Last Updated : 08 Sep, 2016 09:17 AM

 

Published : 08 Sep 2016 09:17 AM
Last Updated : 08 Sep 2016 09:17 AM

பள்ளத்தாக்கில் பயணம்

உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது.

ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் ஊரின் மேல் ஒரு கம்பளிப் போர்வைபோல மூடிவிடுகிறது. நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு, ஆளரவமற்ற சாலைகளில் ரோந்து வாகனங்களும் படையினரும் மட்டுமே தென்படுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன பெட்டிக் கடைகள், உணவு விடுதிகள் மட்டும் திறந்திருக்கின்றன. கடைவீதிகளில் அரிதாக ஆட்கள் அவசர அவசரமாகக் கடந்து செல்கிறார்கள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள மாநிலம் இது. சுதந்திர மணிப்பூர் போராட்டம், அது போக மாநிலத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் குழு மோதல்கள் என மணிப்பூர் கொந்தளிப்பில் இருந்த 1958-ல், இங்கு மத்திய அரசால் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் மிச்சமிருக்கும் காலனியாதிக்கக் கால ஜனநாயக விரோத கருப்புச் சட்டங்களில் ஒன்று இது. ராணுவப் படையினர் எவர் வீட்டிலும் புகுந்து யாரையும் விசாரிக்கவும், கைதுசெய்யவும், சுட்டுக் கொல்லவும், எந்த விசாரணையும் இன்றி வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைக்கவும் உதவும் சட்டம். பிரிவினைவாதிகளையும் எல்லைக்கு வெளியிலிருந்து ஊக்கம் பெறும் தீவிரவாதக் குழுக்களையும் ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்கிறது இந்திய ராணுவம். மணிப்பூரிகள் இந்தச் சட்டத்துக்கு நிறைய பலி கொடுத்துவிட்டார்கள். ஆரம்ப நாளிலிருந்து, இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.

எதிலும் பெண்கள் துணிச்சலாக முன்னே நிற்கும் மரபைக் கொண்ட மணிப்பூரில், ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவர் இரோம் ஷர்மிளா. 2000-ல் நடந்த இளம்பெண் மெர்ஸி காபோயின் பாலியல் படுகொலை ஏற்கெனவே ஷர்மிளாவை நிலைகுலைய வைத்திருந்தது. தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 2 அன்று நடந்த மாலோம் படுகொலை அவரைக் காலவரையறையற்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது. ராணுவத்தினரின் தாக்குதல் என்று கூறப்படும் அந்தப் படுகொலைச் சம்பவத்தில், மலோம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் இருவருடைய மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருவர் லிஷன்பம் கிபிடோபி - 62 வயது மூதாட்டி. மற்றொருவர், சினம் சந்திரமணி - 1988-ல் சிறார்களுக்கான இந்திய அரசின் வீரதீரச் செயல்களுக்கான விருதை வென்றவர். இந்தச் சம்பவத்துக்கு எதிரான கண்டனப் பேரணி ஏற்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார் ஷர்மிளா. ‘ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெறும்வரை உண்ணாவிரதம்’ எனும் முடிவை அங்கு எடுத்தார். அதன் பின்னர் ஷர்மிளாவின் உயிர் மணிப்பூர் போராட்டக் களத்தின் உக்கிரமான உயிர்நாடியானது.

அரசாங்கம் ஷர்மிளாவைக் கைதுசெய்து மருத்துவமனையில் அடைத்தது. அங்கே மூக்கு வழியாகத் திரவ உணவுகளையும், மருந்துகளையும் உட்செலுத்தியது. தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு. ஓராண்டு சிறைத் தண்டனை. ஒரு வருடம் முடிந்ததும், ஷர்மிளா பெயரளவில் விடுவிக்கப்படுவார். விடுவிக்கப்பட்ட மறுநாள், உண்ணாவிரதம் என்ற பெயரில் தற்கொலைக்கு முயற்சித்ததாகச் சொல்லி, மீண்டும் அவரைக் கைதுசெய்து உள்ளே அடைத்துவிடுவார்கள். அவருடைய இளமைக் காலத்தின் பெரும் பகுதி இப்படியே கழிந்தது. இந்த 16 ஆண்டுகளில் ஒரு துளி தண்ணீர் அவர் நாவை நனைக்கவில்லை.

ஷர்மிளா தன்னுடைய கோரிக்கையைப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் மட்டுமின்றி, சர்வதேச மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார். அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக இடையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஆணையங்களை அமைத்தது இந்திய அரசு. மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் இச்சட்டத்தின் மோசமான கூறுகளை அரசுக்குச் சுட்டிக்காட்டினர், அதை ஆராய்ந்தவர்கள். எனினும், ராணுவத்தின் எதிர்ப்பை மீறி சட்டத்தைத் திரும்பப் பெறும் முடிவை எடுக்க அரசால் முடியவில்லை.

