Published : 07 Jun 2019 09:31 AM
Last Updated : 07 Jun 2019 09:31 AM

இப்படிக்கு இவர்கள்: தண்ணீருக்காகத் தவமிருக்கும் தமிழகம்

தண்ணீருக்காகத் தவமிருக்கும் தமிழகம்

தண்ணீர் சிக்கனம் குறித்த ‘இந்து தமிழ்’ நடுப்பக்கக் கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டிச் செயல்பட வைக்கின்றன.  மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று அறிஞர்கள் நம்மைப் பதறவைக்கிறார்கள். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது என்றார்கள் நம் முன்னோர். ஆறாகத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய தெருக்கள் இன்று லாரிகளுக்காகத் தவமிருந்து காத்திருக்கின்றன.

கோடையிலும் வற்றாத ஜீவநதி தாமிரபரணி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பொலிவிழந்து நிற்கிறது. ஒருபக்கம் தண்ணீர் இல்லை என்ற வருத்தக் குரல், மறுபுறம் இருக்கும் வளத்தைக் காக்கத் தெரியாத மெத்தனம். இரண்டாம் தரப்பு தன் கடமையை உணர்ந்துகொள்ள வேண்டியதையே ‘இந்து தமிழ்’ பக்கங்கள் உணர்த்துகின்றன. தேவைக்கு அதிகமாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொட்டு நீரும் நம்முடையது அல்ல எனும் உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

இளம் மனங்களில்

தண்ணீர்ச் சிக்கனத்தை விதைக்கிறேன்

அழகான வண்ணப் படங்களுடன், முக்கியமான தரவுகளுடன் வெளிவரும் ‘இந்து தமிழ்’ தண்ணீர்ப் பக்கங்கள் மிகச் சிறப்பு. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விஷயங்கள் நாம் ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால், அது நம் பழக்கத்தில் இல்லை. ‘இந்து தமிழ்’ நாளிதழும் இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான், சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

இந்தப் பக்கங்கள் எனக்குப் புத்துயிரூட்டி இருக்கின்றன. இளமையில் விதைக்க வேண்டும் என்ற எனது நம்பிக்கைக்கு உயிரூட்டியிருக்கின்றன. அது பழக்கமாகி நம் சுபாவத்தில் புகுந்துகொண்டால், பிறகு அது என்றென்றும் தொடரும். நான் எங்கள் பள்ளியில் மாணவர்களிடம் இந்தப் பக்கங்களை வாசித்துக்காட்டியும், மாணவர்களைப் படிக்கச்சொல்லி அறிவுறுத்தியும் வருகிறேன். தண்ணீரைச் சேமிப்போம்!

- மா.பழனி, சின்னப் பள்ளத்தூர்.

ஜனநாயகக் கனவு கரைந்துபோகாது

வாங் டேனின் ‘தியானன்மென் சதுக்கத்தில் கரைந்த ஜனநாயகக் கனவு!’ கட்டுரை மனதை நெருடியது. தன் தேசத்தில் ஜனநாயகம் மலர வேண்டும் எனும் உயரிய கனவோடு சுயநலம் கருதாமல் வாங் டேன் தன் எதிர்கால வாழ்க்கைக் கனவைக் கலைத்து, எதிர்ப்புகளை எதிர்த்து, தாயை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார். போராட்டத்தின் 30-ம் ஆண்டு நினைவுநாளில் அவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

அவரது தலைமுறையைக் காட்டிலும் இப்போது இன்னும் உக்கிரமாகத் தொடரும் சீனாவின் நடைமுறையைச் சூசகமாக உணர்த்தியிருந்தார். இளம் தலைமுறைக்காகக் கரிசனப்பட்டிருந்தார். அவரையும் அவரைப் போலப் பலரும் ஜனநாயகத்துக்காகத் தங்கள் முகவரியைத் தொலைத்திருக்கிறார்கள். அவர்களது கனவுகளெல்லாம் காலம் கடந்தேனும் நிகழ்ந்தேறியிருக்கிறது. வாங் டேனின் கனவும் பலிக்கும். இந்தியாவின் தென்கோடியிலிருந்து வாங் டேனுக்கு ஒரு சல்யூட்!

- வேணிமைந்தன், நாகை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x