Last Updated : 09 Mar, 2017 08:43 AM

 

Published : 09 Mar 2017 08:43 AM
Last Updated : 09 Mar 2017 08:43 AM

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியமே!

சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும், அவற்றை அகற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், சில பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டன. நீதியரசர்கள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர், முதலில் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். பிறகு, 32 மாவட்டங்களிலும் அகற்ற உத்தரவிடப்பட்டது.

இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 5 வழக்கறிஞர்கள் வீதம் மொத்தம் 160 பேர் நீதிமன்ற ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் நானும் ஒருவன். மாவட்ட ஆட்சியர்கள் முதல் பொதுப்பணித் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இந்த அறுவை சிகிச்சையில் நீதிமன்றத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். பட்டா நிலங்களில் கருவேல மரங்கள் அகற்றப்படாவிட்டால், அதிலுள்ள மரங்களை அரசே அகற்றி அதற்கான தொகையை இருமடங்காக நில உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளையர்கள் போட்ட விதை

சீமைக்கருவேலத்தின் அறிவியல் பெயர் புரோசோபிஸ் ஜுலிபுளோரா. இதன் தாயகம் தென் அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பெரு, சிலி போன்றவை. சீமைக்கருவேலம், வேலிக்காத்தான், வேலிக்கருவை, உடைமரம் என அழைக்கப்படும் இந்த மரத்தின் விதைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் விமானம் மூலம் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது என்று கூறப்பட்டாலும், 1876-ம் ஆண்டே வெள்ளையர்களால் இவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. முதன்முதலில் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் கடப்பாவிலுள்ள கமலாபுரத்தில்தான் இவை விதைக்கப்பட்டன என்கின்றன அரசு ஆவணங்கள்.

தங்களது தனிப்பட்ட தேவைக்காகவும், தொடர்வண்டி தடங்களுக்காகவும், கப்பல் கட்டுவதற்காகவும் சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற மரங்களை கணக்கில்லாமல் அழித்தார்கள் ஆங்கிலேயர்கள். அதனை ஈடுகட்டுவதற்காக மண் அரிப்பைத் தடுத்தல், தரிசு நில மேம்பாடு, விறகு தட்டுப்பாட்டினைச் சமாளித்தல் போன்ற காரணங்களைக் கூறி, இம்மரங்களை நாட்டில் பரப்பினார்கள் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர் புதுவை அருண்குமார் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். இயற்கையிலேயே மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மையையும், எந்த வறட்சியையும் தாங்கும் தன்மையையும் கொண்ட இந்த தாவரம் காடு, கண்மாய், குப்பைமேடு, சாலையோரம் என தமிழகம் முழுக்கப் பரவிவிட்டது. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாலேயே இது ‘சீமை’ கருவேலமாயிற்று.

ஏன் அழிக்க வேண்டும் இம்மரங்களை?

இந்தியாவிலுள்ள 25,000 தாவர இனங்களில் 40% வெளிநாட்டுத் தாவரங்கள். இவற்றில் 15% முதல் 25% முற்றுகையிடும் தாவரங்கள். அதாவது, பிற தாவரங்களுக்கும், உயிர்களுக்கும் தொல்லை தரும் தாவரங்கள். யூகலிப்டஸ், சீமைக்கருவேல மரங்கள் அதில் முக்கியமானவை. இயல் தாவரம் குறைவாகவும் அயல் தாவரம் அதிகமாகவும் இருந்தால் அப்பகுதியின் நீர்வளம் குன்றிவிடும் என பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்.

