Published : 11 Dec 2018 08:37 AM
Last Updated : 11 Dec 2018 08:37 AM

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட அரசுக்குத் தயக்கம் ஏன்?

டெல்லி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர சட்டமியற்றப்போவதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மாதம் அறிவித்தார். அதற்கான சட்ட மன்றத் தீர்மான நகல் முன்மொழிவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல், ஆந்திர அரசும், கேரள அரசும் இதற்கென ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்துள்ளன. வங்கத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே இன்றும் தொடர்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தால் எதிர்காலத்தை இழந்துநின்ற அரசு ஊழியர்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பளித்து இந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை இவை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு 20.12.2003 தேதியிட்டு நிர்வாக ஆணை மூலமாக 1.1.2004-லிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், 2014 செப்டம்பர் 4-ல்தான் மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் 1.4.2003-லேயே புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. சரி, ஏன் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் எதிர்க்கிறார்கள்?

ஓய்வூதியத்தின் நிச்சயமின்மை

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியிலிருந்து 10% பிடித்தம் செய்யப்படும். அரசு 10% பணத்தைப் போடும். அதற்குரிய வட்டியையும் (தற்போது 8%) அரசு கொடுக்கும். இதை நிர்வகிக்க ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை நிர்வகிக்க பொதுத் துறை மற்றும் தனியார் நிதி மேலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். யூடிஐ, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்டவற்றின் நிதி மேலாளர்கள் அந்த நிதியைப் பங்கு மூலதனத்தில் போடுவார்கள். பங்குகளின் மதிப்பீடு சந்தையில் உயர்ந்தால் சேமிப்புக்கான வட்டி உயரும். பங்குச் சந்தையின் மதிப்பீடு வீழ்ந்தால், சேமிப்பு மதிப்பும் வீழ்ச்சியடையும். ஊழியர்களின் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை என்கிறது ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய விதி (பிஎஃப்ஆர்டிஏ).

மேலும், ஒருவர் பணி ஓய்வுபெற்றால் போட்ட பணம் முழுவதும் கிடைக்காது என்பது முக்கியமான பிரச்சினை. சேமிப்பில் 60% மட்டுமே கையில் கிடைக்கும். விருப்ப ஓய்வு பெற்றால் 20% மட்டுமே கிடைக்கும். ஒரு ஊழியரின் பங்களிப்பு, அரசின் பங்கு என்று மொத்தம் ரூ.10 லட்சம் சேர்த்திருந்தால், அந்த ஊழியருக்குக் கையில் ரூ.6 லட்சம் கிடைக்கும். எல்ஐசி ஓய்வூதிய ஆண்டுத்தொகைத் திட்டத்தில் ரூ.4 லட்சம் போடப்படும்.

இந்தத் திட்டத்தில் பல வகைகள் உண்டு. ஊழியருக்கு மட்டும் என்றால் பணம் சற்று அதிகமாகவும், அவருக்குப் பின் அவரது மனைவிக்கும் வாரிசுக்கும் என்றால் மிகக் குறைவாகவும் கிடைக்கும். எப்படி இருந்தாலும் முதல் 7 ஆண்டுகளுக்கு வட்டி 8%-க்குக் குறைவாகவே இருக்கும். ஒரு உதாரணம்: ரயில்வே ஊழியர் ஒருவர் 2008-ல் இறந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் அவரது பணி அவரது மனைவிக்கு வழங்கப்பட்டது. 10 வருடம் பணி முடித்து அந்தப் பெண் ஓய்வுபெற்றார். அவருடைய அடிப்படைச் சம்பளம் ரூ.31,000. அவர் சேமித்த தொகை ரூ.5,93,000. கைக்குக் கிடைத்தது ரூ.3,80,000. அதாவது 60% கைக்குக் கிடைத்தது. மீதி 40% தொகையான ரூ.2,13,000 ஆண்டுத்தொகைத் திட்டத்தில் போடப்பட்டது. வாரிசு இல்லாததால் தனக்கு மட்டுமே வாழ்நாள் முழுவதற்கும் ஓய்வூதியம் கேட்டிருந்தார். தற்போது அவருக்குக் கிடைக்கும் மாத ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.1,200 மட்டுமே!

