Published : 18 Apr 2014 10:00 AM
Last Updated : 18 Apr 2014 10:00 AM

இந்தியர்களின் பார்வை வேறு; காஷ்மீரிகளின் பார்வை வேறு! - சையத் அலி ஷா கிலானி பேட்டி

இந்தியாவின் மணிமகுடம் காஷ்மீர். அதன் தீராத தலைவலியும் அதுதான். காஷ்மீரைக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கட்டுப்படுத்தும் குரல்களில் சையது அலி ஷா கிலானியினுடைய குரல் முக்கியமானது. ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர், தேரிக்-இ-ஹுரியத், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு என கிலானி எந்த அமைப்பில் இருந்தாலும் காஷ்மீர் பிரிவினை ஒன்றே அவர் முன்வைக்கும் நிரந்தரத் தீர்வு.

“காஷ்மீரில் பயங்கரவாதமும் ரத்தக்களரியும் அதிகரிக்க கிலானியே காரணம்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. வாழ்வின் பிற்பகுதியில் திடீர் திடீரென்று வீட்டுச் சிறை நடவடிக்கைக்கு உள்ளாகும் கிலானி, தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை எதிர்கொள்கிறார். 85 வயது முதுமை, சிறுநீரகப் புற்றுநோய், இதயக் கோளாறு எல்லாவற்றையும் தாண்டி சுதந்திர காஷ்மீர் கனவு அவரைத் துடிப்போடு இயக்குகிறது. கிலானியிடம் பேசினேன்.

நீங்கள் உங்களை எப்படி முதலில் உணர்கிறீர்கள் – ஒரு காஷ்மீரியாகவா அல்லது இந்தியராகவா?

நான் எப்போதுமே என்னை ஒரு காஷ்மீரி என்று அழைத்துக்கொள்வதையே பெருமையாக உணர்கிறேன்.

சரி, காஷ்மீரிகளின் தேவை என்ன? தேசத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் ரீதியாக சில தேவைகள் இருக்கின்றன; காஷ்மீருக்கும் அப்படியே. காஷ்மீரத்தின் முக்கிய அரசியல் தேவை இந்தியா, பாகிஸ்தான், சர்வதேச சமூகம் ஆகியவை உறுதிகூறியபடி தங்களுடைய எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கும் சுயநிர்ணய உரிமை.

ஆனால், காஷ்மீர் பிரிவினையை எல்லோருமே விரும்பவில்லை. அப்படி விரும்பாத காஷ்மீரி பண்டிட்டுகள் அவர்களுடைய சொந்த ஊர்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அவர்களும் காஷ்மீர் மண்ணின் மைந்தர்கள்தான் இல்லையா?

காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று நாங்கள் கோரும்போது முஸ்லிம்களை மட்டும் சொல்லவில்லை. பண்டிட்டுகள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என்று எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறோம். பண்டிட்டுகளும் இந்த மண்ணின் பிள்ளைகள்தான். பண்டிட்டுகள் ஏன் தங்கள் ஊரைவிட்டுச் சென்றார்கள் என்பது பெரிய கேள்விக்குறி, அதைப் பற்றி நிறைய விவாதிக்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீரிகளுக்கு எல்லா வகையிலும் உதவ இந்திய அரசும் காஷ்மீர் சகோதரர்களை அரவணைக்க இந்தியர்களும் தயாராகவே இருக்கிறோம். ஏன் உங்களைப் போன்ற தலைவர்கள் இந்திய அரசை ஆக்கிரமிப்பாளராகவும் சக இந்தியர்களை எதிரிகளாகவும் பார்க்கிறீர்கள்?

இந்தியாவை ஆக்கிரமிப்பாளராகவும் இந்தியர்களை எதிரிகளாகவும் பார்ப்பது எங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல – காஷ்மீர் மக்களே அப்படிப் பார்க்கின்றனர். ராணுவ பலத்தாலும் பல்வேறு வகை அடக்குமுறைகளாலும் இந்திய அரசு எங்கள் வாயை அடைப்பதில் வெற்றி பெற்றிருக்கலாம்; உணர்வுகளை வெற்றி கொள்ள முடியாது. இந்திய அரசும் இந்திய மக்களும் எங்களுக்குச் செய்யக்கூடிய சிறந்த உதவி, காஷ்மீரிகளின் உணர்வை மதித்து – அவர்கள் விரும்பும் வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுவதே.

தீர்வு என்று நீங்கள் குறிப்பிடுவது காஷ்மீர் பிரிவினையைத்தானே... பிரிவினை நீங்கலாக உங்களுக்கு வேறு தீர்வே தெரியாதா?

இந்தக் கேள்வியே அபத்தமானது; என்னுடைய நாட்டை ஆக்கிரமிப்பாளன் ஒருவன் ஆக்கிரமித்திருக்கிறான். என்னுடைய நியாயமான உரிமைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆக்கிர மிப்புக்கு எதிரான என் குரல் பொருத்தமற்றதாகப் பார்க்கப் படுவது அபத்தம் இல்லையா?

உங்கள் வரலாற்று நியாயங்களை நான் மதிக்கிறேன். அதேசமயம், எந்த ஒரு போராட்டமும் சமகாலப் புவியரசியலைப் புறக்கணிக்க முடியாது. காஷ்மீருக்கும் இது பொருந்தும் இல்லையா?

