணிப்பொறிகள் போதும், உலகக் கணக்கு வழக்குகளை யெல்லாம் போட்டுவிடலாம்” என்ற அறிவியல் ஆரூடம் பொய்யானது 1980-களில். மேசைக் கணிப்பொறிகள் கோடிக் கணக்கில் பெருகி வீட்டு முன்னறை, பலசரக்குக் கடை, மருத்துவமனை, ரயில் நிலையம் என்று எங்கும் நிறைந்தன.

பேரேட்டிலிருந்து கணிப்பொறிக்கு…

எல்லாத் துறைகளையும்போல் வங்கித் துறையும் கம்ப்யூட்டர்களை இருகரம் நீட்டி வரவேற்க, வங்கிக் கிளையில் தூசி பரத்திய பேரேடுகள் காணாமல் போயின. சேமிப்புக் கணக்கு நடவடிக்கைகளுக்கு மென்பொருள் எழுதி இயக்க ஒரு கணிப்பொறி, வர்த்தகர்களின் நடப்புக் கணக்குக்கு இன்னொன்று, ஆறு மாதம், ஒரு வருடம் நிலையாகப் பணம் போட்டு வைக்கும் நிரந்தர வைப்புத்தொகைக்கு வேறு ஒன்று என்றானது.

ஒரு சிறிய சிக்கல். வங்கிக் கிளையில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும் இந்த கணிப்பொறிகள் ‘பேசிக் கொள்வது’ கிடையாது. 5,000 ரூபாய் சேமிப்புக் கணக் கில் இருந்து எடுத்து, நிரந்தர வைப்புத்தொகையில் போட வேண்டும் என்றால், இரண்டு கணிப்பொறிகளிலும் தனித்தனியாகத் தகவல் பதிந்து, நாள் முடிவில் மொத்தக் கணக்கு விவரத்தையும் பேரேட்டில் தனியாக எழுத வேண்டும்.

கிளையன்ட் சர்வர்

ஒரே வங்கிக் கிளைக்குள் வெவ்வேறு துறைகளுக்கு வைத்திருக்கும் கணிப்பொறிகள் தொடர்புகொண்டு, தகவல் பரிமாறிக்கொள்ள முடியுமா என்று 1990-ல் வெகுவான எதிர்பார்ப்பு எழுந்தபோது, தொழில்நுட்பம் ‘கிளையன்ட் சர்வர்’ அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியது. சற்றே பெரிய ஒரு கணிப்பொறியில் (சர்வர்) சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புத்தொகை, கடன் வழங்குதல் என்று எல்லா முக்கிய வேலைகளையும் செய்யும் மென்பொருள் இருக்க, கவுன்ட்டரில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கணிப்பொறிகள் குறைந்தபட்ச விவரங்களை மட்டும் பதிவுசெய்துகொண்டு, சர்வரோடு தொடர்புகொண்டு பற்றுவரவை வெற்றிகரமாக முடிக்கும்.

கிளயன்ட் சர்வர் கணிப்பொறி அமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அதற்கு முன் உபயோகத்தில் இருந்த கணிப் பொறிகளை மென்பொருளோடு அகற்றிவிட்டு, புது மென்பொருள், புத்தம்புது வன்பொருள் என்று வங்கிக் கிளைகள்தோறும் நிரப்ப வேண்டியதானது. செலவுக் கணக்கு என்பதால், வங்கியின் லாபத்திலும் பாதிப்பு.

வங்கி மையம்

21-ம் நூற்றாண்டில், வங்கித் துறை வளரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், கிளையன்ட் சர்வர் தொழில்நுட்பமும் விடைபெற, கிளைகளுக்கு இடையே தகவல்தொடர்பு கொண்டு பற்றுவரவு நடத்த வேண்டிய காலத்தின் கட்டாயம். வங்கி மையம் (கோர் பேங்கிங்) என்ற கோட்பாடு, இந்தச் சவாலைச் சமாளிக்க உதவிக்கரம் நீட்டியது. ஒரே வங்கியில், காரைக்குடி கிளையில் சேமிப்புக் கணக்கு இருந்தால், கொல்கத்தா பாலிகஞ்ச் கிளையில் கணக்குப் புத்தகத்தை நீட்டிப் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்பது வங்கி மையத்தின் எளிய விளக்கம். கொஞ்சம் இதையே நீட்டினால், தினசரி பற்றுவரவு முடித்ததும் கிளைகள் தனித்தனியாக மெனக்கெடாமல், ஒரே இடத்தில் அன்றைய கணக்கு வழக்கை முடித்து, அடுத்த நாள் கணக்கை ஆரம்பிக்க வசதி, பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏ.டி.எம்.), கைபேசி மூலமாகவும், வீட்டிலிருந்தே இணையம் மூலமும் கணக்கை இயக்க வசதி… இப்படிப் பலவற்றுக்கும் வங்கி மையம் வழிவகுத்தது.

