Published : 04 Jan 2016 08:33 AM
Last Updated : 04 Jan 2016 08:33 AM
மாரடைப்பு நோயாளிகளுக்கு ‘ஆஞ்சியோஜெட் திராம்பெக்டமி’ நவீன சிகிச்சை ஒரு வரப்பிரசாதம்
மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் மாலதிக்கு வயது நாற்பது. என்றும்போல் அன்றும் அவர் பணியில் தீவிரமாக இருந்தபோது நடு நெஞ்சில் வலித்தது; லேசாக வியர்த்தது. ‘வாயு’வாக இருக்கலாம் எனக் கருதி, ஒரு ’ஜெலுசில்’ மாத்திரையைப் போட்டுக்கொண்டு பணியைத் தொடர்ந்தார். வலி குறையவில்லை. தலையைச் சுற்றியது; மயக்கம் வருவது போலிருந்தது. உடனே அலுவலகத் தோழியின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ‘இசிஜி’ எடுத்தார்கள். ‘உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதயநோய் மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது’ என்றார்கள்.
மாரடைப்பு என்றதுமே மாலதியின் நெஞ்சுக்குள் ஓர் இனம்புரியாத திகில் மின்னலாக வெட்டியது. சமீபத்தில்தான் அவரின் அப்பா மாரடைப்பில் இறந்திருந்தார். அந்த நினைவு மனசுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இதயநோய் சிறப்பு மருத்துவமனையில் இருந்தார். அங்கு எக்கோ, ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டு, அவருக்கு வந்துள்ளது மாரடைப்புதான் என்பது உறுதி செய்யப்பட்டது. அப்பாவுக்கு 70 வயதில் வந்த மாரடைப்பு தனக்கு 40 வயதிலேயே வந்துவிட்டதே என்ற அச்சம் விரட்ட, மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.
இந்தியாவில் மாலதியைப்போல இளம் வயதில் மாரடைப்பால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதுவரை சுமார் 7 லட்சம் பேர் மாரடைப்புக்காகச் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்த புள்ளிவிவரத்தோடு ஒப்பிட்டால் இது மூன்று மடங்கு அதிகம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். என்ன காரணம்? மன அழுத்தம், மேற்கத்திய உணவுமுறை, உடற்பயிற்சி குறைந்துபோனது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தக்கொழுப்பு அதிகரிப்பு….எனப் பட்டியல்போடுகிறது மருத்துவத் துறை.
எது மாரடைப்பு?
இதயத்தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறைந்துவிடும் நிலையை ‘மாரடைப்பு’ என்கிறோம். இதில் பல வகை உண்டு. மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். ரத்தக்குழாய்கள் சுருங்கி, இதயத்துக்கு ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைக்காத காரணத்தால் இந்த வலி வருகிறது. இதற்கு ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்று பெயர். இதை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் மாத்திரைகள் மூலமே சரிப்படுத்திவிடலாம்.
இதைக் கவனிக்கத் தவறும்போது ஏற்படுகிற மாரடைப்புதான் மோசமானது; உயிருக்கு ஆபத்து தரக்கூடியது. திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை, இடதுபுஜம், இடது கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சுவலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மயக்கம் வரும். இதுதான் முழுமையான மாரடைப்பு (Myocardial infarction); இதயத்துக்கு ரத்தம் கொடுக்கின்ற மூன்று தமனிக்குழாய்களில் கொழுப்பு/ரத்தக்கட்டி அடைத்துக் கொள்வதால் ஏற்படுகிறது.
மாரடைப்புக்குச் சிகிச்சை
இன்றைய நடைமுறையில் மாரடைப்பு வந்தவருக்கு மருந்துகள் மூலம் ரத்தக்குழாய் அடைப்பைக் கரைப்பது ஒரு வழி. ஆனால் இது எல்லோருக்கும் சரியான சிகிச்சை ஆகாது. அப்படிப்பட்டவர்களுக்கு ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ எனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கை / தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியாக ‘கதீட்டர்’ எனும் வளைகம்பி மூலம் ஒரு பலூனையும், ‘ஸ்டென்ட்’ எனும் சுருள் கம்பியையும் இதயத்தமனிக்குச் செலுத்துகிறார்கள். அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பலூனை விரியச் செய்து, அது நகர்ந்து விடாமல் இருக்க ‘ஸ்டென்ட்’டை அங்கு பொருத்திவிடுகிறார்கள். இதன் மூலம் அடைப்பு நீக்கப்பட்டு இதயத்துக்கு ரத்தம் கிடைக்க வழி செய்யப்படுகிறது. என்றாலும், சில வருடங்களுக்குப் பிறகு இந்த ஸ்டென்டிலேயே மறுபடியும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்து, இதயத் தமனிக்குழாய்கள் மூன்றிலும் அடைப்பு இருந்தால் ‘பைபாஸ் அறுவைச் சிகிச்சை’ மேற்கொள்ளப்படுகிறது. இது மார்பைப் பிளந்து செய்யப்படும் சிகிச்சை என்பதால் சிகிச்சையின் தொடக்கத்தில் வலி தொல்லை தரும். இம்மாதிரி குறைகளையெல்லாம் தவிர்க்கும் விதமாக சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா நகரில் ‘ஆஞ்சியோஜெட் திராம்பெக்டமி’ (Angiojet Thrombectomy)எனும் பெயரில் மாரடைப்புக்குப் புதியதொரு சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதில் என்ன புதுமை?
