Published : 12 Jan 2017 10:58 AM
Last Updated : 12 Jan 2017 10:58 AM

போய் வாருங்கள் ஒபாமா!

அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது.

எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். "பாதி கறுப்பர்தான் ஒபாமா" என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி சொன்னார். "அவர் பாதி வெள்ளையரும்கூட". ஒபாமா ஒரு கறுப்பர் என்று கொண்டாடப்படுகிறார். அவரது கணிப்பு எளிமையானது. ஆழமானது. சின்னதாக நாம் நினைக்கும் உலகின் பாதி அவர். ஒருவர் பெரிதாகச் சிந்திக்கும் உலகின் பாதியும் அவர்தான். ஒபாமா முன்னேறினார். ஒரு அர்த்தத்தில் அவரே முன்னேற்றமாக இருந்தார். அவர் முன்னேறியபோது அவரோடு முன்னேறிய அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல. அரசியல்ரீதியாகப் பரிணமிக்கும் உலகத்துக்கே அவர் முன்னேற்றமாக இருந்தார்.

சங்கடப்படுத்தாத மாற்றம்

ஒபாமா தனது பணிகளைத் தொடங்கிய உடனே எல்லாம் ஆரம்பமாகிவிட்டன. அவரைப் பலவீனப்படுத்த, அத்துமீறித் துளைத்தெடுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. அற்பத்தனமான, வலிதரும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. அவர் பற்றிய எல்லாம் ஆர்வத்தோடு கண்காணிக்கப்பட்டன. என்ன உடுத்துவார், என்ன சாப்பிடுவார், என்ன குடிப்பார், என்ன விளையாடுவார், அவரைப் பற்றி அவரது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது வாழ்வைத் தோண்டிப் பார்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவரைச் சேதப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் அவரது குடும்பத்துக்குள்ளும் கைவரிசை காட்டினார்கள்.

அவர் வெள்ளை அமெரிக்காவை மறுத்து விடாமல், தனது ஆழமான, கறுப்பு வேர்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர் ஆனார். அவர் எதையும் ரொம்ப சங்கடப்படுத்தி விடாமல் மாற்ற நினைத்தார். மிகவும் பிடித்த மான விவகாரங்களை அவர் மாற்ற நினைத்தார். ஆனால், அதேபோல மிகவும் பிடித்தமான விவகாரங்களைச் சங்கடப்படுத்திவிடாமல் மாற்ற நினைத்தார். புதிய வடிவங்களை உருவாக்காமல் அவரால் ஒரு புதிய பார்வை யைச் செதுக்க முடியுமா? அவர் முயற்சி செய்ய விரும்பினார். உண்மையாகவே முயன்றார்.

ட்ரம்ப் வெற்றிக்கான வேர்

வெள்ளை அமெரிக்கர்கள் சகிப்புத்தன்மை யோடு அனைவரையும் வரவேற்க வேண்டும் என்ற வெளிப்படையான பேரார்வத்தை அவர் வெளிப்படுத்தினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் படிக்கும்போது அதன் சட்டப் பள்ளியில் வெளியாகும் 'ஹார்வர்டு லா ரெவ்யூ' இதழின் முதல் கறுப்பின ஆசிரியராக அவர் மாறியபோதே அத்தகைய நடத்தை அவரிடம் வெளிப்பட்டது. அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் அதிபர் என்ற முறையில், அவர் வெளியுறவுக் கொள்கையில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். அதனால், பேரழிவுகள் நடந்தன. குறிப்பாக, சிரியாவில் அவர் தன் கொள்கையைச் சமரசம் செய்துவிட்டார். அதன் விளைவை இன்னும் சிரியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. லிபியா விவகாரத்தில் அவரும் சேர்ந்துகொண்டதைச் சொல்லலாம்.

கழுவ முடியாத கறை

இரண்டு எதிர்மறையான விஷயங்கள் ஒபாமா விடம் இருக்கின்றன. ஒன்று, அவர் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டது. அது முதல் பிறந்த நாளுக்கான பரிசை எட்டே மாதக் குழந்தைக்கு வழங்கியதைப் போல இருந்தது. ஒபாமா அதை மறுத்திருந்தால் அவர் உலகம் முழுவதற்கும் புத்துணர்வு ஊட்டியிருப்பார்.

இரண்டாவதாக, அவர் பொதுமக்களை அதிகமாகக் கொல்லக்கூடிய ஆள் இல்லாத விமானங்கள் போன்ற ட்ரோன் போர்க் கருவி களைப் பயன்படுத்த அனுமதித்தார். அவரால் அந்தக் கறையை எதைக் கொண்டும் கழுவ முடியாது. ஒசாமா பின்லேடனின் கதையை முடித்தது வேறுபட்ட அனுபவம். அது பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணத்தை அளித்த தருணம்தான்.

முயற்சியால் கிடைத்த உயர்இடம்

ஒபாமாவிடம் உள்ள நல்லவை, அவரது சமரசங்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், தவறான முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சிகள், எல்லாவற்றையும் மொத்தமாகக் கணித்தால், பெரும் முயற்சியால் உயர்ந்த இடத்துக்குப் போனவராக உலகம் அவரைப் பார்க்கும். பல விஷயங்களை முதல்தடவையாகச் செய்தவர் என்ற இடத்தை விதி அவருக்குத் தந்துள்ளது.

