Published : 30 May 2019 09:23 AM
Last Updated : 30 May 2019 09:23 AM
சாதியத்தின் கொடூரம்
தனது பழங்குடி இனத்தின் முதல் மருத்துவராகப் பெருமிதத்தோடு வலம்வந்த பாயல் சாத்வியை சாதியம் கொன்றுவிட்டது. பாயல் சாத்வி தனது மூன்று சக பெண் மருத்துவர்களால் சாதிரீதியான ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கழிப்பறைக்குச் சென்றுவிட்டு பாயலின் போர்வையில் கால் துடைப்பது, எச்சில் துப்புவது, வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவது என்று சொல்லக் கூசும் பல அநாகரிகமான செயல்களில் இறங்கியிருக்கிறார்கள் அந்தப் பெண் மருத்துவர்கள். ‘இடஒதுக்கீட்டில் வந்தவள்’ என்று பிரசவம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல்லாமும் வாட்ஸ்அப்பில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்திய மருத்துவக் கழகமோ இன்னும் பூசி மெழுகிக்கொண்டிருக்கிறது.
விமானத்துக்குச் சவால்விடும் ரயில்
‘சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வெறும் ஒரு மணி நேரத்தில் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று யாராவது கேட்டால், ‘பகல் கனவு காணாதே’ என்போம். ஜப்பானியர்கள் அதைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ‘என்700எஸ்’ மாடல் புல்லட் ரயில் ஒன்று ஜப்பானில் தயாராகிக்கொண்டிருக்கிறது. வெள்ளோட்டத்தின்போது சாதனை அளவாக மணிக்கு 360 கிமீ வேகத்தைத் தொட்டிருக்கிறது! ஜூலையில் இது செயல்படத் தொடங்கும்போது, மணிக்கு 285 கிமீ வேகத்தில் இயங்கும் என்கிறார்கள். வேகம் மட்டும் அல்ல இலக்கு; அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள், விபத்துகள் போன்றவற்றை உத்தேசித்துப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்த புல்லட் ரயிலில் செய்திருக்கிறார்கள். சோதனை ஓட்டத்தை பார்த்தவர்கள், ‘புல்லட்டே இவ்வளவு ஸ்பீட்ல போகாதுபோல. பெயரை மாத்துங்கப்பா’ என்று மலைக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT