Last Updated : 23 Sep, 2013 12:55 PM

 

Published : 23 Sep 2013 12:55 PM
Last Updated : 23 Sep 2013 12:55 PM

Globe ஜாமூன் - அமைதியின் விலை

இந்த காந்தி ஜெயந்திக்குக் கைதிகளை ரிலீஸ் பண்ணுவது, அண்ணா பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பிவைப்பது மாதிரியான காரியங்களெல்லாம் நாட்டில் எத்தனை பேருக்கு உடன்பாடானது என்று தெரியவில்லை. படாத பாடு பட்டு, பிடித்து உள்ளே போடும் போலீசாருக்கு நிச்சயமாக இது கடுப்பேற்றும் செயலாகத்தான் இருக்கும். லோக்கல் அரை பிளேடுகள் அளவில்தான் இதெல்லாம் என்றால்கூட ஒழியட்டும் என்று நகர்ந்து போகலாம். 'கிடைத்தற்கரிய ரத்தினங்கள்' கிடைத்து, உள்ளே தள்ளிக் கதவைப் பூட்டி பிராந்தியத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற நினைப்பவர்களை வெறுப்பேற்றி அனுப்புவது மாதிரிதான் இருக்க முடியும்.

பத்திருபது நாள்கள் முன்பு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் தாலிபன் கமாண்டர் ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படலாம் என்று ஒரு பிட்டுச் செய்தி வந்தது. ஓரிரு நாள் இடைவெளிவிட்டு அன்னாரை விடுவிக்கச் சொல்லி ஆப்கனிஸ்தான் அரசாங்கமே பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டிருப்பதாக இன்னொரு குட்டிச் செய்தி வந்தது. மேற்படி வஸ்தாதுவை விடுவிப்பது சம்மந்தமாக பாகிஸ்தான் அரசின் உயர்மட்டக் குழுவினர் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக அடுத்தச் செய்தி அடுத்த ஓரிரு தினங்களுக்கு. என்னடா பில்டப் இத்தனை பெரிதாக இருக்கிறதே என்று பார்த்தால் இப்போது முல்லா அப்துல் கனி பரதாரை விடுவித்துவிட்டதாக நியூஸ்.

இந்த முல்லாவை நமது நற்குடி மக்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தாலிபன் என்ற அமைப்பைத் தோற்றுவித்த இரண்டு பேரில் இவர் ஒருவர். முதல்வரான முல்லா முகமது ஓமருக்கு சகலபாடி முறை. ஓமருக்கு அடுத்தபடி தாலிபன் இயக்கத்தின் கடக்காலாக, தூணாக, சுவராக, ரூஃபாக எல்லாமாகவும் அறியப்பட்டவர். சே குவேரா மாதிரி இவரும் ஒரு மோட்டார் சைக்கிள் வீரர். அமெரிக்கா யுத்தம் பண்ணிக்கொண்டிருந்த நாள்களில் தனது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் உட்காரவைத்தே முல்லா ஓமரை ஊர் ஊராக மறைத்து அழைத்துச் சென்றவர்.

இத்தனை சீரும் சிறப்பும் பெற்றவரைக் குறித்து கமலஹாசனின் விஸ்வரூபத்தில் ஏன் ஒரு குறிப்பும் இல்லாது போய்விட்டது என்று கேட்டுவிடாதீர்கள். ஆப்கனிஸ்தானிலேயே இவரை நேரில் பார்த்தவர்கள் ரொம்பக் கொஞ்சம் பேர்தான். பெரிய போராளி. 1980களில் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தின்போது முதல் முதலாக நாட்டுத் துப்பாக்கியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்ட மனுஷன், 2010 பிப்ரவரியில் கைதாகும்வரை அதைக் கீழே இறக்கியதே இல்லை.

பரதாரின் கைது நடவடிக்கை குறித்து அப்போது பாகிஸ்தான் அரசு மூச்சு விடக்கூட விரும்பவில்லை. அவர் பிடிபட்டுவிட்டார் என்று அமெரிக்காதான் முதலில் சொன்னது. அதெல்லாம் இல்லை என்று பாகிஸ்தான் மந்திரி பிரதானிகள் வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாம் ஒரு பயம்தான். ஆனாலும் விஷயம் தெரிந்துவிட்டது. சந்தேகமில்லாமல் தாலிபனுக்கு அன்று அது பெரிய இடி. யுத்தமெல்லாம் முடிந்து ஹமீது கர்சாய் ஆட்சிக்கு வந்த புதிதில் மகிழ்ச்சி தெரிவித்த சங்கதிகளின் பட்டியலில் பரதார் பிடிபட்டதும் ஒன்றாக இருந்தது.

அதே ஹமீத் கர்சாய்தான் அப்துல் கனி பரதாரை விடுவிக்க வேண்டுமென்று இப்போது பாகிஸ்தானை விடாது நச்சரித்து இன்று வெற்றியும் கண்டிருக்கிறார். என்னத்துக்கு என்று கேட்பீர்களானால் பேச்சு வார்த்தைக்கு. அமைதி திரும்புவதற்கு. ஆப்கனில் நடைபெறும் அட்டகாசங்கள் குறைவதற்கு. என்னத்தைச் சொல்ல?

போர் முடிந்தால் அமைதி என்பதெல்லாம் போன தலைமுறைக்கு. இராக்காகட்டும், ஆப்கனாகட்டும் - எல்லாம் முடிந்ததென்று யாருமே சொல்லிவிடமுடியாது. இன்றைக்கு வரைக்கும் பிரதி வெள்ளிக்கிழமை எங்காவது ஓரிடத்தில் யாராவது குண்டு வைத்து பத்திருபது பேருக்காவது மோட்சப் பிராப்தமளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்றைக்குக் கூட அங்கே அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தாலிபன் தான். வேறு யார்?

பிரச்னை என்னவென்றால் என்னதான் ஹமீத் கர்சாய் அமைதிப் பேச்சுக்கு ஆள் பிடிக்க ஒவ்வொருத்தராக சிறை மீட்டு சகாயம் பண்ணப் பார்த்தாலும் (போன வருஷம் 25 பேர். இந்த வருஷம் இன்னாருக்கு முன்னதாக ஏழு பேர்.) வெடிக்கிற குண்டு வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது. கர்சாய்க்கு வேண்டுமானால் இதனாலெல்லாம் நல்லபேர் சித்திக்கலாம். ஆப்கனில் தாலிபன்கள் மீண்டும் வலுப்பெறத்தான் இந்த ரிலீஸ் திருவிழாக்கள் உதவுமே தவிர, அதைத்தாண்டி பத்து காசுக்குப் பிரயோசனப்படாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x