Last Updated : 31 Mar, 2019 08:19 AM

 

Published : 31 Mar 2019 08:19 AM
Last Updated : 31 Mar 2019 08:19 AM

திருமாவளவனைத் தோற்கடித்த திருமாவளவன்!

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமையின் அடிப்படையிலானது. அதேசமயம், தேர்தல் தந்திரங்களில் ஒன்றாக, சுயேச்சைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. பிரபல வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்தி வாக்காளர்களைக் குழப்புவதுதான் அந்தத் தந்திரம். வாக்காளர்கள் குழப்பமடைந்து ஓட்டை மாற்றிப் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த உத்தியை அரசியல் கட்சிகள் பின்பற்றிவருகின்றன. அரதப் பழசான இந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெயர்க் குழப்பம் காரணமாக ஒரு பிரபல வேட்பாளர் தோற்கும் நிலை ஏற்பட்டது. அவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் மக்கள் நலக் கூட்டணி சார்பில் களமிறங்கினார். அந்தத் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் திருமாவளவன் தோல்வியடைந்தார். அந்தத் தொகுதியில் டி.திருமாவளவன் என்ற சுயேச்சை வேட்பாளர் களமிறங்கி 289 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஒரு வேளை அந்த வாக்குகளில் 50% திருமாவளவனுக்குக் கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார்.

அதே தேர்தலில், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில், இரண்டு சுயேச்சைகள் களமிறங்கினர். மூன்று விஜயகாந்துகளும் தோல்வியடைந்தனர். 2014 தருமபுரி மக்களவைத் தொகுதியிலும் அன்புமணி என்ற பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்டு 1,370 வாக்குகளைப் பெற்றிருந்தார். தேர்தல் விநோதங்களுக்குப் பஞ்சமேயில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x