அயல் தாவரமான சீமைக்கருவேல மரம், வேளாண் நிலங்களையும், புல் முதற்கொண்டு அனைத்துத் தாவரங்களையும் நாசப்படுத்தக்கூடியது. தன்னைக் காத்துக்கொள்வதற்காக அது நிலத்தடி நீரை அபரிமிதமாக உறிஞ்சுவதால், அதன் அருகில் உள்ள மற்ற தாவரங்கள் போட்டியிட முடியாமல் மடிந்துவிடுகின்றன. சராசரியாக 12 மீட்டர் உயரம் வளரக்கூடிய இம்மரம் 100 மீட்டர் ஆழத்துக்கு வேர்விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தன்னைச் சுற்றி 55 மீட்டர் அகலப் பரப்பில் தண்ணீர் எங்கிருந்தாலும் உறிஞ்சிவிடுமாம். கோடியக்கரை சரணாலயத்தைச் சுற்றி விறகு தேவைக்காக இந்த மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்குள்ள கருவேலமர இலைகளை உண்ட குதிரைகள், வெளிமான்கள், கரடி, மந்தி போன்றவை இனப்பெருக்கமின்றிப் பெருமளவில் அழிந்துவிட்டன என்பது பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 1988-1989-ல் நடந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது. இம்மரத்தின் கனியில் (நெற்று) சுக்ரோஸ் என்ற இனிப்புச்சுவை இருக்கிறது. இதனால் ஆடு, மாடுகள் அதனை விரும்பிச் சாப்பிடுகின்றன. அவ்வாறு சாப்பிடும் கால்நடைகள் மலடாவதாகச் சொல்கிறார்கள்.

சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டாலே, நம் மண் வளமானதாக மாறிவிடும், மழை பொழியும் என்பதெல்லாம் சுற்றுச்சூழல் சார்ந்த மூடநம்பிக்கைகள். இம்மரங்களை வேரோடு அகற்றிய பின் அந்த நிலங்களில் பயன் தரும் மரங்களை வனத் துறையினர் உதவியோடு இலவசமாக நட வேண்டும். அதனை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களைக்கொண்டு, மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை வேரோடு அழிப்பது தொடர்பான சிறப்புச் சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட வேண்டும். அதில் தாலுகா அளவில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தனியாக நிதி ஒதுக்கி அதனை நிர்வகிக்க ஒவ்வொரு துறைக்கும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

பட்டா நிலங்களிலுள்ள அதிகமான சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுமக்களுக்கு உதவும்வகையில், அரசு மானியம் வழங்கப்பட வேண்டும். சீமைக்கருவேல மரத்தை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சிவகங்கை ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மாற்றுத் தொழில் தொடங்க உதவுவதும் அரசின் கடமை.

எப்படி அழிப்பது?

சீமைக்கருவேல மரங்களை அடியோடு அழித்துக் கட்டுவது சாத்தியமே. வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மை கொண்டது என்பதால், சீமைக்கருவேல மரங்களை இயந்திரங்களைக்கொண்டு வேரோடு பிடுங்கி அழிப்பதுதான் நிரந்தரத் தீர்வு. ‘ஆசிட்’ அல்லது வேறு வகையான மருந்துகள் மூலம் முயற்சித்தால் மண் வளம்தான் கெட்டுப்போகும்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பறவைகள் தேசியப் பூங்காவில் சீமைக்கருவேலம் பரவியதால், அங்கு வழக்கமாக வருகின்ற அரிய வகை வலசைப் பறவைகள், சைபீரியக் கொக்கு போன்றவை விலகத் தொடங்கின. அதேபோல குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலும் பாலைநாய், காட்டுக் கழுதை, செந்நாய், வெளிமான், கானமயில், குட்டைக்கால் பருந்து போன்றவற்றின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே போனது. உடனே, மாநில அரசுகள் அதில் தலையிட்டு கருவேல மரங்களை முற்றிலும் அழித்தன. தற்போது பரத்பூர் பூங்கா பழைய நிலைக்குத் திரும்பிவருகிறது. உயிரினங்களின் எண்ணிக்கையும் மீட்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா.சபையும் பாராட்டியிருக்கிறது.

இப்பணியில் உள்ளூர் மக்களின் பங்கும் இருந்தது. கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டத்தில் தைல மரங்களை நடவுசெய்யும் அரசின் முயற்சியை உள்ளூர் மக்களே தடுத்து நிறுத்தினார்கள். கேரளாவிலும் ஆங்கி லேயர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைய மரங்கள் வெட்டப் பட்டன. அரசின் நடவடிக்கையும், உள்ளூர் மக்களின் ஒத் துழைப்புமே அம்மாநிலத்தைக் கடவுளின் தேசமாகத் தக்க வைத்திருக்கின்றன. தமிழகம் என்ன செய்யப்போகிறது?

- இ.பினேகாஸ், வழக்கறிஞர், ஆணையர், உயர் நீதிமன்ற மதுரை கிளை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x