Published : 20 Jan 2014 10:18 AM
Last Updated : 20 Jan 2014 10:18 AM

லாபம் தரும் முதலீடுகள்!

சென்றவாரம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பற்றிக் கண்டறிந்தோம். இவ்வாரம் அதிக ரிஸ்க் உடைய பங்குசந்தையில் முதலீடு செய்யும் முழுக்க முழுக்க பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்துப் பார்ப்போம்.

வாசகர்களுக்கு கேள்வி எழலாம். ஏன் நான் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்ய வேண்டும்? ஏன் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்யக் கூடாது? எல்லாம் ஒன்றுதானே? அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பது பலரின் கேள்வியாக இருக்கும். பங்கு சந்தை என்பது நமது காய்கறி மார்க்கெட்டைப் போல. எந்தக் காய் எப்பொழுது, எவ்வளவு விலை போகும் என யாருக்கும் தெரியாது. அந்தக் காய்க்கு அந்த விலை சரிதானா என்பதும் தெரியாது. வாங்குபவர்த்தான் உஷாராக இருக்க வேண்டும். அதேபோல் தான் பங்குசந்தையும்!

ஒருவர் பங்குசந்தையில் முதலீடு செய்வதற்குப் போதிய அளவு அறிவு வேண்டும். ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக முதலீட்டு ஒழுக்கம் வேண்டும். நீச்சலைக் கற்றுக்கொள்வதற்கு சில பல ஆண்டுகள் ஆகலாம். இவற்றையெல்லாம் அறிந்து ஆராய்ந்து செய்வதற்கு ஒருவர் தயாராக இருக்க வேண்டும்! மேலும் பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஒரு கணிசமான தொகையும் தேவைப்படும்.

இப்பொழுது மியூச்சுவல் ஃபண்டு என்ற மறுபக்கத்திற்கு வாருங்கள். நாம் மேலே கூறிய மைனஸ் பாயிண்டுகள் எல்லாம் இங்கு பிளஸ் பாயிண்ட்டாகி விடுகின்றன.

நீங்கள் அதிகமாக ஆராய்ச்சி செய்ய வேண்டாம். இவ்வகை முதலீட்டைப்பற்றி புரிந்து கொண்டால் போதும். நம்மில் பலர் இன்று முழுநேரமாக வேலை பார்த்து வருகிறோம் அல்லது தொழில் செய்து வருகிறோம். முதலீட்டிற்காக ஒதுக்குவதற்கு நேரம் இருக்காது. மியூச்சுவல் ஃபண்டுகளில் நல்ல திட்டங்களாக தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்தால் போதும். மற்றனவற்றை திட்டத்தை நிர்வகிக்கக்கூடிய ஃபண்டு மேனேஜர் கவனித்துக்கொள்வார். முதலீட்டிற்காக நீங்கள் செலவிடும் நேரத்தில் உங்கள் தொழில் அல்லது வேலையில் கவனத்தைச் செலுத்தி இன்னும் அதிகமாக பொருளை ஈட்டலாம்.

முதலீட்டிற்கு மிகவும் அவசியமானது முதலீட்டு ஒழுக்கமாகும். பங்குசந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் பொழுது அந்த ஒழுக்கம் நம்மிடம் இருக்காது. இவர் கூறினார் அவர் கூறினார் என வாங்கிவிட்டு நஷ்டத்தில் அமர்ந்திருப்போம். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது, ஃபண்டு மேனேஜர் அதன் நிர்வாகத்தை மிகவும் ஒழுங்காக கவனித்துக் கொள்வார். ஏனென்றால், அதற் காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இங்கு நீங்கள் நீச்சலை கற்றுக் கொள்ளாமலேயே முதலீடு செய்யலாம். தேவையானது எல்லாம் பொறுமைதான்!

பங்கு சார்ந்த முதலீடுகள் பொதுவாகவே நீண்ட கால முதலீட்டிற்குத்தான் சிறந்தது. ஆகவே உங்களின் வாழ்க்கையின் நீண்ட நாள் இலக்குகளான குழந்தைகளின் கல்வி, திருமணம், மற்றும் ஓய்வுக் காலம் போன்றவற்றிற்காக இத்தி்ட்டங் களில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். குறுகிய கால முதலீட்டிற்காக, இவ்வகையான முதலீட்டிற்கு வராதீர்கள்.

என்.ஆர்.ஐ – களுக்கு இவ்வகை திட்டங்களில் முதலீடு செய்வதனால் என்ன பயன்? மிகப்பெரிய கவர்ச்சி என்னவென்றால் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் ஆகிய அனைவரும் கிடைக்கும் இலாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டாம் என்பதுதான் – முதலீடு 12 மாதத்திற்கு மேல் இருந்திருந்தால்! மேலும் இவ்வகை திட்டங்களில் குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ 500-இல் இருந்தே சேமிக்க துவங்கலாம். மொத்தமாக (ஒரு தடவை) வாங்குபவர்கள் குறைந்தபட்சம் ரூ 5,000-ற்கு முதலீடு செய்ய வேண்டும். மேலும் முதிர்வு காலம் என்பது கிடையாது. எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் முதலீட்டை தொடர்ந்து கொள்ளலாம். அது வளர்ந்து கொண்டே இருக்கும். என்.ஆர்.ஐ–கள் (அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைத் தவிர) தங்களது என்.ஆர்.ஈ அல்லது என்.ஆர்.ஓ கணக்குகள் மூலம் முதலீடு செய்யலாம்.

என்.ஆர்.ஈ கணக்குகள் மூலமாக செய்த முதலீட்டை வேண்டும் என்கிற பொழுது தாங்கள் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்லாம். மேலும் வளைகுடா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கு பங்கு சந்தை வளர்ச்சியில்லாத காரணத்தால் நம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக முதலீடு செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்கு திரும்பி வரப்போகும் என்.ஆர்.ஐ – களுக்கு இவ்வகையான முதலீடு ஒரு வரப்பிரசாதம் ஆகும். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு குறித்த மற்ற விவரங்களை வரும் வாரங்களில் பார்ப்போம்.

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x