Last Updated : 24 Aug, 2016 09:29 AM

 

Published : 24 Aug 2016 09:29 AM
Last Updated : 24 Aug 2016 09:29 AM

நம் கல்வி... நம் உரிமை!- சமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது

எஸ்.எஸ்.இராஜகோபாலன் பேட்டி

சென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும் அறுவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. மூணாவதா ஒரு ஆள் வந்தா, பாயை விரிச்சி உட்கார்ந்துருவோம்” என்றவாறே பழைய இரும்பு மடக்கு நாற்காலி ஒன்றை நான் உட்கார விரித்துப்போடுகிறார். அவர் உட்கார்ந்திருக்கும் சாய்வு நாற்காலியைச் சுற்றி அன்றைய தினம் வந்திருந்த பத்திரிகைகள் கிடக்கின்றன. எண்ணுகிறேன். ஐந்து தினசரிகள். கூடவே சில சஞ்சிகைகள். “ஒரு நாளைக்கு ஏழு தினசரி படிக்கிறேன். நான் வாங்குறது நாலு. பக்கத்து வீடுகள்லேர்ந்து அவங்க படிச்சு முடிச்சதும் மூணு வந்துரும். தினசரிகள் நீங்கலா முப்பது இதழ்கள் வருது. இது தவிர ‘பிபிசி’, ‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’லாம் இணையத்துல படிச்சுருவேன். அப்புறம், ஒரு ஆசிரியரா ஆங்கிலமும் கணிதமும் என்னோட ஏரியா. தினம் அதுல என்ன மாற்றம் வந்துருக்கோ அது சம்பந்தமா ஒரு கட்டுரையாச்சும் படிச்சுருவேன். இது போக புத்தகங்கள் இருக்கு. இப்ப ‘ஜீன்’ படிச்சுக்கிட்டிருக்கேன்” என்பவர், புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்? இந்த 86 வயதில் வாசிப்பு, புத்தகங்கள் மீதான மதிப்பீடுகள் ஏதேனும் மாறியிருக்கின்றனவா?

காலைல 4.30 மணிக்கு எழுந்துருவேன். காலைக் கடன்களை முடிச்சுட்டு வந்து உட்கார்ந்த உடனேயே வாசிப்பு தொடங்கிடும். சின்ன வயசுல அப்பா ஊட்டின ஆர்வம் இது. ஆசிரியர் உத்தியோகத்துக்கு வந்த பின்னால, உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது போக மாணவர்கள் கேட்குற எல்லாத்தையும் பத்தித் தெரிஞ்சுக்க வேண்டியாயிடுது இல்லையா? அதனால, வாசிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு. எங்க வீட்டுக்காரம்மாவும் நல்ல வாசகர். படிச்சு முடிச்சதும் மனசுக்குப் பட்டதை ஆசிரியர் கடிதமா எழுதி அனுப்பிடுறது என்னோட வழக்கம். கணினி நம்ம வேலையை இன்னும் சௌகரியம் ஆக்கிடுச்சு. எதுவா இருந்தாலும், மின்னஞ்சலைத் தட்டிவிட்டுர்றது. வாசிப்பு நம்மளை ஒவ்வொரு நாளும் புதுசாக்கிடுது. பாருங்க, எனக்கு 86; வீட்டுக்காரம்மாவுக்கு 83. இந்த வயசெல்லாம் எங்க உடம்புக்குத்தான். மனசு எப்பவும் புதுசு!

வாசிப்பு நீங்கலாக ஆரோக்கியத்துக்கு வேறு என்னென்ன காரணங்களைச் சொல்வீர்கள்?

