Last Updated : 25 Nov, 2013 12:00 AM

 

Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?

தங்கம், நிலம், வீடு ஆகியவை நம் முதலீட்டில் முக்கிய அங்கம் வகித்தாலும், அதன் பிறகு நம்மில் பலருக்கு முதலீடு என்பதே கடன் பத்திரங்கள்தான். கடன் பத்திரங்கள் நிலையான வட்டியை, வருவாயை கொடுப்பதுதான் அதன் சிறப்பு. கடன் பத்திரங்களில் முதலீடு செய்வோர் வங்கிகளில் வைப்புக் கணக்கு, பிராவிடன்ட் தொகை, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு பாலிசி என பலவகைகளில் வைத்திருப்பார்கள். இந்தக் கடன் வகைகள் யாவும் வெவ்வேறான கால அளவுகளில் இருக்கும். வெவ்வேறான வட்டி விகிதங்களைக் கொடுக்கின்றன.

நீங்கள் ஓராண்டு வைப்புக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மீதான ஆண்டு வட்டி 10%. ஒரு வருட முடிவில் உங்களுக்கு ரூ.10,000 வட்டியாகக் கிடைக்கும். இந்த வட்டியை நீங்கள் மாதம்தோறும் வாங்கினால் (10000/12) ரூ.833 மாத வட்டியாகக் கிடைக்கும். அந்த மாத வட்டியை மீண்டும் 10 சதவீதத்தில் முதலீடு செய்தால், ஓராண்டு இறுதியில் உங்கள் மொத்த வட்டி 10 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும். இவ்வாறு நீங்கள் வாங்கும் வட்டி மாத வட்டி, கால் அல்லது அரை வருட வட்டி, ஒரு வருட வட்டி, முதிர்வு கால வட்டி என்று பலவிதத்தில் இருக்கும்.

பொதுவாக பிராவிடன்ட் தொகை, அதன் முதிர்வில்தான், அதாவது 15 அல்லது 20 வருட முடிவில் கிடைக்கும். தேசிய சேமிப்பு பத்திரங்களும் அவ்வாறுதான்.

கடன் பத்திரங்களில் ஒரு வகை Bond. இதில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் Government Securities, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் Corporate Bond அல்லது Debenture என பல வகைகள் உண்டு. Bond என்பது ஒரு குறிப்பிட்ட வட்டித் தொகையை மாதம் அல்லது வருடம்தோறும் தருவதாகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட முதிர்வுத் தொகையை மட்டும் கொடுப்பதாகவும் இருக்கும். சில corporate debenture-கள் பின்னர் பங்குப் பத்திரமாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன் வருகின்றன.

வட்டி விகிதம், பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்பது கோட்பாடு. நீண்டகாலத்துக்கு (3 ஆண்டுக்கும் அதிகமாக) கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும்போது, நிகர

வட்டி (ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி – பணவீக்க விகிதம்) சில ஆண்டுகளில் குறைவாகவும், சில ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும். இதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே வருமான வரி, பணவீக்கம் நீங்கலாக உள்ள நிகர வருவாயைக் கணக்கிடுவது முக்கியம்.

மாதம் அல்லது வருட வட்டி கொடுக்கும் நீண்ட கால கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். வட்டி வருவாய் மாதம் அல்லது வருடம்தோறும் உங்கள் செலவுக்கு தேவை என்றால் மட்டுமே அவ்வாறான கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் வரும் மாதாந்திர, வருடாந்திர வட்டி வருவாயை மீண்டும் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு வரும் சிறியத் தொகைகளை மீண்டும் அதிக வட்டி வரும் வகையில் முதலீடு செய்ய முடியாது. எனவே, முதிர்வு கால வட்டி வழங்கும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்க. கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது கால அளவை நிர்ணயிப்பது முக்கியம்.

உங்கள் பணத்தை பல்வேறு கால அளவுகளில், பல கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். நீண்ட கால முதலீட்டுக்கு பிராவிடன்ட் தொகை, ஆயுள் காப்பீடு திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். குறுகியகால முதலீடு, மாதந்தோறும் வட்டி வாங்க வங்கி வைப்புக் கணக்கை தேர்ந்தெடுங்கள். வரி சேமிப்புக்கு அரசு கடன் பத்திரங்கள் உதவும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க நினைத்தால், corporate bond அல்லது debenture வாங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x