வங்கி மையம் ஏற்படுத்த, பழைய கிளையன்ட் சர்வர் அமைப்பைக் களைந்துவிட்டு, கிளைகளிலும் நிர்வாக அலுவலகங்களிலும் புதிய கணிப்பொறிகள், புது மென்பொருள் தேவையிருந்ததால் வேறு வழியின்றி இந்தக் கொள்முதலுக்குச் செலவுசெய்ய வேண்டிவந்தது. இது ஒரே முறை செய்யப்படும் செலவு இல்லை. வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சக்தி வாய்ந்த கணிப்பொறிகள், வேகமான மென்பொருள் என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் தேவையானது. செய்யாவிட்டால், இன்னொரு வங்கி இதை நடத்திக் காட்டி வெற்றிக் கோட்டை நோக்கி முன்னால் ஓடிவிடும் அபாயம்.

“இனி புதுசு புதுசாகக் கணிப்பொறிகள், மென் பொருள்கள் வாங்கக் காசு செலவு செய்ய முடியாது. தேவைப்பட்டபோது தற்காலிகமாகக் கொஞ்சம் கூடுதல் கணிப்பொறி சேமிப்பிடம், ஒன்றுக்கு நாலாக அவதாரம் எடுத்து இயங்க மென்பொருள், எவ்வளவு பற்றுவரவு வந்தாலும் தாங்கும் தகவல் பரப்பு. இத்தனையும் வேண்டும். இயக்கத்துக்கான செலவு (ஆபரேட்டிவ் எக்ஸ்பென்ஸ்) மட்டும் தரத் தயார்.”

மேகப் புரட்சி

வங்கிகளின் இந்த வேண்டுகோளுக்குத் திரும்பவும் தொழில்நுட்பம் செவிசாய்த்தது. மேகக் கணினித்துவம் (கிளவுடு கம்ப்யூட்டிங்) மூலம் இன்னொரு தகவல் புரட்சி ஏற்பட்டது. மேகம் என்பது இணையத்தைக் குறிக்கும் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

மேகக் கணினித்துவக் கோட்பாட்டின்படி, கணிப் பொறியோ மென்பொருளோ வாங்க வங்கிகள் செலவு செய்ய வேண்டாம். கணிப்பொறி நிறுவனங்களே அவற்றை அமைத்துத்தரும். இந்த வன்பொருளும் மென்பொருளும் உலகில் எங்கெல்லாமோ இருப்பவை. இணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட வலைப் பின்னலில் இவை இணைந்திருக்கும். எளிய கணிப்பொறிகளை நிறுவி, இந்த மேகக்கணினிகளை இணையம் மூலம் பாதுகாப்பாகத் தொடர்புகொண்டு வங்கிக் கிளைகள் தினசரிச் செயல்பாட்டை வெற்றிகரமாக முடிக்கலாம். மேகம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டதோ அவ்வளவு கட்டணம் செலுத்தினால் போதும்.

மென்பொருளை, தகவல் தளத்தை (டேட்டாபேஸ்), இயங்கவும் தகவல் சேகரித்து வைக்கவுமான கணிப்பொறி வன்பொருளை, இயக்கு மென்பொருளை (ஆபரேடிவ் சிஸ்டம்) எல்லாம் கிரமமாகத் தனிமைப்படுத்தி, எதையும் சாராது விட்டு விலகியிருக்க வைத்து, (வர்ச்சுவலை சேஷன்) அவற்றை இணையத்தின் மூலம் இயக்கிப் பின்னப்படும் மாபெரும் தகவல் வலைதான் கிளையன்ட் கம்ப்யூட்டிங்.

“ஐயோ, என் தகவலை நெட்டுலே யாராவது சுட்டுட்டா?”

வங்கிகள் கவலையே படவேண்டாம். வளமையான பொதுவுடமை மேகம் (பப்ளிக் கிளவுடு) போக, பட்டா போட்ட தனியுடமை மேகம் (பிரைவேட் கிளவுடு), கலந்துகட்டியானது (ஹைபிரிட் கிளவுடு) எல்லாம் வந்துவிட்டன. என்ன, செலவு கொஞ்சம் அதிகம்.

மேகக் கணினித்துவத்தை அறிமுகப்படுத்திய கணிப்பொறி நிறுவனங்களின் கான்கிரீட் காட்டில் மேகம் திரண்டு மழை.

- இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: eramurukan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x