நம்ம வீடு, நம்ம வாசல்னு குறுக்கிக்காம சமூகத்தோட நம்மளைப் பிணைச்சுக்குறது. இந்தப் பார்வை வந்துடுச்சுன்னாலே காசு இருந்தாக்கூட, உங்க தேவைக்கு அதீதமா ஒண்ணைக்கூட வாங்க மாட்டீங்க. போதும்கிற நிறைவு வந்துரும். சந்தை இழுக்குற வேகத்துக்கு ஓட மாட்டீங்க. இன்னைக்கும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் படுத்துருவோம். சின்ன வயசுல வீட்டுல விளக்கு எரியுறப்ப தேவையில்லாம விளக்கு எரிஞ்சா எண்ணெய் விரயமாகும்னு அம்மா ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. இன்னைக்கு மின்சாரத்துல விளக்கு எரிஞ்சாலும் அது தொந்தரவு செய்யுது. அப்புறம் ராத்திரி சீக்கிரம் படுத்து, காலைல சீக்கிரம் எழுந்துக்குறது உடம்போட இயல்பா பொருந்துறதா எனக்குப் படுது.

எந்த வயதில் கல்வித் துறை மீது நாட்டம் வந்தது?

எங்க அப்பா சருக்கை சீனிவாச அய்யங்கார் தலைமை ஆசிரியரா இருந்தவர். காந்தியர். அப்பா ரெண்டு விஷயங்கள்ல பிடிமானமா இருந்தார். ஒண்ணு, தாய்மொழி வழிக் கல்வி, ரெண்டாவது, பெண் கல்வி. சென்னை மாகாணத்துலயே மொதமொதல்ல தாய்மொழி வழிக் கல்வியைத் தன் பள்ளியில கொண்டுவந்தவர் அவர். பெண்கள் படிச்சாதான் சமூகம் மாறும்னும் நம்பினவர். நல்ல வாசிப்பாளி. பத்திரிகை படிச்சு முடிச்சதும் ஆசிரியருக்குக் கடிதம் எழுதிடுவார். மூவாயிரத்துக்கும் மேலான ஆசிரியர் கடிதங்கள் எழுதியிருக்கார். பல நூறு கட்டுரைகளை எழுதினார். கல்வித் துறை மேலயும் வாசிப்பு மேலயும் அப்பா வழியா பெரிய மதிப்பு உருவாயிருக்கும்னு நெனைக்கிறேன். கல்லூரியில படிச்சப்ப முடிவுசெஞ்சுட்டேன். நாம ஆசிரியராத்தான் போகணும்னு. பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சியானேன். எந்த உத்தியோகத்துக்கு விண்ணப்பிச்சிருந்தாலும் கிடைச்சிருக்கும். ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’வில் ஆபீஸர் உத்தியோகமே வந்தது. எனக்கு ‘இம்பீரியல்’கிற வார்த்தையே ஆகாது. வேணாம்னுட்டேன். கல்வி கொடுக்குறது, அதிலும் காலங்காலமா கல்வி மறுக்கப்பட்டவங்களுக்குக் கல்வி கொடுக்குறதுதான் நம்ம வேலைனு மனசுக்குப் பட்டுச்சு.

உங்கள் அளவில், நாம் கல்வியில் பின்தங்கியதற்கான காரணமாக எதைக் கருதுகிறீர்கள்?

சுதந்திரம் அடைஞ்சு எழுவது வருஷமாகுது. இன்னும் அனைவருக்கும் தொடக்கக் கல்விங்கிறதே சாத்தியமாகலை. இதுவரைக்கும் நம்முடைய அரசாங்கங்கள் தொழில்துறைக் குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கல்விக்குக் கொடுக்கலை. தொழில்துறையோட முன்னேற்றம் ஏனைய துறைகள்லேயும் எதிரொலிக்கும்கிற நம்ம அரசாங்கத்தோட நம்பிக்கை பலிக்கலை. அப்புறம் இன்னைக்கு வரைக்கும் தொடக்கக் கல்வியோட முக்கியத்துவத்தை நாம உணரலை.

நேரு காலத்தில் தொடங்கி வலுவான, பலமான தொடக்கக் கல்வியின் அவசியத்தைப் பேசிவருகிறோம். ஆனால், அரசாங்கங்கள் உயர் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தொடக்கக் கல்விக்குக் கொடுப்பதில்லை. என்ன காரணம்?

நாட்டோட மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் 6% நிதியைக் கல்விக்கும், அதில் 3% நிதிக்குக் குறையாமல் தொடக்கக் கல்விக்கும் ஒதுக்கணும்னு பரிந்துரைச்சது கோத்தாரி குழு. ஆனா, மொத்தமாகவே 4% நிதிக்கு மேல் இதுவரைக்கும் கல்விக்கு ஒதுக்கப்பட்டதே இல்லை. கடந்த சில வருஷங்களா அதுவும் குறைஞ்சுக்கிட்டிருக்கு. கல்விக்கு ஒதுக்கப்படுற நிதியைச் செலவுனு நெனைக்கக் கூடாது; மூலதனமா கருதணும். நம்மளோட ஆட்சியாளர்கள் மாத்தி யோசிக்கிறாங்க.

மோடி அரசு முன்மொழிந்திருக்கும் மாதிரிக் கல்விக் கொள்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வளவு எதிர்ப்புச் சத்தம் கேட்கக் காரணம் என்ன?

கோத்தாரி குழுவோட அறிக்கையின் அடிப்படையில் 1968 கல்விக் கொள்கையும், ராஜீவ் காந்தி அரசு தயாரித்த ‘கல்வி ஒரு சவால்’ என்ற கல்வியாளர்கள் அறிக்கையின் அடிப்படையில் 1986 கல்விக் கொள்கையும், ஆசார்யா ராம்மூர்த்தி குழுவோட அறிக்கையின் அடிப்படையில் 1992 கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டன. இவை எதுவும் ஏற்படுத்தாத எதிர்ப்பை, இன்னைக்கு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அறிக்கை அடிப்படையில வெளியாகியிருக்குற புதிய கல்விக் கொள்கைக்கான மாதிரி ஆவணம் உருவாக்கக் காரணம், அதுல கல்வி நோக்கைவிட நிர்வாக நோக்கு அதிகமா இருக்குறது.

ஒரு நாட்டோட கல்விக் கொள்கை சமநீதி, சமத்துவம், மத நடுநிலை போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையணும். ஆண்டான் - அடிமை உறவுகளை வற்புறுத்துற கொள்கைகளால் நல்லதொரு ஜனநாயக நாட்டை உருவாக்க முடியாதுங்குறது என்னோட அபிப்ராயம். இந்தியாவைப் பொறுத்த அளவுல மையப்படுத்துற அதிகாரம் எதுவுமே இந்த ஒன்றிய அமைப்பை நாசப்படுத்திடும்.

நாட்டில் 100 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், 100 பேரும் அறிவியல், கணிதம் சார்ந்த பணிகளுக்குச் செல்லப்போவதில்லை. இதனால்தான் ஒரு குழந்தையின் திறனுக்கேற்ப, அதன் விருப்பப் பாடங்களை 11-ம் வகுப்பு முதல் மாற்றி அமைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், அந்த மாற்றத்தை ஆறாம் வகுப்பிலேயே செய்வதால் என்ன சிக்கல் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

பள்ளிக் கல்வியை முடிச்சுட்டு கல்லூரில சேரப்போகும் நிலையில், எதிர்காலத்தில் என்ன படிப்பு படிப்பது என்று பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து கலந்தாய்வுக்குப் போகும் கொடுமை எந்த ஊர்ல நடக்குது? வருத்தப்பட ஏதும் இல்லை. இதுதான் நம்மூர் கள யதார்த்தம். ஒரு பிள்ளை பின்னாள்ல மருத்துவம் படிக்குமா, கணினில அதுக்கு ஆர்வம் வருமாங்கிறதை அது அஞ்சாவது படிக்குறப்போதே தீர்மானிக்குற திறன் இங்கே எத்தனை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கு? ஏற்கெனவே பிழைக்குறதுக்காகத்தான் படிப்புன்னு நெனைச்சுக்கிட்டு இருக்குற சமுதாயத்துல, பெரிய சமூகப் பிளவே இதனால் உண்டாகும்.

எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை பள்ளி செல்வோர் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது உண்மை. ஆனால், அவர்களுக்கு எட்டாம் வகுப்புக்குரிய மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி அறிவை இன்றைய பள்ளிக்கூடங்களால் கொடுக்க முடியவில்லை. வெறுமனே அவர்களைப் பள்ளியில் உட்கார வைத்துத் திருப்பி அனுப்புகிறோம். இதற்காக ஐந்தாம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரும் யோசனையும், இந்திய சமூகச் சூழலில் மோசமான முடிவுதான். எனினும், கட்டாயத் தேர்ச்சி முறையில் ஏற்படக்கூடிய இந்த மோசமான விளைவை, அதாவது போதிய திறனைக் குழந்தைகள் பெறாமலேயே பெற்றுவிட்டதாகச் சொல்லி, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அவர்களைத் தள்ளுவதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது?

நம்முடைய தேர்ச்சி மதிப்பெண் 35%. அதாவது, ஒரு மாணவர் 65% அறியாமையுடன் அடுத்த வகுப்புக்கு முன்னேறிப் போகலாம். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சப் புரிதலுடன் தேர்வாகும் ஒரு மாணவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புக்கு வரும்போது எப்படி இருப்பார்? அதனால, வகுப்பறைக் கற்பித்தலை நோக்கி முழுக் கவனத்தையும் திருப்பணும். தேர்ச்சி மதிப்பெண் 65%-80% உள்ள நாடுகள்லகூட, அதை எடுக்க முடியாத மாணவர்களை ஏற்கெனவே படிச்ச வகுப்புலயே வெச்சிடுறதில்லை. அஞ்சாம் வகுப்போட ஃபெயில்னு சொல்லி நிறுத்தினா, எத்தனை பேர் நம்மூர்ல பெண் பிள்ளைகளை மறுபடி மறுபடி பள்ளிக்கு அனுப்புவாங்க? ஆங்கிலம் தவிர பாக்கி எல்லா பாடங்களையும் நல்லா படிக்கிற ஒரு பிள்ளையை, ஆங்கிலத்துல ஃபெயில்ன்னு சொல்லி பள்ளியை விட்டே பாதியில அனுப்பிடுற அபாயம் இந்த முறையில இருக்கு. படிப்பை விடவும் விளையாட்டுல ஆர்வமா பங்கெடுக்கிற ஒரு பிள்ளையை, நீ பெயில்னு சொல்லி பள்ளியை விட்டே பாதியில அனுப்பிடுற அபாயம் இந்த முறையில இருக்கு. வடிகட்டல் கூடாதென்றால் தேர்ச்சி கூடாது என்று அர்த்தமில்லை. அனைவரையும் தேர்ச்சிக்குரியவராக ஆக்கவேண்டியது ஆசிரியரின் பணி. மாணவரது அறிவைச் சோதிக்கும் முறையில் பெருமாற்றம் வேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமல்ல, வாய்மொழித் தேர்வும் வேண்டும். ஒரு புதிய முறையைக் கொண்டுவரும்போது இவை எல்லாத்தையும் ஆழமா யோசிக்கணும்.

உங்களிடம் யோசனை கேட்கப்பட்டால் நீங்கள் முன்மொழியக்கூடிய மாற்றம் என்னவாக இருக்கும்?