வரலாற்றுரீதியாகவும், புவியியல்ரீதியாகவும் வெகு தூரத்தில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தாலும் பெரும்பான்மை இந்தியா அதைப் பற்றி அலட்டிக்கொண்டதில்லை. இரோம் ஷர்மிளா போராட்டம் ஆண்டுகள் பல கடந்த நிலையில், அவர் மீதான கவனம் மணிப்பூரைத் தாண்டி அம்மக்களின் பிரச்சினைகளைப் பேச வைத்தது. ஆகவே, மணிப்பூர் மக்கள் தங்கள் போராட்டத்தின் அடையாளமாக அவரைப் பார்த்தனர். ஷர்மிளா ஒரு புனித பிம்பம் ஆனார். போராட்ட காலத்தில், நேரில் சென்று பார்க்கும்போது அழ நேர்ந்தால், அது தன் மகளின் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடுமோ என்று கருதி ஷர்மிளாவைச் சந்திப்பதையேகூட வைராக்கியமாகத் தவிர்த்தார் அவருடைய தாய் ஷக்கி தேவி. ஷர்மிளாவை உந்துசக்தியாகக் கொண்டு உருவான போராட்டக் குழுவினரே அவருடைய ஒரே ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்துவந்தனர். ஷர்மிளா 15 நாட்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் நாட்களில் அவர்கள் அங்கே வருவார்கள். ஷர்மிளாவையும் மணிப்பூரையும் உயர்த்திப்பிடிக்கும் பாடல்களைப் பாடுவார்கள். முழக்கமிடுவார்கள். ஷர்மிளாவை மையப் பாத்திரமாகக் கொண்ட நாடகங்களோடு நாடெங்கும் அவர்கள் செல்வார்கள். ஒரு சின்னக் கூட்டம் என்றாலும், துடிப்பான கூட்டம் அது.

இன்றைக்கு அந்தக் குழுவே வாழ்வின் மிகப் பெரிய தர்மசங்கடமாக ஷர்மிளா முன் நிற்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், கடிதம் வழியே அறிமுகமான பிரிட்டன் இளைஞர் டெஸ்மண்ட் கொட்சி, உறைந்திருந்த ஷர்மிளா வாழ்வில் மின்னலென ஊடுருவினார். இந்தக் காதல், ஷர்மிளாவைச் சுற்றியிருந்தவர்களைப் பெரும் பதற்றத்தில் தள்ளியது. ஷர்மிளாவைச் சந்திக்க டெஸ்மண்ட் கொட்சி வந்தபோது அவர்கள் அவரை அனுமதிக்க மறுத்தார்கள். டெஸ்மண்ட் கொட்சி தன் காதலியின் வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். பிரச்சினை பெரிதான பின் அவரை அனுமதித்தார்கள். ஷர்மிளாவின் போராட்டத்தில் பெரும் பிளவை அவர் உண்டாக்குவார் என்றும் அவர் இந்திய அரசின் உளவாளி என்றும் பேச ஆரம்பித்தார்கள். ஷர்மிளாவோ போராட்டத்துக்கு இணையான பிடிமானத்தைக் காதலிலும் கொண்டிருந்தார். டெஸ்மண்ட் கொட்சி அவருக்கு அளித்த, ‘ஐ லவ் யூ’ எழுத்துகளைத் தாங்கிய கரடி பொம்மை அவருக்கு உற்ற துணையானது. அதேசமயம், தன் வாழ்நாள் முழுமையும் தன் சமூகத்துக்கானது என்றும் தன்னுடைய காதலரும் போராட்டத்தில் இணைந்துகொள்வார் என்றும் அவர் சொல்லிவந்தார்.

இந்தச் சூழலில் 2016 ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டு, அரசியலில் இறங்கும் முடிவை அவர் அறிவித்த பின்னர், சூழலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. “போராட்டத்தைப் பாதியில் கைவிட்ட அவர் தங்கள் வீட்டுக்கு வரக் கூடாது’’ என்றார் அவருடைய அண்ணன். ஆதரவாளர்கள் குழு பிளந்தது. மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது போக்கிடம் இல்லாத நிலை ஷர்மிளாவுக்கு உருவானது. தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அவர் செல்லத் திட்டமிட்டபோது, அங்கே அவர் தங்கக் கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர், இப்போது ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். மலைகள் சூழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியிலுள்ள லங்கோல் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது அந்த ஆசிரமம். அடுத்தடுத்து திருப்பங்களாக நகர்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்களில், அவரைச் சந்திக்கும் முயற்சி அத்தனை சுலபமானதாக அமையவில்லை. ஷர்மிளாவின் ஆதரவாளர்களில் ஒருவர் மூலம் இந்தப் பயணம் சாத்தியமானது.

