Published : 06 Nov 2018 08:44 AM
Last Updated : 06 Nov 2018 08:44 AM

நதிகள் இணைப்பால் நன்மையா, தீமையா?

நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாகப் பலரும் பேசிவரும் நிலையில், தேசிய நதிகள் இணைப்புத் திட்டம் (என்ஆர்எல்பி), ஆறுகளில் நீரோட்டத்தைக் குறைப்பதுடன் வண்டல்மண் படிவதையும் வெகுவாகக் குறைத்துவிடும் என்று எச்சரிக்கிறது கொலராடோ பல்கலைக்கழக ஆய்வு. இத்திட்டத்தால் கரும்பு, நெல், கோதுமை, மஞ்சள், புகையிலை உள்ளிட்ட பயிர்கள் விளையும் வளமான படுகைகள் பாதிக்கப்படுவதுடன் கடலோரங்களில் கரை அரிப்புகள் அதிகரித்துவிடும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதனால் நதிநீர்ப் படுகைகளில் வசிக்கும் 16 கோடி மக்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்படும்.

நதிகளை இணைப்பதற்காகவும் புதிய பகுதிகளுக்குப் பாசன நீரைக் கொண்டு செல்வதற்காகவும் ஏராளமான வாய்க்கால்களுக்கு இந்தத் திட்டம் வழி வகுக்கிறது. அது மட்டுமின்றி புதிய அணைகளும் நீர்த்தேக்கங்களும் கட்டப்படவுள்ளன.

மிகப் பெரிய 29 வாய்க்கால்கள் 9,600 கி.மீ. நீளத்துக்கு வெட்டப்படவுள்ளன. இவற்றில் 245 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் பாயும். இந்தத் திட்டத்தை அமல் செய்யும் ‘தேசிய தண்ணீர் வள முகமை’யிடம் பெற்ற தரவுகளின் அடிப்படையில், இந்த அளவு கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் வெவ்வேறு அமைப்புகளிடமிருந்து 500 ஆவணங்கள் பெறப்பட்டுப் பரிசீலிக்கப்பட்டன. இந்தத் திட்டம் முழுமையான பிறகு மொத்தமுள்ள 29 ஆறுகளில் 23 ஆறுகளில் நீரோட்டம் கணிசமாகக் குறைந்துவிடும்.

கங்கை நதியில் 24% நீரோட்டம் குறையும். அதன் துணையாறுகளான கண்டக் (-68%), காகடா (-55%) மிகவும் பாதிக்கப்படும். பிரம்மபுத்திரா நதியில் 6% நீரோட்டம் குறையும். அதன் துணை ஆறுகள் மானஸ் (-73%), சங்கோஷ் (-72%), ரைதக் (-53%) மிகவும் பாதிக்கப்படும். அணைகளிலும் தடுப்பணைகளிலும் வண்டல் தடுக்கப்படுவதால் படுகைக்கு வண்டல் வருவது வெகுவாகக் குறைந்துவிடும்.

கங்கை-பிரம்மபுத்திரா டெல்டாவில் மட்டும் வண்டல் படிவது 30% - அதாவது ஆண்டுக்கு 2.5 மில்லி மீட்டர் சராசரியாகக் குறைந்துவிடும். இதனால் கழிமுகங்களுக்குச் செல்லும் மணல் குறைந்து கடலோரத்தில் அரிப்பு அதிகமாகும். கடல் நீர்மட்ட உயரம் அதிகரிக்கும். கடல்நீர் ஆண்டுதோறும் 5.6 மில்லி மீட்டர் இப்பகுதியில் உயரும் என்று கணிக்கப்படுகிறது.

இணைப்பில் சிக்கும் எல்லா ஆறுகளிலும் இந்த இழப்புகள் இருக்கும். ஏற்கெனவே இயற்கையான காரணங்களாலும் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளாலும் கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் கரைகள் அரிக்கப்பட்டுவருகின்றன. ஆனால், இத்திட்டத்தால் காவிரியில் மட்டும் 33% நீரோட்டம் அதிகரிக்கும். காரணம் அதன் துணையாறான பெண்ணாறில் 450% அளவுக்கு நீரோட்டம் அதிகரிக்கும். வண்டல் படிவு அளவில் மாற்றம் இருக்காது.

இயற்கையான நீரோட்டங்களுக்கு மாறாக, செயற்கையாக ஆறுகளை இணைப்பதால் வளமான வேளாண்மைப் பகுதிகள் புயல்-மழைத் தாக்குதல்களுக்கும், வெள்ளப் பெருக்குக்கும், நீர்ப்பெருக்கு குறைந்த காலத்தில் உப்பு நீர் உள்ளே புகுவதற்கும் இரையாக நேரிடும். இதனால் நதிகளின் படுகைப் பகுதிகள் தவறான திசைக்குத் தள்ளப்படும் என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

தமிழில்: சாரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x