வரலாற்று உண்மைகளை ஒருபோதும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் உள்ள நியாயமான கவலைகளைக் கருத்தில்கொண்டு செயல்பட காஷ்மீரிகள் தயாராக இருக்கின்றனர். அதேசமயம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ராணுவ நோக்கங்களுக்காக காஷ்மீர் மக்களைப் பிணையாக்க முடியாது.

சரி, காஷ்மீர் தனிநாடாகவே ஆகிறது என்றே வைத்துக்கொள்வோம்... சுற்றிலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற ராணுவ சக்திகளின் நடுவே எத்தனை ஆண்டுகளுக்கு காஷ்மீர் தனித்து இருந்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைவிடச் சிக்கலான புவிசார் அரசியல் சூழலில் ஏராளமான சிறு நாடுகள் தனித்துவம் மிக்க நாடுகளாகச் செயல்படுகின்றன. நாமிருப்பது 21-ம் நூற்றாண்டு; எந்த நாடும் தனது ராணுவ பலத்தின் மூலம் இன்னொரு நாட்டைக் கைப்பற்றிவிட முடியாது. எனவே, தனி நாடாக எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சிந்தனைக்கே இடம் இல்லை.

இந்தியச் சுதந்திரத்துக்குப் பின் 66 ஆண்டுகள் ஆகியும்கூட இன்னமும் காஷ்மீரிகளால் தேசிய நீரோட்டத்தில் கலக்க முடியவில்லையே...

கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினையை இந்தியா கையாண்டுவரும் விதத்தைப் பார்த்தால், காஷ்மீரிகளின் தேவைகளை நிறைவேற்றுவது ஒருபுறம் இருக்கட்டும் – காஷ்மீரிகளின் தேவைகள் என்னவென்று தெரிந்துகொள்ளக்கூட அது அக்கறை காட்டவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சுதந்திரம், தேசிய நீரோட்டம் இவற்றைப் பற்றியெல்லாம் உங்களுடைய பார்வைக்கும் காஷ்மீரிகளின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் சுதந்திரம் அடைந்திருக்கலாம். நாங்கள் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. எங்களைப் பொருத்த அளவில் தேசிய நீரோட்டம் என்பது உங்களுடைய தேர்தல் சார்ந்த அரசியல் அல்ல; அது எங்களுடைய சுதந்திரப் போராட்டம்தான்.

ஒரு போராட்டத்துக்குப் பல்வேறுகட்ட இலக்குகள் முக்கியம் இல்லையா? காஷ்மீர் பொருளாதாரரீதியாகக் கீழே தள்ளப்பட இப்படிப் பிரிவினை ஒன்றே முதலும் இறுதியுமான இலக்கு என்ற உங்கள் போக்கும் காரணம் என்பதை உணர்கிறீர்களா? வளர்ச்சிக்கான தேவைகள் உங்கள் கண்களில் படவே இல்லையா?

இல்லை. நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். வளர்ச்சிக்கு அமைதியும் அரசியல் ஸ்திரத்தன்மையும் அவசியம். காஷ்மீரிகளின் விருப்பப்படி தீர்வுகாணப்பட்டால்தான் அவை இரண்டுமே அமையும். காஷ்மீரின் வளர்ச்சிக்காக இந்திய அரசு செலவு செய்வதாகக் கூறுவதெல்லாம் சாம, தான, பேத, தண்ட முறைகளில் காஷ்மீரைப் பணியவைக்க - சாணக்கிய நீதியைப் பின்பற்றுவதற்காகும் வழியே.

இந்தியாவில் அழுத்தப்பட்ட சமூகங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவரவர் விருப்பத்துக்கேற்ப நாட்டைத் துண்டாடுவதைவிடவும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தி நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்திசெய்துகொள்வதே சிறந்த வழியாக இருக்க முடியும் இல்லையா?

இந்தியாவின் வெவ்வேறு சமூகத்தவரின், இனத்தவரின் ஆசைகள், கோரிக்கைகள், போராட்டங்கள்குறித்து நான் அறிவேன். பழங்குடிகள் - நீராதாரம், காடு, நிலம் - ஆகியவற்றின் மீது காலங்காலமாகத் தங்களுக்கு இருந்துவரும் உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். சமூகத்தில் தங்களுக்கு கௌரவமும் சமத்துவ உரிமையும் வேண்டும் என்று பட்டியலினத்தவர் போராடுகின்றனர்.

தங்களுடைய விடுதலைக்காக வட கிழக்கு மாநில மக்கள் போராடுகின்றனர். தங்களுடைய இலக்குகளை அடையப் போராடும் அனைத்துத் தரப்பினர் மீதும் எனக்கு மரியாதை உண்டு. அனைத்துத் தரப்பினரும் இணைந்து போராட வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் எங்களுடைய ஆதரவு உண்டு.

எங்களுடைய சுதந்திர காஷ்மீர் கோரிக்கையைப் பிரிவினை நோக்கம் கொண்டதாக நான் பார்க்கவில்லை. மாறாக, இந்திய அரசும் இந்திய மக்களும்தான் தங்களுடைய ஜனநாயகம் எவ்வளவு குறுகிய மனம் கொண்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன். 66 ஆண்டுகளுக்கு முன்னால் சுதந்திரம் அடைந்த இந்தியர்கள் அதன் பொருள் என்ன என்று அமர்ந்து யோசிக்க வேண்டும்!

தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x