மிக மோசமான சாலைகளின் வழியே நாங்கள் பயணமானோம். இடையில் ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தச் சொல்லி இறங்கிய அவர், இரண்டு வாழைப் பழங்களை வாங்கி வந்தார். “ஷர்மிளா தங்கியிருக்கும் இடத்தில் எதுவும் கிடைப்பது கஷ்டம்’’ என்றார். “ஷர்மிளாவிடம் இன்றைக்குப் பத்து ரூபாய்கூடக் கிடையாது. எல்லாமே இப்படி அவரைச் சுற்றியிருப்பவர்களால் நடக்க வேண்டும். இந்தப் போராட்டக் காலம் முழுக்க அவருடன் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. பரிசாக வந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் படித்து முடித்த பின் இம்பாலில் உள்ள பொது நூலகத்துக்குக் கொடுத்துவிட்டார். தன் கையில் பணம் என்று அவர் ஒரு பைசாவைக்கூட வைத்துக்கொண்டதில்லை. மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் அவர். எங்களுக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் கொடுத்தார். அவரைக் குறை கூறுவது எங்களை நாங்களே காறி உமிழ்ந்துகொள்வதற்குச் சமம். இன்றளவு வரை அவர் செய்திருக்கும் தியாகமே எந்த ஒரு மணிப்பூரியின் தியாகத்தைக் காட்டிலும் உயர்வானது. அரசியல் போராட்டங்களைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆசாபாசம் இருக்கக் கூடாதா?” என்று அவர் கேட்டார். பின், மணிப்பூரிகளின் மன இயல்பைப் பற்றிப் பேசிவந்தவர் “சூழல் ஒவ்வொரு நாளும் மாறும். எந்த இடத்தில் மக்கள் அவரை உள்ளே வரக் கூடாது என்று கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே நேற்று சாயங்காலம் அவரைத் திரும்ப அழைத்தனர். அவர்கள் மத்தியில் சென்று ஷர்மிளா உரையாற்றிவிட்டு வந்தார். ஒரு வகையில் அவர் பேசிய முதல் பொதுக்கூட்டம் இது” என்றார்.

சேறும் சகதியும் நிறைந்த கரடுமுரடான பாதைகளில் திக்கித்திணறி, நாங்கள் மேலே முன்னேறினோம். வழிநெடுகத் தென்பட்ட வீடுகள் மோசமான வறுமையைப் பகிரங்கப்படுத்தின. தகரம் வேயப்பட்ட சின்னச் சின்ன வீடுகள். கள்ளிப்பெட்டி மரப் பலகைகளையும் மூங்கில் பிளாச்சுகளையும் வைத்துக் கட்டப்பட்ட கடைகள். பிள்ளைகள், பெரியோர் இரு தரப்பினரின் வெற்று உடம்புகளும் ஏழ்மையை வெளிக்காட்டி நின்றன. இடையே எங்கேனும் பெரிய கட்டிடங்கள் வந்தபோது, நவீன ரகத் துப்பாக்கிகளை ஏந்திய, சீருடை ஏதும் அணியாத ஆட்களை அங்கே காவல் பணியில் பார்க்க முடிந்தது. வண்டி மலையடிவாரத்தை நெருங்கியது.

கொஞ்சம் தனிமையான கட்டிடம் அது. பாழடைந்த இடம் என்றுகூடச் சொல்லலாம். ஆசிரமம் என்றாலும், கொஞ்சம் பேர் வசிக்கும் பெரிய வீடு அல்லது விடுதிபோலவே அது இருந்தது. சுற்றியுள்ள மலைவாழ் மக்களுக்கு இயற்கை மருத்துவச் சிகிச்சையளிக்கும் ஒரு கூடமாகவும் அது செயல்படுவதாகச் சொன்னார்கள். கட்டிடத்துக்குப் பின்னே வனம், ஒரு அமைதியான பூதம் நிழலாக விரவிப் பதுங்கியிருப்பதுபோல மலை முகடுகளில் பரவிக் கிடந்தது. மலைக் காட்டை ஆக்கிரமித்திருக்கும் பூச்சிகளின் இருப்பை அவற்றின் இடைவிடாத சத்தம் சொல்லியது. நாங்கள் உள்ளே நுழைந்தோம். ஷர்மிளா மேலே மாடியில் இருக்கிறார் என்றார் எதிரே தென்பட்ட ஒரு பெண். மாடியில் ஒரு அறையில் மாணவர் விடுதி அல்லது அரசு மருத்துவமனையின் பொதுப் பிரிவில் கிடப்பதுபோல நான்கைந்து இரும்புக் கட்டில்கள். அவற்றில் சீரமைக்கப்பட்ட ஒன்று, ஷர்மிளாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கட்டிலில் தலையணையின் அருகிலேயே அந்தக் கரடி பொம்மை உட்கார்ந்திருந்தது. அதன் அட்டைப் பெட்டி மீது டெஸ்மண்ட் கொட்சியின் சிறு புகைப்படம் ஒட்டியிருந்தது. மணிப்பூரிகளின் இயல்பான உடையில் வரவேற்றார் ஷர்மிளா.

ஷர்மிளாவின் முழுப் பக்கப் பேட்டி நாளை…

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x