Last Updated : 08 Nov, 2013 12:00 AM

 

Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM

எல்லாவற்றுக்கும் பின் காரணங்கள் உண்டு: ந.தெய்வ சுந்தரம்

ஒரு மொழியின் எழுத்துகள் - வரிவடிவம் - என்பது அம்மொழியில் பயன்படும் அனைத்துப் பேச்சொலிகளுக்கு மான (phones) குறியீடுகள் இல்லை. பொருள் வேறுபாட்டை உணர்த்தவே பேச்சொலிகள் பயன்படுத்தப்படு கின்றன. பேச்சொலிகள் தாமாகவே பொருளை வெளிப்படுத்துவதில்லை; வேறுபடுத்துவதில்லை. அவை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் அமைந்து - ஒலியன்களாக (Phoneme), அசை களாக (Syllable) - அமைந்துதான் பொருளை வெளிப்படுத்துகின்றன; வெளிப்படுத்த முடியும். அக்குறிப்பிட்ட கட்டமைப்பை வெளிப்படுத்துபவைதான் எழுத்துகள்.

கடல், தங்கம், பகல்

தமிழில் கடல், தங்கம், பகல் என்ற மூன்று சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் முதல் சொல்லில் உள்ள ‘க்’ இரண்டாவது சொல்லில் உள்ள ‘க்’ மூன்றாவது சொல்லில் உள்ள ‘க்’ ஆகிய மூன்றும் வெவ்வேறு பேச்சொலிகள். இவை மூன்றும் ஒரே இடத்தில் வராது (Complimentary distribution). ஆனால், இம்மூன்றுக்கும் ஒரே எழுத்துதான். ஆனால், இந்தியில் இவற்றுக்கு வெவ்வேறு எழுத்துகள். இதற்குக் காரணம், தமிழில் இந்த மூன்று பேச்சொலிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் - மாற்றொலிகள் (Allophones). ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. வந்து பொருள் வேறுபாட்டைத் தராது. ஆனால், இந்தியில் இந்த மூன்றும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரே இடத்தில் வந்து, பொருள் வேறு பாட்டைத் தரும். அதாவது, தனித்தனி ஒலியன்கள். எனவேதான் இந்தியில் அவற்றுக்குத் தனித்தனி எழுத்துகள். தமிழில் அவற்றுக்கு ஒரே எழுத்து.

தமிழில் ஒவ்வோர் ஒலியனுக்கும் - 12 உயிர், 18 மெய் - எழுத்துகள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்த கட்டமாக, ஒலியன்கள் அசைகளாக அமைகின்றன. ஒரு சொல்லை உச்சரிக்கும்போது எத்தனை தடவை வாய் திறக்கப்பட்டு, காற்றுக்கொத்து வெளிவருகிறதோ, அத்தனை அசைகள் அச்சொல்லில் உண்டு.

காற்றுக்கொத்து வெளிவரும்போது, உயிர் ஒலி பிறக்கும். அதற்குத் துணை யாக முன்னும் பின்னும் மெய் ஒலிகள் அமையலாம். மெய் ஒலியைத் தனியாகப் பிறப்பிக்க முடியாது. ஆனால், உயிர் ஒலியைத் தனியாகப் பிறப்பிக்க முடியும்.

அசை

தமிழில் அசையின் உச்சிகளுக்குத் (உயிர்களுக்கு) தனி எழுத்துகள். அசை யின் ஒடுக்கத்துக்கு (மெய்களுக்கு) தனி எழுத்துகள். இதுபோக, தொடக்கம், உச்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொகுதிகளுக்கும் (உயிர்மெய்கள்) எழுத்துகள். உயிர்மெய் எழுத்துகளை அசை எழுத்துகள் (syllabic scripts) என்று அழைக்கலாம். தனித்தோ அல்லது மெய்யோடு இணைந்தோ காற்றுக்கொத்து வெளி யிடப்படும்போது, அதற்கென்று எழுத்து வடிவம் அமைந்துள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும். அசையின் தொடக்கம், உச்சி, ஒடுக்கம் ஆகியவை தனித்தனி ஒலியன்களாகும். தொடக்கமும் உச்சியும் இணைந்தது அசையாகும்.

அசையானது, ஒடுக்கம் இல்லாமலும் (மெய்) முடியலாம். ஒடுக்கத்தோடும் (மெய்) முடியலாம். எனவே, தமிழின் எழுத்துவடிவங்கள் ஒலியன், அசை என்ற அமைப்புகளை - கட்டுக்கோப்புகளை - வெளிப்படுத்தும் ஒரு குறியீடு. பொருளற்ற குறியீடு அல்ல.

மேலும், தமிழில் எழுத்து வடிவத்துக்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்க முடியும். ஆங்கில எழுத்து முறை வேறு. எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு எழுது வதை அப்படியே உச்சரிக்க முடியாது. உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெளிவான அமைப்பு அடிப்படை தமிழுக்கு இருக்கும்போது, ரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும் என்று சொல்வது, உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பதுபோல் ஆகும்.

- ந.தெய்வ சுந்தரம், மொழியியலாளர். தொடர்புக்கு: ndsundaram@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x