‘ஆஞ்சியோஜெட் திராம்பெக்டமி’ சிகிச்சை
இதயத்தில் ஸ்டென்ட்டைப் பொருத்துவதற்கான வழிமுறைதான் ஒரு சிறிய மாற்றத்துடன் இதிலும் பின்பற்றப்படுகிறது. இதற்கெனத் தயாரிக்கப்பட்ட வளைகம்பியின் முனையில் இரண்டு பம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதை நோயாளியின் தொடை ரத்தக்குழாய் வழியாக, ஒரு கணினி உதவியுடன் இதயத்தின் அடைபட்ட ரத்தக்குழாய்க்கு அனுப்புகிறார்கள். இது அங்கு சென்றதும் தீயை அணைக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதைப்போல இதய ரத்தக்குழாயை அடைத்திருக்கிற ரத்தக்கட்டியின்மீது சலைன் எனும் திரவத்தைப் பல மடங்கு அழுத்தத்தில் ஒரு பம்பு பீய்ச்சுகிறது. அப்போது அந்த இடத்தில் வெற்றிடம் உருவாகிறது. இதன் பலனால், ஒரு வெடிகுண்டு வெடித்துச் சிதறுவதுபோல அந்த ரத்தக்கட்டி சிதறித் தூள் தூளாகிறது. இதைத் தொடர்ந்து, வளைகம்பி முனையில் உள்ள அடுத்த பம்பு இத்துகள்களை ஒன்றுவிடாமல் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் ரத்தக்குழாயின் அடைப்பு 100% துப்புரவாகவும் துல்லியமாகவும் நீக்கப்படுகிறது; மாரடைப்பு எனும் அபாயம் முற்றிலும் விலகிக்கொள்கிறது; இவற்றின் ஒட்டுமொத்தப் பலனாக ஒரு மனித உயிர் மிக எளிதாகக் காப்பாற்றப்படுகிறது.
இதில் கிடைக்கிற கூடுதல் நன்மை என்னவென்றால், இந்தச் சிகிச்சைக்குப் பிறகு இதய ரத்தக்குழாயில் பலூன் ஸ்டென்ட் பொருத்தப்படுவதில்லை. ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளைக் குறைத்துக்கொள்ளலாம். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் வழக்கமான பணிகளைச் செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இதயத்தில் எவ்வித செயற்கைத் துணைப்பொருளும் பொருத்தப்படாமல் இயற்கை வழியில் இதயம் இயங்க இது வழிவகுக்கிறது; கடுமையான மாரடைப்பு வந்தவருக்கும் மிக எளிதாக மரணத்தைத் தள்ளிப்போட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. விரைவிலேயே இது இந்தியாவுக்கும் வரவுள்ளது.
அரசுகளின் கடமை
எந்த ஒரு புது கண்டுபிடிப்பும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமன்றி, அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தட்டு மக்களுக்கும் பயன்படும்போதுதான் அக்கண்டுபிடிப்பின் உண்மையான பலன் கிடைக்கும். மாரடைப்பு என்பது இப்போது இளம் வயதினர், முதியவர் என எல்லா வயதினருக்கும் எல்லா தட்டு மக்களுக்கும் ஏற்படுகிற நோயாகிவிட்டது. எனவே, இந்தக் கண்டுபிடிப்பு ஏழை எளியவர்களுக்கும் எட்ட வேண்டுமானால், இச்சிகிச்சைக்கான செலவு அவர்களின் கைக்கு எட்டும் வகையில் இருக்க வேண்டியது மிக அவசியம். பொதுவாக இச்சிகிச்சைக்கான கருவியின் விலையைவைத்துதான் சிகிச்சை செலவு அமையும். எனவே, இக்கருவியின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முனைய வேண்டும். முக்கியமாக இக்கருவியை இறக்குமதி செய்யும்போது இடைத்தரகர்களுக்கு இடம் கொடுக்காமல் தடுக்க வேண்டியதும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொண்டு வரிவிலக்கு போன்ற சலுகைகளைக் கொடுத்து உள் நாட்டிலேயே இதை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த வேண்டியதும் மக்கள் நலவாழ்வில் அக்கறை உள்ள அரசுகளின் கடமையாகும்.
- கு. கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT