Published : 23 Jan 2017 10:00 AM
Last Updated : 23 Jan 2017 10:00 AM

இப்படிக்கு இவர்கள்: தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறோம்!

ஜல்லிக்கட்டு விவகாரம் சட்டரீதியாக, காலத்தில் செய்திருக்க வேண்டிய, சமூக - சட்ட நடவடிக்கைகளைத் தவறவிட்டதன் காரணமாக, சுமுகத் தீர்வுக்கான கட்டத்தைக் கடந்து, ‘தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்’ கதையாக இருக்கிறது. இந்தப் பாரம்பரிய விளையாட்டு பல இடங்களில் கட்டுப்பாடின்றி நடந்ததாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகளாலும் நீதிமன்றப் படியேறிய வழக்காகிப்போனது. ஆண்டுதோறும் தொடரும் வன்முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உதாசீனம் செய்த, கடந்த கால அரசியல் - சமூகப்போக்கும், சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் சான்றாண்மையின் சுவடேயற்ற அடிமட்டப் பண்பாட்டு அமைப்பும் இந்த அவல நிலைக்குப் பொறுப்பெனச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இன்றைய பன்முக நோக்குப் போராட்டக் கட்டத்தில் காளை ஒரு சமூக ஊக்க முனைப்பின் படிமம் என்றே சொல்லலாம்.

- வீ.விஜயராகவன், சென்னை.



வலுவான அடித்தளம்

ஜல்லிக்கட்டுப் பிரச்சினை மாணவர்கள், இளைஞர்கள் ஏற்படுத்திய எழுச்சியோடு அனைத்துத் தரப்பினரின் மனதிலும் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. தமிழரின் உரிமைப் போராட்டம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதால், பல்வேறு தரப்பிலும் தானாகச் சென்று அதில் பங்கேற்றார்கள். தமிழகத்தில் இருந்துவரும் சாதிய வேறுபாடுகளுக்கும் இந்த அறப் போராட்டம் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. எதிர்காலத்தில் தமிழகத்தின் மற்றைய பிரச்சினைகளுக்கும் இது ஒரு அடித்தளமாகிவிட்டது எனலாம்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.



சிற்றூர்களிலும் புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி 2017 ன் வெற்றி. மக்களின் வாசிப்பு ஆர்வம் குறையாததையே இது காட்டுகிறது. மேலும், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய படைப்புகளுக்கு இணையாக, காலத்தால் அழிக்க முடியாத நூல்களும் விற்பனை செய்யப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. சென்னைக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன், இத்தகைய புத்தகக் காட்சிகளை சிற்றூர்கள் வரை தொடரச் செய்தால் கிராமப்புற வாசகர்களும் பயன்பெறுவர்.

- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.



தேர்வு தள்ளிவைப்பு

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்று வருவதால், மருத்துவர் பணிக்கான எழுத்துத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற மருத்துவர் ராமதாஸின் கோரிக்கை (ஜன.22) நியாயமானதே. போக்குவரத்துகள் சரிவர இல்லாததாலும், மதுரை உள்ளிட்ட ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்பாததாலும் அரசுப் பணிக்கான தேர்வைத் தள்ளிவைப்பதே நலம்.

- பரிமளம், புதுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x