Published : 28 Nov 2013 08:29 AM
Last Updated : 28 Nov 2013 08:29 AM

இதுவா பாதுகாப்பு?

பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பை மாநகரில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26 முதல் 29 வரை நடத்திய கொலைவெறித் தாக்குதல்களை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்தத் தாக்குதல்களில் 164 பேர் உயிரிழந்தனர், 308 பேர் காயம் அடைந்தனர். உளவுப்பிரிவு (ஐ.பி.) உரிய வகையில் எச்சரிக்காததால்தான் காவல் துறையால் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இந்த ஆய்வுகளுக்குப் பிறகு, தவறுகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும், திருத்தியிருப்பார்கள் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால், உளவுப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி வி. பாலச்சந்திரன் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

ஐ.பி-க்கு அரசு அனுமதித்த ஊழியர்கள் எண்ணிக்கை 26,867, ஆனால் 18,795 பேர்தான் பணிபுரிகின்றனர். பற்றாக்குறை சுமார் 30% ஆகும். 2009-ல் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் 6,000 பேரைப் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். ஆனால், அதிகபட்சம் ஒரு சமயத்தில் 600 பேர் முதல் 700 பேர் வரைக்கும்தான் பயிற்சியளிக்க முடியும் என்பதால், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இப்போது பயிற்சிக்கான வசதிகளைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

‘ரா’ பிரிவில் சுமார் 5,000 பேர் பணிபுரிகின்றனர். நிர்வாக அதிகாரிகள் நிலையிலேயே சுமார் 130 காலி இடங்கள் இருக்கின்றன. சார்புச் செயலர், துணைச் செயலர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. சுமார் 40% பற்றாக்குறை நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றில் இந்தியத் தூதரகங்களில் ஐ.பி. அதிகாரிகளாகப் பணிபுரிய, அந்த நாடுகளின் மொழி, சுற்றுப்புறங்களை நன்கு அறிந்தவர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

பயங்கரவாதிகளும் இந்தியாவுக்கு எதிரான குழுக்களும் தங்களுடைய கையாள்களுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞைகளைப் புரிந்துகொண்டு, இந்திய அரசை எச்சரிக்கக்கூடிய சங்கேத மொழி நிபுணர்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

மும்பையைத் தாக்க வந்த பயங்கரவாதிகள் கடல் வழியாகத்தான் வந்தார்கள் என்பதால், இந்திய மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; மீன்பிடிப் படகுகளைக் கணக்கெடுக்க வேண்டும்; கடலில் அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கப்பட்டது. மாநில அரசுகள் கடலோர மாவட்டங்களில் இப்பணிக்கெனப் போதிய போலீஸ்காரர்களை நியமிப்பதில்லை. கடலுக்கு வரும் மீனவர்களிடம் அடையாள அட்டைகள் இருப்ப தில்லை. ஒரு படகுக்கான பதிவு ஆவணங்களையே நகலெடுத்துப் பல படகுகளில் பயன்படுத்துகிறார்கள். குறைந்த கூலிக்கு வருகிறார்கள் என்பதற்காக வங்கதேசிகளையும் நேபாளிகளையும் மீன்படகு உரிமையாளர்கள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் ஏதும் கிடையாது. இவர்களை வழிமறிக்கும் கடலோரக் காவல் துறைக்கு இவர்களைக் கைது செய்யும் அதிகாரம் கிடையாது. எனவே, மாநில போலீஸாரிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் பிடிபட்டவர்களைச் சம்பிரதாய விசாரணைக்குப் பின் விடுதலை செய்துவிடுகின்றனர். இதுதான் நமது கடல் பாதுகாப்பு நிலை.

மத்திய அரசு, மாநில அரசுகளின் உதவியோடு இந்தக் குறைகளை விரைவில் களைவது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது. இனியும் இதில் மெத்தனம் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x