Published : 16 Aug 2016 08:29 AM
Last Updated : 16 Aug 2016 08:29 AM

விண்வெளி துறையில் அவமானப்பட்டு நிற்கும் இந்தியா!- ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஊழலில் உண்மைகளை உடைக்கும் அதிகாரி

நவீன இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாகப் பேசப்படுவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆனால், அதைவிட பெரிதாக வெடித்திருக்கிறது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸின் ரூ.2.32 லட்சம் கோடி ஊழல். வழக்கின் முக்கிய திருப்பமாக, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கடந்த 11-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா இடையிலான ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகராக இருந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ். ஆன்ட்ரிக்ஸ் தேவாஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து..

நஷ்டம் தரும் ஒப்பந்தம்

ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தில் என்னதான் பிரச்சினை?

இஸ்ரோவில் வணிக நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தொலைக்காட்சி, அலைபேசி நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் செயற்கைக் கோள்களைத் தயாரித்துக்கொடுக்கிறது. ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தமே ஏமாற்று வேலை. விண்வெளி துறையில் நான் பணியமர்த்தப்பட்டதும், 2009 அக்டோபரில் என்னைச் சந்தித்த விஞ்ஞானி ஒருவர், ‘இந்த ஒப்பந்தத்தால் நமக்கு லாபமே இல்லை. நஷ்டம்தான் ஏற்படும்’ என்றார். அதற்கு நான், ‘இதை விஜிலன்ஸ் அதிகாரியிடம் சொல்லுங்கள். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னிடம் வாருங்கள்’ என்றேன். இணைச் செயலராகவும் விஜிலன்ஸ் அதிகாரியாகவும் இருந்தவரிடம் இந்த விவரங்களை அவர் கொடுத்தார். விசாரணை தொடங்கியது.

அந்த நேரத்தில் பி.என்.சுரேஷ் என்ற விஞ்ஞானி தலைமையில் ஒரு குழுவை அப்போதைய இஸ்ரோ மற்றும் ஆன்ட்ரிக்ஸ் தலைவரான ராதாகிருஷ்ணன் நியமித்தார். தேவாஸ் ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்பம், வணிகம், சட்ட ரீதியான விஷயங்களை ஆராய்ந்து அறிக்கை தருமாறு அந்த குழுவுக்கு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

விஜிலன்ஸ் விசாரணை முடக்கம்

சுரேஷ் ஒரு விஞ்ஞானி. வணிகமும், சட்டமும் அவருக்கு சம்பந்தம் இல்லாதது. அவர் எப்படி முழுமையான அறிக்கை கொடுப்பார் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. சுரேஷ் குழுவின் விசாரணை நடந்ததால் விஜிலன்ஸ் விசாரணையை முடக்கிவிட்டார்கள். 2010 ஜூன் மாதம் சுரேஷ் குழுவின் அறிக்கையை என்னிடம் கொடுத்த ராதாகிருஷ்ணன், ‘இதில் உள்ள விஷயங்களை ஆராய்ந்து சொல்லுங்கள்’ என்றார்.

நானும் ஆராய்ந்துவிட்டு, ‘இதற்கு முன்பு இன்டல்செட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அதில் நம் நாட்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள் தெளிவாக இருந்தன. இஸ்ரோவின் அனுமதி இல்லாமல் இன்டல்செட் யாரையும் பங்குதாரராக சேர்க்க முடியாது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடக்கும். ஆனால், தேவாஸ் ஒப்பந்தத்தில் இந்த 2 அம்சங்களும் இல்லை. அதைவிட ஆபத்தானது என்னவென்றால், இஸ்ரோவின் அனுமதி இல்லாமல் யாரை வேண்டுமானாலும் - பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பைக்கூட பங்குதாரர்களாக அவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். இதை ஆன்ட்ரிக்ஸ் கேள்வி கேட்க முடியாது என்றெல்லாம் குறிப்பிட்டேன். தவிர, செயற்கைக் கோளில் உள்ள 90 சதவீத ‘எஸ் பாண்டு’ ஸ்பெக்ட்ரம்கள் தேவாஸுக்கு சொந்தமாகும். 10 சதவீதம்தான் ஆன்ட்ரிக்ஸுக்கு கிடைக்கும்.

