Published : 26 Jun 2016 10:58 AM
Last Updated : 26 Jun 2016 10:58 AM

மாணவர்களை ஈர்க்கும் பொறியியல் படிப்பு

பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரவே விரும்புகிறார்கள். மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு மீதான ஆசை தற்போது சற்று குறைந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இப்படிப்பின் மீதான மோகம் இன்னும் குறைந்துவிட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பிஇ. பிடெக் படித்துவிட்டு எப்படியாவது தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியில் சேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் ஏங்குகிறார்கள்.

இந்த ஏக்கம் கிராமம் தொட்டு நகரம் வரை ஒன்றுபோலவே இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு பிஇ, பிடெக் பட்டதாரி என்றால் வியப்போடு பார்ப்பார்கள். காரணம், அப்போதுபொறியியல் கல்லூரிகள் மிகக் குறைவாக இருந்தன. தற்போது பொறியியல் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில்இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்குமே எளிதில் இடம் கிடைத்துவிடுகிறது. விருப்பமான கல்லூரி கிடைப்பதிலும்,பிடித்தமான பாடப்பிரிவு கிடைப்பதிலும் வேண்டுமானால் ஆசை நிறைவேறாமல் போகலாம். மற்றபடி கண்டிப்பாக இடம் உறுதி.

தமிழ்கத்தில் தற்போது 524 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இவற்றில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச்சாளர முறையில் (Single Window System) நிரப்பப்படுகின்றன. சிங்கில் விண்டோ சிஸ்டம் முறையின்படி,மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பம் போடத் தேவையில்லை.ஒரு விண்ணப்பம் போதும். கலந்தாய்வின்போது பிடித்தமா்ன கல்லூரியை தேர்வு செய்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தியது. ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 994 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

பொது கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 22-ல் தரவரிசைப் பட்டியலை (ரேங்க் லிஸ்ட்) வெளியிட்டனர்.

பிடித்தமான கல்லூரியை, பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை ஏறத்தாழ ஒரு மாத காலம் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து தொழிற்கல்விபிரிவு மாணவர்களுக்கு ஜூலை 23, 24-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம்இடங்களுக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். எனவே, ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போன்று விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் உறுதி. பிடித்தமான கல்லூரி, பிடித்தமான பாடப்பிரிவு கிடைக்குமா?என்பதில்தான் போட்டி இருக்கும்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அதற்கு அடுத்தபடியாக சென்னையைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் சேர வேண்டும் என்பதுதான் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவது அவர்களின் கட் ஆப் மதிப்பெண்தான். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

ஏழை, வசதி படைத்தவர், அரசு அதிகாரியின் மகன், கூலித்தொழிலாளியின் பிள்ளை யார் என்றாலும் சரி கலந்தாய்வு வரிசையை முடிவு செய்வது கட் ஆப் மதிப்பெண் தானே ஒழிய, எந்த விதமான சிபாரிசும் அங்கு எடுபடாது. திரையரங்கு,ரேஷன் கடை போன்ற இடங்களில் வரிசையில் இடையில் புகுந்துவிடுவதைப் போல குறைந்த கட் ஆப் மதிப்பெண் வைத்துக்கொண்டு இடையில் யாரும் புகுந்துவிட முடியாது. கழுத்தைப் பிடித்து உரிய வரிசையில் நிற்கவைத்துவிடுவார்கள்.

கலந்தாய்வின்போது கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களின் மனதில் தோன்றும் முக்கியமான கேள்வி, முதலில் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் தருவதா? என்பதுதான். 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக்கூட இந்த குழப்பம் இருக்கலாம். பொதுவாகவே, என்ன படிக்கிறோம் என்பதைவிட எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது வளாக நேர்முகத்தேர்வின்போது அதிகம் கருத்தில் கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திலோ, அல்லது புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளிலோ படிக்கும் மாணவர்களின் தரம்இவ்வாறு இருக்கும் என்று நிறுவனங்கள் ஒரு கணிப்பு வைத்துள்ளன.

அதனால்தான், முக்கியத்துவம் குறைவாக கருதப்படும் ஒரு படிப்பு என்றாலும் பரவாயில்லை, கல்லூரி புகழ்பெற்ற கல்லூரியா? என்பதில்தான் மாணவர்களும்ஆர்வம் காட்டுகிறார்கள். அதில், உண்மை இல்லாமலும் இல்லை. இருப்பினும், பாடப்பிரிவா,? கல்லூரியா? என்று வரும்போது கல்லூரிக்கு முதலில் முக்கியத்துவம் அளிப்பதே நல்லது.

