Published : 04 Sep 2018 09:01 AM
Last Updated : 04 Sep 2018 09:01 AM
கேரளத்தில் வெள்ளம் வடிந்து, இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், வேறுவிதமான பாதிப்புகள் மக்களை வாட்டியெடுக்கின்றன. அசுத்தமடைந்துவிட்ட தண்ணீர் மூலம் பலதரப்பட்ட தொற்றுநோய்கள் மக்களிடம் பரவிவருகின்றன. அவற்றுள் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல்தான் அனைவரையும் அச்சமூட்டுகிறது. இந்த வாரம் மட்டும் இந்தக் காய்ச்சலால்
300-க்கும் மேற்பட்டோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்க இருக்கும் சூழலில், தமிழகத்துக்கும் சேர்த்து இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கையாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.
எலிக்காய்ச்சல் பரவுவதற்கு முக்கியக் காரணமே தெருக்களில் தண்ணீர் தேங்குவதுதான். தமிழகத்திலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இயற்கை தந்த நீராதாரங்கள் அனைத்தும் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறிவிட்ட காரணத்தால், கனமழை பெய்தாலே, தண்ணீர் வடிய வழியில்லாமல், தெருக்களெல்லாம் குளங்கள் ஆகிவிடுவதைப் பார்க்கிறோம். எனவே, நாம் அலட்சியமாக இருக்க முடியாது!
எலிக்காய்ச்சல் எச்சரிக்கை
‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகளின் பாதிப்பால் ஏற்படுகிறது, எலிக்காய்ச்சல். இந்தக் கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம். என்றாலும், ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்ற பல விலங்குகளிடமும் இந்தக் கிருமிகள் காணப்படுவது உண்டு. இவற்றின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் வெளியேறுவது வழக்கம். கனமழை பெய்யும் இடங்களில் வடிகால் அமைப்பு சரியில்லை என்றால், மழை நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கும். வீட்டில் வாழும் எலிகள் அந்தத் தண்ணீருக்கு வரும். அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும். காலில் காலணி அணிவது போன்ற தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேங்கிய தண்ணீரிலும் மண் சகதியிலும் மக்கள் நடக்கும்போது, பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும்.
அறிகுறிகள் என்ன?
கடுமையான குளிர் காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஒரு வாரம் வரை தொல்லை கொடுக்கும். இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறி. பலருக்கும் இத்துடன் நோயின் அறிகுறிகள் மறைந்து, நோய் குணமாகிவிடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும். நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் பயணம் செய்து, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை போன்றவற்றுக்குப் பரவி, அந்தந்த உறுப்புகளையும் பாதிக்கும். அப்போது அடுத்தகட்ட அறிகுறிகள் தோன்றும்.
எந்த உறுப்பைக் கிருமிகள் பாதிக்கின்றனவோ அதைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும். எடுத்துக்காட்டாக, கல்லீரல் பாதிக்கப்பட்டவருக்கு, மேற்சொன்ன அறிகுறிகளுடன் மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் வீக்கமடையும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், சிறுநீர் பிரிவதில் பிரச்சினை உண்டாகும். அப்போது கால், கை, முகம், வயிறு வீங்கும். மூளை பாதிக்கப்பட்டால், மூளைக் காய்ச்சலுக்கு உரிய எல்லா அறிகுறிகளும் தோன்றும். நுரையீரல் பாதிக்கப்படும்போது நிமோனியா நோய் வந்து, இருமல், இளைப்பு வரும். இரைப்பை பாதிக்கப்படும்போது ரத்த வாந்தி வரும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்தில் ரத்தம் வெளியேறும். இது இதயத்தைத் தாக்கினால், நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இந்த நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவருக்குக் கல்லீரலும் சிறுநீரகமும் மோசமாகும். இதற்கு ‘வியில்ஸ் நோய்’ என்று பெயர். மஞ்சள்காமாலைதான் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். சிலருக்கு ரத்த உறைவுக் கோளாறுகளும் சேர்ந்துகொள்ளும். இந்தக் கிருமிகள் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இந்த நோய் வந்த 100 பேரில், 30 பேருக்கு மரணம் நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு மோசமான நோய் இது. ‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test – MAT) எலிக் காய்ச்சலை உறுதிசெய்ய உதவுகிற முக்கியமான பரிசோதனை. இத்துடன் பொதுவான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகள், கல்லீரலுக்குரிய பரிசோதனைகள், சிறுநீரகப் பாதிப்பை அறியும் பரிசோதனைகள், ஐஜிஎம் எலிசா பரிசோதனை (IgM ELISA Rapid Test), பிசிஆர் பரிசோதனை (Real time DNA PCR Test), முதுகுத் தண்டுவட நீர்ப் பரிசோதனை ஆகியவை இந்த நோயை உறுதிசெய்யவும் இதன் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
என்ன சிகிச்சை?
இந்த நோய்க்குப் பலதரப்பட்ட நோய்முறி மருந்துகள் உள்ளன. நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் இதைக் குணப்படுத்திவிடலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முறைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். மேலும், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றிலும் பாதிப்பு இருந்தால், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தரப்படும். மழைக் காலங்களில் மட்டும் முன்னெச்சரிக்கையாக, டாக்சிசைக்ளின் 200 மி.கி. மாத்திரையை வாரத்துக்கு ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால், எலிக்காய்ச்சல் வருவதைத் தடுக்கவும் முடியும்.
ஆரம்பகட்ட அறிகுறிகள் சாதாரண வைரஸ் காய்ச்சல் போலவே இருப்பதால், பெரும்பாலானோர் நோயைச் சரியாகக் கவனிக்கத் தவறுகின்றனர். மேலும், இந்த நோயின்போது காமாலை ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், அதை சாதாரண மஞ்சள் காமாலை என்று நினைத்து வீட்டுச் சிகிச்சைகளில் இறங்கிவிடுகின்றனர். இதனால், இந்த நோய்க்கான முறையான சிகிச்சை உடனே கிடைக்க வழியில்லாமல், நோயை அகோரப்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, பருவ மழை தொடங்கும் முன்பே, மாநில சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்குத் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதிலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கழிமுகங்கள் ஆகியவற்றில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் தூர் வாருவதும் முக்கியம்.
தெருக்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களைச் சுத்தப்படுத்தி, மழைக்காலத்தில் அவை அடைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் நோய்ப் பாதுகாப்பு, அரசு எடுக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT