Last Updated : 30 Jan, 2014 10:06 AM

 

Published : 30 Jan 2014 10:06 AM
Last Updated : 30 Jan 2014 10:06 AM

இந்தியாவுக்கு முந்தைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் உலகில் இயங்கிய மிகப் பெரிய தலைவர்களில் தேசிய விடுதலைக்காகப் போராடி வெற்றி பெற்றவர்கள் மாவோவும் காந்தியும். இன்று உலகம் முழுவதும் சீனாவைப் பற்றித் தெரியும். மாவோவைப் பற்றித் தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவைப் பற்றித் தெரியாதவர்கள்கூட காந்தியைப் பற்றி அறிந்திருப்பார்கள்.

எங்கெல்லாம் அடக்குமுறையை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் காந்தியின் போராட்ட முறை பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவரது முறையைப் பரிசீலித்து நிராகரித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியிலும்கூட “இந்தியக் கிழவரின் முறை சரிதானோ?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்.

காந்தியின் போராட்ட முறைகளின் சோதனைக் களமாகத் திகழ்ந்தது தென்னாப்பிரிக்கா. 1893-ம் ஆண்டிலிருந்து 1914-ம் ஆண்டுவரை சிறிய அளவில் சில நூறு பேர்களின் துணைகொண்டு அங்கு காந்தியின் தலைமையில் நடந்த போராட்டங்கள்தான் பல லட்சம் பேர்கள் பங்கெடுத்த நமது சுதந்திரப் போரின் வித்துக்கள்.

குகாவின் சாதனை

காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவங்களைப் பற்றி முழுமையான புத்தகம் ஒன்று ராமச்சந்திர குகாவின் ‘இந்தியாவுக்கு முந்தைய காந்தி’(காந்தி பிஃபோர் இந்தியா) வெளிவரும் வரை வந்ததில்லை என்பது வியப்பைத் தருகிறது. இதனாலேயே குகாவின் புத்தகம் ஒரு சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. தெளிவான சொற்களில் காந்தியின் முதல் 45 ஆண்டு வாழ்க்கையை அவர் புத்தகத்தில் விவரிக்கிறார்.

நமக்கு காந்தியை இளைஞராக நினைத்துப் பார்ப்பதே கடினம். குகாவின் புத்தகம் காட்டும் காந்தி துடிப்பான இளைஞர். 1909-ம் ஆண்டு எடுத்த படம் அட்டையை அலங்கரிக்கிறது. அது, தமிழரான தம்பி நாயுடுவுக்கு காலன்பாக் என்ற காந்தியின் நண்பரும் சீடருமான யூதர் கொடுத்தது. படத்தில் இருப்பவர் திறந்த மார்பு காந்தி அல்ல. கோட்டு அணிந்தவர். ஆனால், இவரும் நமக்குத் தெரிந்த காந்தியும் ஒன்றுதான் என்பதைப் படத்தில் காலன்பாக் எழுதியிருக்கும் வார்த்தைகள் அறிவிக்கின்றன: ‘நாம் அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தால், நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக இருப்போம்.’

புத்தகத்தைப் படித்து முடித்ததும், காந்தியின் தென்னாப் பிரிக்க வாழ்க்கை முழுவதும் தனக்குத் தானே எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு காந்தி பதில் தேடுவதில் செலவிடப்பட்டது என்று நமக்குத் தோன்றுகிறது.

பயணங்களின் தொடக்கம்

காந்தியின் முதல் பயணம் தாதா அப்துல்லா என்ற குஜராத்தி வணிகர் ஒருவரின் வழக்கு தொடர்பாக நிகழ்ந்தது. அதற்கு 33 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து மக்கள் அங்கு குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். பலர் தமிழர்கள். அவர்களின் உழைப்பால் சீனி உற்பத்தி 10 ஆண்டுகளில் 50 மடங்கு

அதிகரித்ததாக ஆசிரியர் கூறுகிறார். அன்று நேடால் மாநிலத்தில் இருந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை சுமார் 35,000. இவர்களுக்காக ஆரம்பித்த சிறிய போராட்டங்கள்தான் காந்தியின் அரசியல், சமூக, கலாச்சார, ஆன்மிகப் பயணங்களின் முதல் மைல்கற்கள் என்று கூறலாம். காந்தியின் செயல்பாடுகள் எல்லாம் - அவரது சொந்த வாழ்வில் நடந்தவைகூட - அவரது போராட்டங்களைச் சார்ந்தவையாக இருந்தன. எனவே, காந்தி என்ற

தனிமனிதரை நாம் அவரது பொதுவாழ்வு தந்த வெளிச்சத்திலேயே காண முடிகிறது. இந்தப் பயணங்களில் அவருக்குத் துணையாக நின்றவர்களும், தடையாக நின்றவர்களும் அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். புத்தகம் இவர்கள் கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதன் வாசிப்புத் தன்மையும் நம்பகத்தன்மையும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கிறது.

போராட்டங்களின் ஆன்மிக அடித்தளம்

ஆரம்பத்திலிருந்தே தனது போராட்டங்களுக்கு - அவை மக்களின் வாழ்வாதாரங்களைச் சார்ந்தவையாக இருந்தாலும் கூட - ஆன்மிக அடித்தளம் ஒன்றை நிறுவ காந்தி தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தார்.

காந்தி இந்துவாகப் பிறந்தார். கடைசிவரையில் தான் இந்து என்ற அடையாளத்தில் உறுதியாக இருந்தார். ஆனால், ஆப்ரகாமிய மதங்களோடு அவருக்கு இருந்த நெருக்கமான, செறிவு மிக்க தொடர்பு எந்த இந்துவுக்கும் இன்றுவரை இருந்ததில்லை. யூத மதத்தைப் பற்றி அவருக்கு நண்பர்களின் மூலம் ஒரு புரிதல் இருந்தது. இயேசுவின் மலைப் பிரசங்கமும், டால்ஸ்டாயின் ‘கடவுளின் பேரரசு உனக்குள் இருக்கிறது’ புத்தகமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. புனித குரானையும் அவர் நிச்சயம் படித்திருந்தார்.

அவரது டால்ஸ்டாய் மற்றும் ஃபீனிக்ஸ் பண்ணைகளில் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள். எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். வெள்ளையர்களும் இந்தியர்களும் கருப்பினத்தவர்களும் சேர்ந்து செயலாற்றினர். காந்தியே சொல்கிறார்: “பண்ணைகளில் மதம் சார்ந்த சண்டைகள் ஒன்றுகூட நடந்ததாக எனக்கு நினைவில்லை. உழைப்பு பளுவாக இல்லை. மகிழ்ச்சி தருவதாக இருந்தது.”

அகிம்சை முறையில் போராடுவதுதான் மிகச் சிறந்த வழி என்ற உறுதி காந்திக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டது. அதன்மீது காந்தி கொண்டிருந்த தன்னம்பிக்கை வியக்கத் தக்கது. 1914-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து விடைபெறும் தருணத்தில் காந்தி சொல்கிறார்: “உலகத்திலேயே மிகப் பலம் வாய்ந்த ஆயுதம் சத்தியாக்கிரகம்.”

யாருக்காகப் போராடினார்?

காந்தியின் 1906-ம் ஆண்டுப் போராட்டத்தில் அவருக்குத் துணை நின்றவர்கள் குஜராத்தி வணிகர்கள். ஆனால், 1914-ம் ஆண்டு காந்தி, தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் தலைவராகவே அறியப்பட்டார். கருப்பினத்தவரின் பிரச்சினை களை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்படுகிறது. அவருக்குக் கருப்பினத்த வர்களிடையே தோழர்கள் இருந்தாலும், அவர்களோடு சேர்ந்து உழைத்தாலும் கருப்பினத்தவரின் தலைவராக காந்தி தன்னை நினைக்கவில்லை. வந்த புதிதில் மேற்கத்தியரை இந்தியர்களுக்கு மேல் தட்டிலும் கருப்பினத்தவரைக் கீழ்த் தட்டிலும் வைத்துப் பார்த்த காந்திக்கு, கருப்பினத்தவர் மீது செலுத்தப்படும் அடக்குமுறையின் தன்மையை உணர்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. 1908-ம் ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில், எல்லா இனத்தவர்களும் ஒன்றுசேர்ந்து இருக்க வேண்டும் என்றார்.

கருப்பினத்தவர்களும் சத்தியாக்கிரக முறையைக் கைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “இந்த நிலத்தின் பூர்வீகக் குடிகள் கருப்பினத்தவர்கள். நாம் இங்கு இருப்பது அவர்களது நல்லெண்ணத்தினால். நாம் அவர்களது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மாறாக, வெள்ளையர்கள் வன்முறையினால் அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று காந்தி எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது. கருப்பினத் தலைவர்களான ஸெமே, ட்யூப் போன்றவர்கள் காந்தியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள்.

“இந்தியர்களின் போராட்டங்கள் தரும் பாடங்களை நாங்கள் மறக்க மாட்டோம்’”என்று ஸெமே கூறினார்.

போராட்டங்களின் வடிவங்கள்

1894-ம் ஆண்டு ‘நேடால் இந்திய காங்கிரஸ்’ நிறுவப்பட்ட போது, காந்தி, அரசுக்குக் கடிதங்கள் எழுதி, மனுக்கள் போட்டு, நேரில் அதிகாரிகளைச் சந்தித்து நீதி பெற முடியும் என்று நினைத்தார். 1906-ம் ஆண்டுதான் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சிறை செல்லத் தயார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ‘தலைவர்கள் மட்டும் அல்ல, மக்களும் சேர்ந்து சிறை செல்வோம்’ என்ற அந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது தொடங்கிய சத்தியாக்கிரகம் பல வடிவங்களை எடுத்தது. உரிமம் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது, கைநாட்டு இட மறுப்பது, பதிவுப்பத்திரங்களை எரிப்பது, எல்லையை அனுமதியின்றிக் கடப்பது போன்ற போராட்டங்கள் அறவழியில் வன்முறை ஏதுமின்றித் தனியாகவும் கூட்டாகவும் நடந்தன.

போராட்டத்தின் தீவிரத்தைப் படிப்படியாக உயர்த்துவது, அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வைத்துக்கொள்வது, தேவை ஏற்பட்டால் அரசுடன் எடுத்திருந்த நிலையிலிருந்து சிறிது இறங்கிவந்து ஒப்பந்தம் செய்துகொள்வது, வெற்றி அடுத்த போராட்டத்துக்கு மக்களைக் கொண்டுசெல்லும் படிக்கட்டு என்பதில் தெளிவாக இருப்பது போன்றவை காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் அம்சமாக இருந்திருக்கின்றன. நமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒத்திகைபோல நமக்குத் தோன்றுகிறது. அவரது தென்னாப்பிரிக்கப் போராட்டங்கள் அதிகம் ஏதும் சாதித்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

காந்தியப் போராட்டங்கள் உடனடித் தீர்வுக்காக நடத்தப்பட வில்லை. அவை மனிதகுல விடுதலையை நோக்கி நடத்தப்பட்டவை. இன்று உலகெங்கும், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில், நிறவெறி, நேரடி காலனியாதிக்கம் போன்ற ஏகாதிபத்தியத்தின் போர்வாள்கள் முழுவதும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன என்றால், அதற்கு காந்தியின் போராட்ட முறைகள் முக்கியமான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களிலிருந்து அரேபிய வசந்தத்துக்காகப் போராடியவர்கள் வரை, காந்தியப் போராட்டத்தின் இந்த முக்கியத்துவத்தைத் தெரிந்திருந்தார்கள்.

நண்பர்கள்

காந்திக்குத் துணைநின்றவர்களில் முக்கியமானவர் காலன்பாக். காந்திக்கும் காலன்பாக்குக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி பலவிதங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, அது பாலியல் அடிப்படையைக் கொண்டது என்று ஜோசப் லெலிலாண்ட் எழுதிய புத்தகம் கூறுகிறது. இந்த முடிவு அடிப்படையற்றது என்று குகா ஆதாரத்துடன் மறுக்கிறார். காந்தி, குடும்பத்தைப் பிரிந்து காலன் பாக்குடன் ஜோகனஸ்பர்க் நகரில் தங்கியிருந்தது சமூகப் பொறுப்புகளுக்காக, பாலியல் தூண்டுதல்களால் அல்ல.

குடும்பம்

காந்தியைவிட அவரது குடும்பத்தினர்தான் தென்னாப் பிரிக்காவில் தனிப்பட்ட முறையில் அதிக துன்பங்களை அனுபவித்தனர் என்று சொல்லலாம். அன்னை கஸ்தூர்பா கணவரின் கவனிப்பு இல்லாமலும் பிடிவாதத்தாலும் பல முறை மரணத்தின் வாயில் வரை செல்ல வேண்டிய தாயிற்று. 21 வயது முடிவதற்குள் காந்தியின் புதல்வர் ஹரிலால் சத்தியாக்கிரகம் செய்து நான்கு முறை சிறை சென்றார். இருந்தாலும், காந்தி அவரிடம் பரிவோடு நடந்துகொள்ளவில்லை. அவருடைய மணவாழ்வில்கூட காந்தி பலமுறை தலையிட்டிருக்கிறார்.

