Published : 08 May 2017 09:18 AM
Last Updated : 08 May 2017 09:18 AM

இப்படிக்கு இவர்கள்: அரசியல் லாபங்களுக்கு அம்பேத்கரைப் பயன்படுத்த வேண்டாம்!

டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டியை ‘5 கேள்விகள் - பதில்கள்’ பகுதியில் படித்தேன். இடஒதுக்கீடு பற்றிய அவரது கருத்துகளில் நான் முரண்படுகிறேன். ஒருவர் ஒரு கருத்தைச் சரியென்று கூறி, அதில் உறுதியாக இருக்கும்போது, அதைப் பற்றி விமர்சனம் செய்வதே சரியான விமர்சனமாக இருக்க முடியும். அம்பேத்கருக்கு புணே ஒப்பந்தத்தில் உடன்பாடு கிடையாது. அவர் கையெழுத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது, தற்போதைய தேர்தல் இடஒதுக்கீட்டு முறையை ஏற்றுக்கொண்டார் என்று அம்பேத்கரைக் குற்றம்சாட்டுவது தவறு.

கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என்று மூன்று வகைகளில் தற்போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகள் அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டவை. அரசியல் இடஒதுக்கீடு யாரும் எந்தக் கோரிக்கையும் வைக்காமலே நாடாளுமன்றத்தால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்பைப் பயன்படுத்தித் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, தற்போது அதைக் குறைசொல்வதில் எந்த தார்மிக நியாயமும் இல்லை.

எங்களைப் பட்டியல் சாதிகளின் பிரிவில் சேர்த்தது தவறு என்கிறார் கிருஷ்ணசாமி. அவர் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பட்டியல் சாதிகள் என்ற பிரிவை உருவாக்கியது சைமன். 1928-ல் இந்தியாவுக்கு சைமன் கமிஷன் வந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய உரிமைகளை வழங்கிய பிறகுதான் இந்தியாவுக்கு டொமினிக் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து உருவாக்கப்பட்ட பட்டியல் அது. ஏறக்குறைய இரண்டாண்டு காலம், 700-க்கும் மேற்பட்ட சாதிகள் பரிசீலிக்கப்பட்டு, இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டது. எங்களைப் பட்டியல் சாதியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சைமன் கமிஷனில் யார் மனு கொடுத்தார்கள்?

அவர்களின் முப்பாட்டன்கள் யாரோ சைமனிடம் மனு கொடுத்ததால்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.ஒரு தலித் தலைவருக்கு இந்த வரலாறு எப்படித் தெரியாமல் போனது? மிக முக்கியமாக, கிருஷ்ணசாமி ஒட்டுமொத்த சமூகத்தன்மையைப் புரிந்துகொள்ளவில்லை. எந்தப் பெயர் வைத்துக்கொண்டாலும் சமூகம் ஒடுக்கப்பட்டவனாகத்தான் பார்க்கிறது என்பதுதான் உண்மை. அடித்தட்டு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை வலியுறுத்திய அம்பேத்கரை அரசியல் லாபங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். வட்டமேஜை மாநாட்டில் காந்தியிடம் அம்பேத்கர் கேட்ட அந்தக் கேள்விதான் நினைவுக்கு வருகிறது, ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் என்ன ஒற்றைப் பிரதிநிதியா?’

- செ.கு.தமிழரசன், மாநிலத் தலைவர், இந்தியக் குடியரசுக் கட்சி.



வருண ஜப ஹோமம்... கோயில் அதிகாரி விளக்கம்!

மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் மற்றும் ஏஎம்என் குளோபல் நிறுவனம் சார்பில் கபாலீஸ்வரர் கோயில் திருக்குளத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு வருண ஜபம் நடத்தப்பட்டது. நிறைவு நாளான 6-ம் தேதி மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் ஏஎம்என் குளோபல் நிறுவனம் வருண ஜப ஹோமம் நடத்தியது.

இதில்தான் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டார். இத்தகவலை கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான த.காவேரி தெரிவித்துள்ளார்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x