தொடக்கக் கல்வியை நோக்கிப் பிரதான கவனத்தைத் திருப்பணும்னு சொல்வேன். அனைவருக்கும் 12 வருஷப் பள்ளிக் கல்விங்குறது என்னோட தனிப்பட்ட விருப்பம். இன்னைய காலகட்டத்துல 8 வருஷப் படிப்பு எதுக்கும் உதவாது. அப்புறம், கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுக்கக் கூடாது. அந்த இடத்துல மாநில அரசாங்கங்கள் இருக்கணும். பள்ளிக்கூடங்களோட நிர்வாக அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகங்கள்கிட்ட இருக்கணும். ஒரு கூட்டத்துல, கிராமத்து மாணவர்கள் எழுந்து கேள்வி கேட்டாங்க, ‘ஐயா, நாங்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்களைப் பெத்தவங்க படிக்காதவங்க. நெல்லுக்கு என்ன உரம் போடணும், எந்த ரக நெல் அதிக விளைச்சல் தரும், என்ன நோய்க்கு என்ன பூச்சிக்கொல்லி அடிக்கணும், இன்னைக்குப் புதுசா என்னவெல்லாம் வந்துருக்கு, நாளைக்கு விவசாயம் எதிர்கொள்ளப்போற சிக்கல் என்ன, அதுக்கு நாங்க எப்படித் தயாராகணும்.. இது எதுவும் எங்க பாடப் புத்தகத்துல இல்ல. ஆனா, பயன்படாதது ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கு. எப்போ இதையெல்லாம் மாத்தப்போறீங்க’ன்னு. கன்னியாகுமரியிலேயும் ஊட்டியிலேயும் சென்னையிலேயும் தஞ்சாவூர்லேயும் இருக்குற மாணவர்களுக்கு இடையிலேயே தேவைகள், நோக்கங்கள் மாறிடும்போது, காஷ்மீர்லேர்ந்து குமரி வரைக்கும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கைங்கிறது பொருத்தம் இல்லாதது. மத்திய அரசாங்கம் நாளுக்கு நாள் மாநிலங்களோட உரிமைகளைக் கைகள்ல எடுக்குறது உரிமை மீறல் மட்டும் இல்லை; அவங்களால நிர்வகிக்கவே முடியாத வேலைகளையும் கையில வெச்சுக்க நெனைக்குற பேராசை.

அதாவது, நம்முடைய ஆரம்ப காலப் பள்ளிக்கூட நிர்வாக முறைக்கு மாற வேண்டும் என்று சொல்கிறீர்கள்…

ஆமாம். அந்தக் காலத்துல பள்ளிக்கூடம் எதையும் அரசாங்கம் நடத்தலை. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் கூடிய மாதிரிப் பள்ளிகள், அப்புறம் எழும்பூர், திருச்சி, தலைச்சேரி இந்த மூணு ஊர்கள்ல உள்ள இஸ்லாமியப் பெண்கள் பள்ளிகள் தவிர, வேறு எதையும் அரசு நேரடியாக நிர்வகிச்சது கிடையாது. எல்லாப் பள்ளிக்கூடங்களும் உள்ளாட்சி நிர்வாகத்துலதான் இருந்துச்சு. பள்ளிக்கூடத்துல ஒரு குறைனு வந்தா, மக்கள் நேரா உள்ளூர் ஊராட்சி உறுப்பினர்கிட்ட குறை சொல்ல, கேள்வி கேட்க முடிஞ்சுது. இன்னைக்கு முழுக்க அதிகாரிங்க கையில பள்ளிக்கூடங்கள் வந்துடுச்சு.

இந்த மாற்றத்துக்கான மைய நோக்கம் என்னவாக இருந்தது?

அதிகாரப் பசி. ஒரு அமைச்சரைக் காட்டிலும் அன்னைக்கு டிஸ்ட்ரிக்ட் போர்டு தலைவரும் ஒரு எம்எல்ஏவைவிட பஞ்சாயத்து ஒன்றியத் தலைவரும் அதிகாரம் மிக்கவர்களா இருந்தாங்க. ஒரு பிரஜை, தன்னோட ஊருக்குப் பள்ளிக்கூடம் வேணும்னு கேட்டாலோ, சாலை வேணும்னு கேட்டாலோ அதைச் செஞ்சு தர்ற அதிகாரம் இவங்ககிட்ட இருந்துச்சு. இதே காரியத்தை ஒரு எம்எல்ஏ செய்யணும்னு நெனைச்சாகூட, இவங்ககிட்ட வந்து தொங்கணும். அதனால, இந்த முறையை ஒழிச்சிக் கட்டணும்னு நெனைச்சாங்க. 1958-ல் அதற்கான வாய்ப்பு கிடைச்சது. மாவட்ட பஞ்சாயத்துக் கழகம் கலைக்கப்பட்டுச்சு. அடுத்து, பஞ்சாயத்து ஒன்றியச் சட்டம் வந்தது. அது வந்ததும் தொடக்கப் பள்ளிகளை எல்லாம் பஞ்சாயத்து ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றினாங்க. உயர் நிலைப் பள்ளிகளைக் கல்வித் துறை எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டுச்சு. அப்போ கல்வித் துறைச் செயலாளரா இருந்த ஆர்.ஏ.கோபாலசாமி மகா கெட்டிக்காரர். அவர் அப்பவே சொன்னார், ‘நிர்வாகியும் ஆய்வாளரும் ஒரே ஆளா இருக்க முடியாது’ன்னு. நிர்வாகியோட தவறைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஆய்வாளரே தன் பொறுப்புல நிர்வாகத்தை எடுத்துக்கிட்டா நிர்வாகம் என்ன ஆகும்? அதோட கோளாறைத்தான் இன்னைக்கு அனுபவிக்கிறோம்.

