Last Updated : 29 Aug, 2016 08:37 AM

 

Published : 29 Aug 2016 08:37 AM
Last Updated : 29 Aug 2016 08:37 AM

மருந்துகளே எமனாகும்போது..

ஆன்டிபயாடிக்குகளின் அளவு குறைந்தாலும் ஆபத்து, கூடினாலும் ஆபத்து

மும்பையில் பெரிய செல்வந்தர் அவர். அடிக்கடி குளிர்க் காய்ச்சல் வருகிறது என்று மருத்துவமனைக்குச் சென்றார். அவருடைய காய்ச்சலுக்கு சிறுநீரகத்தில் பாக்டீரியா தொற்று இருப்பதுதான் காரணம் என்பது பரிசோதனையில் தெரிந்தது. ஆரம்பகட்ட ஆன்டிபயாடிக்குகள் கைகொடுக்காத நிலையில், சிறுநீரகத் தொற்றுக்கு அதிக வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மருந்தான ‘கார்பாபினம்’ கொடுத்துப் பார்த்தனர். இதற்கும் அவருடைய நோய் கட்டுப்படவில்லை. கடைசியில், சிறுநீரகம் செயலிழந்து இறந்துபோனார். அவருடைய இறப்புக்குச் சொல்லப்பட்ட காரணம், ‘மருந்துகள் அவருடைய உடலில் வேலை செய்யவில்லை. ஏனெனில், கிருமிகள் இந்த மருந்துகளையே எதிர்த்து நின்று ஜெயித்துவிட்டன; மருத்துவம் தோற்று விட்டது.’

பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃபிளமிங் 1945-ல் நோபல் பரிசு பெற்ற மேடையிலேயே எச்சரித்தார்: ‘உயிர்களின் வாழ்க்கை வரலாற்றில் கிருமிகளைப் போன்ற சாமர்த்தியசாலிகள் வேறு எதுவும் கிடையாது. அவை இருபதே நிமிடங்களில் இரு மடங்காகப் பெருகுவதிலும் சரி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் மரபணுக்களின் வடிவத்தை மாற்றிக்கொள்வதிலும் சரி, படுவேகமாகச் செயல்பட்டு, தடுப்பாற்றல் கொண்ட மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு வழங்கக் கூடியவை. இதன் பலனாக, நாம் கொடுக்கின்ற மருந்துகளையே எதிர்த்து நின்று ஜெயித்துவிடும்’ என்று எச்சரித்திருந்தார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல

ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுத்த ஆன்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால், அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளாமல், குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க மீதமுள்ள கிருமிகள், தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிக்கொள்ளும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும். அதேசமயம், இந்த மருந்தும் ஒருநாள் பயன்படாத மருந்துப் பட்டியலுக்குப் போய்விடும். இது ஒரு சுழற்சியாக நிகழும். இது மனித ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

காசநோய் முற்றிலும் குணமாகக் குறைந்தது 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். ஆனால், மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நினைத்துப் பெரும்பாலோர் மருந்துகள் சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்கான திறனைப் பெற்றுவிடுகின்றன. அதன் பிறகு, ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால் இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதன்விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து, மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாதச் சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்.

இரட்டை முனைக் கத்தி

ஆன்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதனால் பலனும் உண்டு; பக்கவிளைவும் உண்டு. இன்றைக்கு நவீன அறுவை சிகிச்சைகளையும் புற்றுநோய்க்கான சிகிச்சைகளையும் மருத்துவர்கள் மிக எளிதாக மேற்கொள்கிறார்கள் என்றால், தகுதியான ஆன்டிபயாடிக்குகள் நம்மிடம் இருக்கின்றன என்ற தைரியம்தான் முக்கியக் காரணம். இந்த ஆன்டிபயாடிக்குகள் மட்டும் இல்லையென்றால், இவை சாத்தியப்படாது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் முடியாது.

எனினும், ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்து வதிலும் ஒரு முறை இருக்கிறது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இப்படிப்பட்ட நிலைமை உலகம் முழுவதுமே இருக்கிறது என்றாலும், இந்தியாவில் மிகவும் மோசம். அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் மருந்துக்கான எதிர்ப்புச் சக்தி பெற்ற கிருமிகள் காரணமாக 200 பேர் இறக்கிறார்கள் என்றால், இந்தியாவில் 461 பேருக்கு இப்படி ஏற்படுகிறது.

சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூட 18 சதவீத மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். நோயாளிகளும் உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் இம்மாதிரியான ஆன்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காக சாதாரண நோய்களுக்கும் அதிக வீரியமுள்ள ஆன்டிபயாடிக்குகளை முனைந்து பரிந்துரைக்கின்றன.

சுய மருத்துவம் கவனம்

மேலும், நகரங்களில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் அதிகரித்திருப்பதும் இந்தியாவில் ஆன்டிபயாடிக் பயன்பாடு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைகின்றன. 50% ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் சரி, நோயாளிகளும் சரி, அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது மத்தியப் பொதுச் சுகாதாரத் துறை.

மேல் நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் வீரியமுள்ள மருந்தையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடிகிறது. மக்கள் சுய மருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழி அமைக்கிறது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் விற்பனையைக் கூட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு ‘மயங்க வைக்கும் சில வியாபார உத்தி’களைப் பயன்படுத்தி ஆன்டிபயாடிக் மருந்துகளை மருந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்ய ஊக்குவிக்கின்றன. இதன் விளைவால், இந்தியாவில் 53% பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என்கிறது 2011-ல் வெளியாகியிருக்கும் உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம். 2010-ல் உலக அளவில் எடுத்த புள்ளிவிவரப்படி 2000-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த விற்பனை 76% அதிகரித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண காய்ச்சல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

சாதாரண நோய்க்கும் பெரும் விலை

இவ்விஷயத்தில், உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியாதான் இப்போது மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. இந்தியாவில்தான் மலேரியா, டைபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில், வழக்கமான ஆன்டிபயாடிக்குகளுக்கு எல்லாம் கிருமிகள் தடுப்பாற்றல் பெற்றுவிட்டால், இதன் காரணமாக அந்த ஆன்டிபயாடிக்குகள் இனிமேல் வேலை செய்யாமல்போனால் என்ன செய்வது? இதைவிட வீரியமான புதிய ஆன்டிபயாடிக்குகளைக் கண்டுபிடித்தால் மட்டுமே பேரழிவைத் தடுக்க முடியும்.

ஆனால், 1987-க்குப் பிறகு, இந்தியாவில் எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் முயற்சிகளுக்குப் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களோ மத்திய அரசின் சில மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளால், ஆன்டிபயாடிக்குகளைத் தயாரிப்பது லாபகரமாக இல்லை என்று ஒதுங்கிக்கொள்கின்றன. எனவே, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல் நாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். அங்கிருந்து இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகமாகவே இருக்கும். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆன்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சாதாரண நோய்களுக்குக்கூட பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இன்னும் சொல்லப்போனால், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். கையில் பணம் இருந்தும் மருந்து இல்லை என்ற நிலை உருவாகிவிடும்!

- கு.கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x