2015 ஜூன் மாதத்தில் இம்மானுவேல் மெத டிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் அவர் பேசியதுதான் அவர் பேசியவற்றிலேயே மனத்தைத் தொட்ட உரை. அந்தத் தாக்குதலை நடத்திய 21 வயது இளைஞர் டைலான் கைது செய்யப்பட்டிருந்தார். தனது பேச்சை "தேவ மாதா" என்று தொடங் கினார் ஒபாமா. "உண்மையில், இது தேவாலயத் துக்கும் மேலான இடம். சுதந்திரத்தைத் தேடிய ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் நிறுவிய வழிபாட்டுத்தலம் இது. அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக உழைத்தவர்களால் கட்டப்பட்ட தால் இது எரித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. கறுப்பின மக்கள் தேவாலயங்கள் கட்டி வழிபடுவதைச் சட்டங்கள் தடைசெய்த காலம் அது. அவர்கள் தேவாலய வழிபாடுகளை ரகசியமாகச் செய்தனர். வன்முறை இல்லாத இயக்கம்தான் உயர்ந்த லட்சியங்களை நோக்கி நாட்டைக் கொண்டுசென்றது. நமது உயர்வான தலைவர்கள் இந்தத் தேவாலயத்திலிருந்துதான் நீண்ட நடைப் பயணங்களைத் தொடங்கி னார்கள்" என்றார் அவர்.

திருப்பியடித்தலும் மரபும்

"கறுப்பின மக்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. இனங்கள், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ள வெறுப்பு நமது ஜனநாயகத்துக்கும் லட்சியங்களுக்கும் ஆபத்தாக இருக்கிறது. ஆனாலும், அனைத்து இனங்களிலிருந்தும், அனைத்து நம்பிக்கைகளிலிருந்தும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலிருந்தும் ஒற்றுமையும் அன்பும் பீறிட்டுக் கிளம்பும் என்று நான் நம்புகிறேன். கசப்பையும் வெறுப்பையும் அது முறியடிக்கும்" என்றார் அவர்.

ஒபாமா ஒரு தவறு செய்தார். பிளவுகளை இணைப்பதற்கு முயல்கிறபோது, அவருக்குப் புலப்படாமல் இருந்த வெள்ளையர் இனத் தொழிலாளர்களுக்கு அது பிடித்தமானதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார். அமெரிக்க மக்களின் முன்னேற்றம், உலகமயம், தொழில்நுட்பப் புரட்சியில் அந்தத் தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டதை அவர் பார்க்கத் தவறினார். அதன் பயனைத்தான் அவர் அனுபவித்தார். அமெரிக்கா குடியரசுக் கட்சியைத் தேர்வு செய்தது. அது அதிபர் மாற்றம் மட்டுமல்ல. கருத்துகளின் மாற்றமும்தான். அவரது அதிபர் காலகட்டத்துக்கு எதிரான பின்விளைவு இனரீதியாக இருந்தது. ட்ரம்ப் தேர்வானார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் ஒரு முரண்நகை உண்டு. எழுத்தாளர் நடைன் கார்டிமர் கோட்பாடு என்று இதை அழைக்கலாம். அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்கான தொடக்க மாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது. தலைகீழாகப் போகிற இந்த மாற்றம் அதிலிருந்து மீளுமா? தனது பாதையில் முன்னேறுமா?

ஏங்குகிறேன்

அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் இது முக்கியம்தான். இந்தியர்கள் நாம் ஒபாமா வெற்றியைக் கொண்டாடினோம். மாற்றம் பற்றி அவர் பேசியதை ஆசையோடு ஆதரித்தோம். இந்தியாவில் உள்ள 'ட்ரம்ப்கள்' வாழ்க்கைக்கு எந்தச் சிரமமும் ஒபாமாவால் ஏற்படவில்லை. நான் ஒரு இந்திய ஒபாமாவுக்காக ஏங்குகிறேன். எந்த ஒரு பக்கச் சார்பு எடுக்காதவராக, மிச்சமிருக்கிற சந்தேகத்தையும் வெறுப்பையும் தூர எறிந்துவிட்டு, நாம் எப்படிக் கடந்து செல்வது என்பதைச் சொல்பவராக இருக்கிற ஒபாமாவுக்காக நான் ஏங்குகிறேன். ஒபாமா தொடங்கியுள்ள அவரது மரபு, ஒரு மெழுகுவத்தியின் ஒளிபோல இருளோடு போராடும். தனித்தன்மையோடு அது ஒளிரவே செய்யும். மனித இனத்தில் ஒரு அரசியல் ஆன்மிகவாதி அதிகாரத்தில் இருந்தார் என்று வருத்தத்தின் வலியோடு உலகம் நினைவுகூரும்.

- கோபாலகிருஷ்ண காந்தி, அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். மே.வங்கத்தின் முன்னாள் ஆளுநர்.

© 'தி இந்து' ஆங்கிலம் | சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x