அரசாங்கம் தன் பொறுப்புல பள்ளிகளை எடுத்துக்கிட்ட ஆரம்பத்துல, மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுலதான் பள்ளிக்கூடங்கள் நடந்துச்சு. அப்போகூட நேர்மையான நிர்வாகம் இருந்துச்சு. 1970-ல் கல்வித் துறைக்குக் கீழே பள்ளிக்கூடங்களை மாத்தினாங்க. எல்லாச் சீர்கேடுகளும் தொடங்குச்சு.

தமிழ்நாட்டுக் கல்வித் துறையைக் கெடுத்ததுல எம்ஜிஆருக்குப் பெரிய பங்கு உண்டு. கல்வி, சுகாதாரம் இது ரெண்டையும் தனியார்மயமாக்கியது அவர்தான். ஆனால், இதை கருணாநிதி தடுக்கலை. துணைபோனார். பின்னாடி அவரும் அதே கொள்கையைத்தான் கடைபிடிச்சார். ஏன்னா, அதுல ஆதாயம் இருந்தது.

பள்ளிக்கூடங்கள் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பு களுக்குக் கீழே இருந்துச்சுன்னா இன்னைக்கு ஒரு அரசுப் பள்ளிக்கூடத்துல தண்ணி வரலைன்னா அடுத்த நிமிஷம் தெருவுல இருக்குற கவுன்சிலரைப் பிடிக்கலாம். பள்ளிக்கூடத்துல ஆசிரியர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் மேலயும் மக்கள் மேலயும் பயமும் இருக்கும்; பிடிமானமும் இருக்கும். இன்னைக்கு யார் யாரைக் கேட்க முடியும்!

உங்களுக்கு எம்ஜிஆர் உடன் நெருக்கமான உறவு இருந்தது இல்லையா?

எனக்கு எல்லா முதலமைச்சர்கள் கூடவும் நல்ல உறவு இருந்துச்சு. நான் சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் உண்டுன்னு சொன்னா, அது இந்தம்மா மட்டும்தான். எம்ஜிஆர் ரொம்ப நெருக்கமாதான் இருந்தார். நான் நெனைச்சவுடன் அப்பாயின்மென்ட் இல்லாமல் அவரைப் பார்க்கக் கூடிய செல்வாக்கு அவர்கிட்ட எனக்கு இருந்துச்சு. அவர் கையால எனக்கு ஓவல், டீயெல்லாம் போட்டுக் கொடுத்துருக்கார். சாப்பாடு பரிமாறுகிற அளவுக்கு மதிப்பு வெச்சிருந்தார். என்னைக்கெல்லாம் எங்க வீட்டுல இரவுல தோசை இருக்குமோ அன்னைக்கெல்லாம் தயிர் சாதமும் இருக்கும். எம்ஜிஆர் பழக்கிவிட்ட பழக்கம் இது. ஆனா, முக்கியமான விஷயங்கள்ல அவர் அசைஞ்சு கொடுக்கலை. இப்போ, அப்போன்னு சொல்லிக் காலத்தை ஓட்டிட்டார்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x