மற்றொரு புதல்வரான மணிலால் பிரம்மச்சரி யத்தின் வெப்பத்திலிருந்து விடுபடுவதற்காகத் திருமண மான பெண் ஒருவருடன் உறவுகொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். மனிதர்கள் எல்லோரும் மகாத்மாக்கள் ஆகலாம் என்ற நம்பிக்கையே காந்தியைத் தன்னிடம் நெருக்கமானவர்களை சோதனைகளுக்கு உள்ளாக்க வைத்தது. அவர்கள் விருப்பப்பட்டு சோதனைகளுக்கு இணங்கவில்லை. காந்திமீது கொண்டிருந்த மதிப்பாலும் பயத்தாலும் இணங்கினர். கஸ்தூர்பா சொக்கத்தங்கமாக வெளியே வந்தார் என்றால், ஹரிலாலும் மணிலாலும் சோதனைகளால் மிகுந்த காயப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழரும் காந்தியும்

குகாவின் புத்தகம் முழுவதும் இழையாக வருவது காந்திக்கும் தமிழருக்கும் இடையே இருந்த, பிரிக்க முடியாத உறவு. போராட்டத்துக்காக அவருக்குத் தங்களிடம் இருந்த அனைத்தையும் தந்தவர்கள் தமிழர்கள். ஜோஹனஸ்பர்க் நகரத்தில் நடத்தப்பட்ட கடைசிப் பாராட்டுக் கூட்டத்தில் காந்தி மூன்று இந்தியர்களைக் குறிப்பிட்டார். மூன்று பேரும் தமிழர்கள். காந்தி என்ன பேசினார் என்பதுபற்றி நிருபர் எழுதுகிறார்.

“ஹனஸ்பர்க் வள்ளியம்மையைத் தந்தது, இளம் பெண்ணான வள்ளியம்மையை. அவளது உருவம் என் கண் முன்னால் இப்போது நான் பேசும்போதே நிற்கிறது. உண்மைக் காக உயிரை விட்டவர். ஜோஹனஸ்பர்க் நாகப்பனையும் நாராயணசாமியையும் தந்தது. பதின்பருவத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தவர்கள். உயிரைக் கொடுத் தவர்கள். ஆனால், நானும் திருமதி காந்தியும் இங்கு உயிரோடு நிற்கிறோம்.

நானும் திருமதி காந்தியும் விளம்பரத்தின் வெளிச்சத்தில் வேலை செய்தோம். ஆனால், இவர்கள் திரைமறைவில் வேலை செய்தார்கள் - எங்கு போகிறோம் என்பதுபற்றி அறியாமல், ஆனால் செய்வது சரியானது, செய்ய வேண்டியது என்ற நம்பிக்கையுடன். புகழ் யாருக்காவது உரித்தானது என்றால் உயிரைத் தியாகம் செய்த இந்த மூவருக்கே அது உரித்தானது.”

குஜராத்திகள் மத்தியில் பேசும்போது காந்தி கூறுகிறார்:

குஜராத்தி சகோதரர்கள் எனக்கும் திருமதி காந்திக்கும் உதவிசெய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ச் சமுதாயம் போராட்டத்தை வலுப்பெறச் செய்த அளவுக்கு அவர்கள் செய்யவில்லை என்றுதான் நான் சொல்வேன். குஜராத்திகள் தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அவர்கள் மொழி தெரியாது. ஆனால், அவர்கள்தான் எனக்கு அதிக உதவி செய்தவர்கள்.

தமிழர்கள் மத்தியில் பேசியது:

“எனக்கு மதராஸ்பற்றிக் கொஞ்சம் தெரியும். அங்கு சாதி வேற்றுமைகள் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பது பற்றியும் தெரியும். அந்த வேற்றுமைகளை நீங்கள் இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தென்னாப்பிரிக்கா வந்தது வீண் என்றுதான் கூறுவேன். நீங்கள் யாரும் உயர்ந்த சாதியையோ தாழ்ந்த சாதியையோ சேர்ந்தவர்கள் அல்லர், நீங்கள் எல்லோரும் இந்தியர்கள், தமிழர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”

குகாவின் புத்தகம் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவர வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவன மொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x