Last Updated : 30 Dec, 2013 12:00 AM

 

Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

ரயில் பயணம் ஆபத்தாவதேன்?

கர்நாடகத்தின் பெங்களூரில் இருந்து ஆந்திரத்தின் நாந்தேத் நகருக்குச் சென்ற விரைவு ரயிலில் நேரிட்டதீ விபத்து 26 பேரைப் பலிவாங்கியிருக்கிறது. அதிகாலை3.30 மணி அளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிவது தெரியாமல் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தற்செயலாகக் கண்விழித்த ஒரு பெண் பயணி அலறியதை அடுத்து, பயணிகள் விழித்துள்ளனர். அந்தப் பெட்டியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கிறார். அதற்குள் மளமளவென்று தீ பரவியிருக்கிறது. தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்கு எல்லாம் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதால், ஏராளமானோர் தப்பியிருக்கின்றனர்.

இத்தகைய விபத்துகள் இந்திய ரயில்வே துறைக்குப் புதிதல்ல. பல முறை நாம் மீண்டும் மீண்டும் பார்த்ததுதான். கடந்த ஆண்டுகூட ஒன்பது ரயில்கள் தீ விபத்துக்குள்ளாயின; 30 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஐந்து ரயில்கள் தீ விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தவறாமல் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன; பரிந்துரைகள் பெறப்படுகின்றன; அவை அப்படியே காற்றில் விடப்படுகின்றன.

இந்த விபத்துக்கான காரணங்கள் உடனே வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. மின்கசிவு காரணமாகத்தான் பெட்டியில் தீப்பிடித்தது என்று தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் தெரிவிக்கின்றனர். ரயில்வே அதிகாரிகள் இதை மறுக்கும் சூழலில், “ஏ.சி. மெக்கானிக்குகளுக்குப் பணிச் சுமை அதிகரித்துவிட்டது. ரயில் நிலையங்களிலும் பெட்டிகளிலும் அவர்கள் இருப்பதற்குக்கூட அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் மறுக்கிறது” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறது ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்.

தீ விபத்தைத் தவிர்க்கும் பணிகள் இந்த லட்சணத்தில்இருக்கின்றன என்றால், தீ விபத்தின்போது மக்களைக் காக்கும் பணிகளின் லட்சணம் இன்னும் மோசம். ஒரு ரயிலில் தீ எச்சரிப்பு சாதனத்தைப் பொருத்த சுமார் ரூ. 35 லட்சம் ஆகும். அப்படிப் பொருத்தினால், ரயில் தீ விபத்துக்குள்ளாகும்போது பெரும் உயிர்ச் சேதத்தை நிச்சயம் தவிர்க்க முடியும். ஆனால், 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் ரயில் பெட்டிகளில் தீயணைப்புக் கருவிகள் வைக்க மொத்தமாகவே ரயில்வே துறை ஒதுக்கிய தொகை ரூ.8.63 கோடிதான் (கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில்களில் நேரிட்ட தீ விபத்துகளால் ஏற்பட்ட சேதம் மட்டும் ரூ. 15 கோடி). விளைவு, பல ரயில்களில் தீயணைப்புக் கருவிகள் கிடையாது. உதாரணமாக, இப்போது விபத்துக்குள்ளாகியிருக்கும் நாந்தேத் விரைவு ரயிலிலேயே தீ எச்சரிப்புக் கருவி கிடையாது. விளைவை அனுபவிக்கிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாகவே மக்களிடம் ‘நல்ல பெயர் வாங்க’ பயணிகள் கட்டணக் குறைப்பில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர் ரயில்வே அமைச்சர்கள். ஆனால், குறைந்த கட்டணத்துக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x