சாத்தியமற்ற நடைமுறை

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால், அவர் வாங்கிய அடிப்படை சம்பளத்தில் பாதித் தொகை, அதாவது ரூ.15,500 மாத ஓய்வூதியமாக அவருக்குக் கிடைத்திருக்கும். இதற்குப் பஞ்சப்படியும் உண்டு. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, இந்த ஊழியர் ரூ.15,500 மாத ஓய்வூதியமாகப் பெற வேண்டும் என்றால் ஆண்டுத்தொகைத் திட்டத்துக்காகக் குறைந்தபட்சம் அவர் ரூ.21,37,500-ஐச் சேமித்திருக்க வேண்டும். மத்திய அரசின் குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.9,000 பெற வேண்டும் என்றால் ரூ.10,00,000 சேமிக்க வேண்டும். எந்தக் கடைநிலை ஊழியராலும் இந்தப் பணத்தைச் சேர்க்கவே முடியாது. வாரிசுகளின் கல்வி, திருமணம், மருத்துவம் என்று கடன் வாங்கியிருந்தால் நிலைமை என்னவாகும்? இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மாநில அரசு ஊழியர்கள் பணியின்போது இறந்தால் குடும்ப ஓய்வூதியமோ, பணிக்கொடையோ கிடையாது. மத்திய அரசு ஊழியர் பணியிலிருக்கும்போது மரணமடைந்தால் குடும்ப ஓய்வூதியமும் பணிக்கொடையும் சட்டப்படி கிடைக்கும். எவ்வளவு வேறுபாடு பாருங்கள்!

புதிய ஓய்வூதியத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்த நியாயமான எதிர்ப்பை உணர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2011 தேர்தலின்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதியத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று உறுதிமொழி வழங்கினார். ஆனால், அது நிறைவேறவில்லை. பின்னர், அரசு ஊழியர் - ஆசிரியர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர 2016-ல் வல்லுநர் குழுவை அமைத்தார். ஏழு முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு 27.11.2018-ல் தன் பரிந்துரையை வழங்கியிருக்கிறது அந்தக் குழு.

அரசு மனதுவைக்க வேண்டும்

இந்தக் காலகட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5,06,000 பேர் சேர்ந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து 31.3.2018 வரை ரூ.22,981 கோடி பணம் பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஒய்வு பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,768. ‘அரசிடம் இதற்கு மேல் எந்த நிதியையும் (ஓய்வூதியம்) கோர மாட்டோம், வழக்கும் போட மாட்டோம்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு அவர்கள் சேர்த்த மொத்த முழுப்பணமும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தக் காலகட்டத்தில் பணியின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றி தகவல் இல்லை என்றும் அரசு கூறியுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் இவை.

1950-ல் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோது அன்றிருந்த பங்களிப்பு வைப்பு நிதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசே சுழல் நிதியாக வைத்துக்கொண்டது. மத்திய அரசில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் 19 லட்சம் பேர். வட்டியையும் சேர்த்து 31.7.2018 கணக்கின்படி, அரசு வழங்கிய பணம் ரூ.91,005 கோடி. எல்லா மாநிலங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மொத்தம் 59 லட்சம் பேர் ரூ.1,26,220 கோடி சேர்த்துவைத்துள்ளார்கள். எனவே, மத்திய - மாநில அரசு ஊழியர்கள் சேர்த்துவைத்துள்ள ரூ.2,17,225 கோடியை சுழல் நிதியாக வைத்துக்கொண்டு செலவில்லாமலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு மாற முடியும். அதன் மூலம் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, அரசும் பயனடையும். அர்ஜென்டினா, பிரேசில் போன்ற நாடுகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய அரசு ஊழியர்கள் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதோ, நம் நாட்டில் ஜனவரி 8, 9 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தவிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். இங்கும் அந்த வெற்றி சாத்தியமாகட்டும்!

- எம்.துரைபாண்டியன், பொதுச்செயலாளர்,

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்.

தொடர்புக்கு: dpandian416@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x