2ஜியைவிட சிறந்த ‘எஸ் பேண்ட்’

‘எஸ் பேண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விட சிறப்பானவை. இஸ்ரோவிடம் இருந்து ஆன்ட்ரிக்ஸ் மூலம் 2 செயற்கைக் கோள்களைப் பெறுவதற்காக தேவாஸ் நமக்கு பல தவணைகளில் ரூ.1,100 கோடி தரும். ஆனால், செயற்கைக் கோள்களை தயாரிக்கவே நமக்கு ரூ.900 கோடி செலவாகும். மீதி ரூ.200 கோடி என்பது சொற்பமான தொகை. எனவே, இதில் லாபமே இருக்காது. சமூகசேவை என்றால் லாபம் பார்க்கத் தேவையில்லை. தனியாருக்கு கொடுக்கும்போது லாபம் முக்கியம். இதையெல்லாம் என் அறிக்கையில் குறிப்பிட்டேன்.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில் உங்கள் பங்கு என்ன?

தேவாஸுக்கு ஆதரவாக இஸ்ரோ அதிகாரிகள் பலர் செயல்பட்டது தெரியவந்தது. எனவே, இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்களையும் விண்வெளித்துறை ஆணையத்துக்கு தெரிவித்து அவர்களது உத்தரவைப் பெற முடிவு செய்யப்பட்டது. அந்த ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட குறிப்பேட்டில் ஆன்ட்ரிக்ஸின் ஓர் அதிகாரியும் இஸ்ரோவின் ஓர் அதிகாரியும் நடத்திய குளறுபடிகளைப் பற்றிய ஆவணச் சான்றுகளை இணைத்திருந்தேன். தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 2010 ஜூலை மாதம் ஆணையம் முடிவெடுத்தது. ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான சட்ட வழிமுறைகளை சட்ட அமைச்சகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும்படி விண்வெளித் துறைக்கு ஆணையம் அறிவுறுத்தியது.

அதேசமயம் சட்ட அமைச்சகத்தில் இருந்து, ‘போர்ஸ் மெஜூர்’ (force mejure) படி ரத்து செய்யுங்கள்’ என்று பதில் வந்தது. ‘போர்ஸ் மெஜூர்’ என்றால் ‘கடவுளின் கை’ என்று அர்த்தம். இதன்படி, முதலீடாக இருவர் பணம் போட்டாலும் தொழிலில் சேதாரம் ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் பணம் திருப்பித்தர தேவையில்லை. இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த ஒப்பந்தத்திலும் இந்த வார்த்தையைப் போடுவார்கள். மேலும், சட்ட அமைச்சரின் ஆலோசகராக இருந்த டி.கே.விஸ்வநாதன், (தற்போது குடியரசுத் தலைவரின் சட்ட ஆலோசகர்) ‘நாம் ரத்து செய்தாலும் அவர்கள் தீர்ப்பாயம் போக வாய்ப்புள்ளது. எனவே அதற்கும் ஆயத்தமாக இருங்கள்’ என்று அறிவுறுத்தினார். அப்போது அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரான மோகன் பராசரன், ‘இதை மத்திய அமைச்சரவை முடிவுக்கு அனுப்புங்கள்’ என்றார். அதன்படி மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்கும் குழுவுக்கு (Cabinet Committee on Security) குறிப்பு அனுப்பி அவர்களது உத்தரவைப் பெற வேண்டும் என்கிற இறுதி வரைவுக் குறிப்பை 2010 அக்டோபர் 9-ம் தேதி ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பினேன்.

அம்பலப்படுத்திய ‘தி இந்து’

ஆனாலும், அந்த குழுவுக்கு அவர் அதை அனுப்பவில்லை. தொடர்ந்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், ‘ஃப்ரன்ட்லைன்’ ஆகியவை இதை அம்பலப்படுத்தின. இதன் பின்னரே ராதாகிருஷ்ணன் அதை அனுப்பினார். அதன் பிறகு, இன்னொரு குளறுபடியும் தெரியவந்தது.

என்ன குளறுபடி அது?

2010 டிசம்பர் 1-ம் தேதி என்னைச் சந்தித்த ஒரு மூத்த விஞ்ஞானி, ‘ஒப்பந்தத்தில் தேவாஸ் நிறுவனம் எஸ்டிஎம்பி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்போவதாக சொல்லியிருந்தனர். ஆனால், அந்த தொழில்நுட்பம் மீது அவர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை கிடையாது’ என்றார். அதிர்ச்சியடைந்த நான் அடுத்த நாளே இதை ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டுசென்றேன். ‘மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்கும் குழுவுக்கு நாம் அனுப்பும் குறிப்பில் இந்த தகவலும் சேர்க்கப்பட வேண்டும்’ என்றேன்.