கலந்தாய்வு நேரத்தில் அளிக்கப்படும் நேரத்தில் குறிப்பிட்ட கல்லூரியை, குறிப்பிட்ட பாடப்பிரிவை முழுமையான திருப்தியுடன் தேர்வு செய்ய இயலாது. எனவே, மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் 10 அல்லது 15 கல்லூரிகளை முன்கூட்டியே தேர்வு செய்து கொண்டு அந்த கல்லூிகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது. ஏற்கெனவே அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அக்கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகள், கல்வித்தரம், விடுதிவசதி, கேம்பஸ் இண்டர்வியூ போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்தால் அந்தக் கல்லூரிகளைப்பற்றிய அடிப்படை விவரம் ஓரளவு புரிந்துவிடும்.

ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு நிறைவடைந்ததும் அன்றைய தினம் மாலை 6 மணியளவில் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன? என்ற அட்டவணையை இட ஒதுக்கீட்டுப் பிரிவுவாரியாக அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். எனவே, கலந்தாய்வு தொடங்கிய நாள் முதலே தினமும் அந்த பட்டியலை பார்த்துவர வேண்டும்.

அதேபோல், சேர விரும்பும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அந்தகல்லூரியில் ஒருவேளை காலியாகிவிட்டால் 2-வது அல்லது 3-வது விருப்பமாக வேறு பாடப்பிரிவுகளையும் முடிவுசெய்துகொள்ள வேண்டியது அவசியம். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் சேர விரும்புகிறீர்கள். அதற்கு அடுத்த வாய்ப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மெக்கானிக்கஸ் இன்ஜினியரிங் என தங்களுக்குப் பிடித்தமான மாற்று பாடப்பிரிவுகளையும் முன்னரே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியில், விருப்பமான பாடப்பிரிவில் இடம் காலியாகிவிட்டால், பதற்றம் அடைந்துவிடக்கூடாது. 2-வது அல்லது 3-வது மாற்று பாடப்பிரிவில் காலியிடங்கள் இருந்தால் தாராளமாக அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். ஐயோ, அந்த கல்லூரியில், நான் சேர விரும்பும் பாடப்பிரிவில் இடம் முடிந்துவிட்டதே என கலந்தாய்வின்போது பதற்றப்படக் கூடாது.

அடுத்த பாடப்பிரிவை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம். பிடித்தமானபாடப்பிரிவில் இடம் இருக்கிறது என்று சொல்லி முன்பின் தெரியாத கல்லூரியை தேர்வுசெய்வதை விட, நல்ல கல்லூரியில், வேறு பாடப்பிரிவை தேர்வு செய்வது படிப்பது எவ்வளவோ மேல். படிக்க விரும்பும் கல்லூரிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து அந்தக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே அலசி ஆராய்ந்து தெரிந்துகொண்டால்கலந்தாய்வின்போது எந்தவிதமான குழப்பமோ, பதற்றமோ இன்றி விரும்பும் கல்லூரியை தேர்வுசெய்துகொள்ளலாம்.

பாடப்பிரிவை தேர்வுசெய்வது எப்படி?

பொறியியல் படிப்பு என்றவுடனே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது இ.சி.இ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) என்ற 3 எழுத்துகள்தான். கடந்த சில ஆண்டுகளாக 2-வது இடத்தில் மெக்கானிக்கல் இன்ஜினரியரிங் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் ஐ.டி எனப்படும் இன்பர்மேசன்டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக அந்த இடங்களை இசிஇ-யும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் பிடித்துக்கொண்டன.

நம்மவர்களுக்கு எப்போதுமே ஒரு குணம். உண்டு. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பொருளை வாங்கினால் அதை நாமும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிப்பது. இது படிப்புக்கும் பொருந்தும். பக்கத்து வீட்டு மாணவரோ, உறவினரோ இன்ஜினியரிங்கில் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் சேர்ந்திருப்பார். அவரைப் பார்த்துக்கொண்டு அப்படியே சேர்ந்து விடுவது நமது மாணவர்களின் இயல்பாக மாறியிருக்கிறது. உண்மையில் நமது திறமை என்ன? நமது ஆர்வம் என்ன? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க மாணவர்கள் தவறிவிடுகிறார்கள்.

மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளை படித்து முடிக்கும்அனைவருக்குமே கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் வேலை கிடைத்து விடுவதில்லை. பொறியியலில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படித்தாலும் அதை சிறந்த முறையில் முடிக்கும் மாணவர்களுக்கே உடனடியாக வேலை கிடைக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

என்ன பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறோம்? என்பதைக்காட்டிலும் அந்த பாடப்பிரிவை எப்படி படித்து முடித்திருருக்கிறோம்? என்பதுதான் முக்கியம். வெறும் படிப்பு மட்டுமின்றி வேலைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்திருக்கிறோமா? என்பதுதான் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறதே தவிர படித்த பட்டம் மட்டுமே அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

எனவே, பொறியியல் சேரும் மாணவர்கள் தங்களுக்கு எந்தத் துறை மீது ஆர்வம் இருக்கிறது? அத்துறையில் சாதிப்பதற்கு தேவையான திறமை நம்மிடம் உள்ளதா?, ஒருவேளை அத்திறமை இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ள முடியுமா்? பி.இ. அல்லது பி.டெக்.. முடித்துவிட்டு சாப்ட்வேர் துறையில் நுழைய போகிறோமா? எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறைகளில் சேரப்போகிறோமா? அல்லது மின்சார உற்பத்தி, வாகனங்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள் தயாரிப்பு என உற்பத்தி சார்ந்த துறைகளில் நுழையப் போகிறோமோ? என்பதையெல்லாம் இப்போதே தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும்.

அம்மா, அப்பா சொல்கிறார்கள்,. நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள், உறவினர்கள் யோசனைசொல்கிறார்கள் என்று சொல்லி உங்களுக்கு விருப்பமில்லாத அல்லது கடினமாக இருக்கும் என்று நீங்கள் மனதில் நினைக்கிற ஒரு பாடப்பிரிவை தயவுசெய்து தேர்வு செய்துவிடாதீர்கள். காரணம் பின்னர் கஷ்டப்படப்போவது நீங்கள்தானே தவிர, பெற்றோரோ, உற்றார் உறவினரோ, நண்பர்களோ அல்ல.

மாணவ, மாணவிகளே, உங்களின் ஆர்வமும், திறமையும் நீங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவை தீர்மானிக்கட்டும். மற்ற காரணிகளுக்கு ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். பிடித்தான பாடப்பிரிவில் சேரும்போது, நல்ல ஆர்வத்துடன் படித்து நல்லமதிப்பெண்களுடன், தேவையான திறமைகளுடன் பொறியியல் பட்டதாரியாக வெளியே வரலாம். கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் வேலையும் தேடி வரும். பிடித்தமான கல்லூரியில், பிடித்த மான பாடப்பிரிவில் சேர்ந்து சிறந்த முறையில் பொறியியல் படித்து முடித்து நல்ல பணியில் சேரலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வினை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் வெளியூர் மாணவர்கள், உடன் வரும் பெற்றோருக்காக தேவையான அடிப்படை வசதிகள் கலந்தாய்வு நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன. ஓய்வுக்கூடம், குளிக்கும் வசதி, குடிநீர் வசதி, கேண்டீன் வசதி என அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன.

கலந்தாய்வுக்கு வரும் மாணவருக்கும் துணைக்கு வரும் ஒரு நபருக்கும் அரசு பஸ்களில் 50 சதவீத கட்டணச்சலுகை உண்டு. இந்த சலுகையைப் பெறுவதற்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதத்தின் ஒரிஜினலை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக கலந்தாய்வுக்கு தாய் அல்லது சகோதரியுடன் வரும் மாணவிகளுக்கு முந்தைய நாள் இரவு தங்கிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



பொறியியல் கல்லூரி தரவரிசை முறையில் மாற்றம் வருமா?

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலுக்கு குறிப்பிட்ட ஒரு செமஸ்டரில் உள்ள தேர்ச்சி விகிதமே பார்க்கப்படுகிறதே ஒழிய ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கணக்கில்கொள்ளப்படுவது இல்லை.

இவ்வாறு ஒரு செமஸ்டர் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் உண்மை தேர்ச்சி நிலையை பிரதிபலிக்காது என்று பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

இவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட கல்வி ஆண்டில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தார்கள், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களில் எத்தனை பேர் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் யோசனை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x