ஏனெனில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்த ஒரு காரணமே போதும். மேலும் சுரேஷ் குழு அறிக்கையின் மீதும் அதன் பின்விளைவுகள் பற்றியும் நான் 2011 ஜனவரி 9-ம் தேதி ராதாகிருஷ்ணனுக்கு அளித்த அறிக்கையில் 3 இடங்களில் இத்தகவலை எழுதியிருந்தேன்.

இல்லாத அறிவுசார் சொத்துரிமையை இருப்பதுபோல் காட்டிக் கொள்வது மிகப் பெரிய குற்றம். அதன் அடிப்படையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், தேவாஸ் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்துக்கு போகமுடியாது.

மறைத்த ராதாகிருஷ்ணன்

ஆனால், அமைச்சரவைக் குறிப்பில் ராதாகிருஷ்ணன் இதை மறைத்துவிட்டார். அந்த அடிப்படையில் முடிவு எடுத்திருந்தால் முதல் தீர்ப்பாயத்திலும் நமக்கு எதிரான தீர்ப்பு (சுமார் ரூ. 4,000 கோடி இழப்பீடு) வந்திருக்காது. இப்போது தீர்ப்பாயத்தில் அதிகபட்சமாக ரூ.6,500 கோடி அபராதத்துக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. இஸ்ரோவும் இந்திய அரசும் அசிங்கப்பட்டிருக்க வேண்டியதில்லை.

இஸ்ரோ அதிகாரிகளுக்கு தேவாஸ் மீது ஏன் இவ்வளவு அக்கறை?

தேவாஸ் நிறுவனத்தை நடத்துபவர் சந்திரசேகர். இவர் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி. முதலில் ‘போர்ஜ்’ என்ற ஓர் அமெரிக்க நிறுவனம் இவர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு மொரீஷியஸில் ஒரு நிறுவனம் தொடங்கினர். ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் போட்டதும் ‘டாய்ஷ் டெலிகாம்’ என்ற ஜெர்மனி நிறுவனம் பங்குதாரராக வந்தது. இவர்களுக்குப் பின்னால் அந்த அமெரிக்க நிறுவனம் இருந்தது. டாய்ஷ் டெலிகாம் நிறுவனம் பங்குதாரராக வர முன்வந்தபோது தேவாஸின் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் பல ஆயிரம் மதிப்புக்கு அந்த நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அதாவது எந்த வணிக செயல்பாடும் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேவாஸ் பல நூறு கோடி ரூபாய்களை இதன்மூலம் அள்ளியது.

தேவாஸ் கம்பெனி, சிக்கல் இல்லாத தகவல் தொடர்புக்காக எஸ்டிஎம்பி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்றார்கள். சில பகுதிகளில் தொலைக்காட்சி, அலைபேசி அலைவரிசை சரியாகக் கிடைக்காது. அந்த வசதியை இவர்கள் கொடுக்கலாம். அப்போது அலைபேசி நிறுவனங்களும் தேவாஸையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். மிகப் பெரிய லாபமும் கிடைத்திருக்கும். அதேசமயம் தகவல் தொடர்புக்காகக் கொண்டுவரப்படும் செயற்கைக் கோளை, உளவு செயற்கைக் கோளாக மாற்றுவதும் மிகவும் எளிதானது. இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருந்திருக்கும். இவை அனைத்தும் அந்த ஒப்பந்தம் ரத்தானதால் தடுக்கப்பட்டன.

இருக்கும்போது பேசாமல் இருந்துவிட்டு, ஓய்வு பெற்ற பிறகு பேசுவது பலரது வழக்கமாக இருக்கிறது. நீங்கள்?

ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். பணியில் இருக்கும்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் மிக மிக ரகசியம். நான் அதை வெளியிட்டால் ரகசிய காப்புச் சட்டத்தை மீறியதாகும். ஒப்பந்தம் ரத்தானதற்குப் பிறகு தகவல் உரிமைச் சட்டத்தில் சிலர் விண்ணப்பித்து எனது அறிக்கையை இஸ்ரோவிடம் கேட்டார்கள். ‘தேசப் பாதுகாப்பு தொடர்பானது. தர முடியாது’ என இஸ்ரோ மறுத்துவிட்டது. ஆனால், தேவாஸ் நிறுவனம் கேட்டபோது, இஸ்ரோ எனது அறிக்கையை முழுவதுமாக கொடுத்துவிட்டது. என் அறிக்கை பொதுவெளிக்கு வந்துவிட்டதால் அது பொதுச் சொத்தாகிவிட்டது. அதனால் இப்போது பேசுகிறேன்.

சிபிஐ விசாரணை எப்படி தொடங்கியது?

மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக, சதுர்வேதி கமிட்டியை நியமித்தது. அந்த கமிட்டியில் என் அறிக்கை வைக்கப்படவில்லை. 2-வது கமிட்டியில், ‘மாதவன் நாயரில் தொடங்கி 4 விஞ்ஞானிகள் அரசு சேவையில் தொடரக் கூடாது’ எனக் குறிப்பிட்டனர். இதன்பிறகுதான் சிபிஐ வழக்கு பதிவு செய்து, விசாரிக்க ஆரம்பித்தது. ஒப்பந்தத்தால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை நிறுத்திவிட்டோம். ஆனால், அந்த ஒப்பந்தத்தை சரியான முறையில் ரத்து செய்யும் செயலை ராதாகிருஷ்ணன் செய்யவில்லை. நான் கொடுத்த குறிப்பை, மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் குழுவுக்குக் கொண்டுபோகாமல் அவர் மறைத்துவிட்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் - ஆன்ட்ரிக்ஸ் இரு ஊழல்களில் என்ன வேறுபாடு?

2ஜி-யில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததால் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும்கூட மத்திய அமைச்சரவை முடிவு. ஆனால், தேவாஸ் நிறுவனத்துக்கு எந்த நடைமுறையும் இல்லாமல் வாரிக் கொடுக்க முன்வந்தார்கள். இஸ்ரோவின் 99 சதவீத விஞ்ஞானிகள் நாட்டுக்காகக் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால், 1 சதவீதம் பேர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். 2005-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆனால், அதன் மதிப்பை இன்றைக்குப் பேசுகிறோம்.

நாம் மிகப் பெரிய வல்லரசு நாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விண்வெளித் துறையைப் பொறுத்தவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய யூனியன், இந்தியா என 6 வல்லரசுகளில் நாமும் ஒன்று. இந்த நாடுகளுக்குதான் ஸ்பெக்ட்ரமின் உண்மையான மதிப்பு தெரியும். அப்படி தெரிந்தும் நமது அதிகாரிகள் சிலர் தனியாருக்குச் சாதகமாக செயல்பட்டது தேசத் துரோகம். அந்த அதிகாரிகள் யார் என்பதையும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நான் குறிப்பிட்டதை எல்லாம் குறிப்பில் இருந்து மறைத்துவிட்டனர்.

நியாயமாக என்ன மாதிரி நடவடிக்கையை எதிர்பார்க்கிறீர்கள்?

ராதாகிருஷ்ணனிடம் சிபிஐ ஏற்கெனவே இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தியது. ஒப்பந்தம் கையெழுத்தானபோது மாதவன்நாயர் தலைவராக இருந்ததால் அவரையும் வழக்கில் சேர்த்து, இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், ஒப்பந்தத்தை முன்னெடுத்ததுடன், எனது எச்சரிக்கைக் குறிப்புகளை திட்டமிட்டு மறைத்தவர் ராதாகிருஷ்ணன். குறிப்பாக தேவாஸ் நிறுவனத்துக்கு எஸ்டிஎம்பி தொழில்நுட்பத்தின் மீது அறிவுசார் சொத்துரிமை இல்லை என்ற தகவலை உறுதிசெய்ய இஸ்ரோ தலைவர் என்ற முறையில் அவருக்கு அதிகபட்சம் 7 நாட்கள் போதும். விண்வெளித் துறையில் இருக்கும் மற்ற 5 நாடுகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இது எதையும் அவர் செய்யவில்லை. நான் சொல்லும் விவரங்கள் அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டவை. நான் அனுப்பிய குறிப்பை மத்திய அரசுக்கு சொல்லாமல் ராதாகிருஷ்ணன் மறைத்ததும், அதன் காரணமாக இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேர்வதும் உண்மையாக இருக்கும்போது, இன்று வரை ராதாகிருஷ்ணனை வழக்கில் சேர்க்காமலும், துறைரீதியாகக்கூட அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் ஏன்? இந்த மர்மத்தை மத்திய அரசும் சிபிஐயும்தான் விளக்க வேண்டும்.

இந்த வழக்கை சரியாக கொண்டுசென்றால்தான் சர்வதேச தீர்ப்பாயம் விதித்த சுமார் ரூ.6,500 கோடி இழப்பீடு அளிப்பதை தவிர்க்க முடியும். பணத்தை கட்டிவிட்டோம் என்றால், இஸ்ரோவுக்கும், இந்தியாவுக்கும் அதைவிட பெரிய அசிங்கம் வேறு இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x