Last Updated : 05 Nov, 2018 09:30 AM

 

Published : 05 Nov 2018 09:30 AM
Last Updated : 05 Nov 2018 09:30 AM

பன்றிக் காய்ச்சல்: அலட்சியம் வேண்டாம்!

மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்டவர்கள் 22,186 பேர். 1,094 பேர் பலியாயினர். இந்த ஆண்டில் இதுவரை 50,000-க்கும் அதிகமானோர் இந்தக் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இது ஓர் உயிர்க்கொல்லி நோய் இல்லை. எளிதாகத் தடுத்துவிடக்கூடியதுதான். நம்மிடம் போதுமான எச்சரிக்கை விழிப்புணர்வு இல்லை என்பதுதான் பிரச்சினை.

எது பன்றிக் காய்ச்சல் ?

‘பன்றிக் காய்ச்சல்’ மாசடைந்த காற்று மூலம் பரவும் தொற்றுநோய். இது பன்றியிடமிருந்து மனிதருக்குப் பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்துதான் இது மற்றவர்களுக்குப் பரவுகிறது. ‘ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸ்’ எனும் வைரஸ் கிருமி மனிதரைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் வருகிறது. மற்ற பருவக் காலங்களைவிட, மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது.

எப்படிப் பரவும்?

நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் அடுத்தவர்களுக்குப் பரவக்கூடியவை. ஆகவே, காற்றில் பரவும் மற்ற தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது. இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மூன்று வகை நோயாளிகள்

சாதாரண ஃபுளு காய்ச்சலைச் சேர்ந்ததுதான் பன்றிக் காய்ச்சல். இதன் அறிகுறிகளை வைத்து நோயாளிகளை மூன்று வகைப்படுத்துகின்றனர் மருத்துவர்கள். முதல் வகையில் மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரியும். இவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்காது. எனவே, ரத்தப் பரிசோதனை தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்தில் நோய் கட்டுப்பட்டுவிடும்.

இரண்டாம் வகையில், இந்த அறிகுறிகளுடன் காய்ச்சல் தொடர்ந்து  கடுமையாக இருக்கும். மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். சோர்வு கடுமையாகும். இவர்கள் காய்ச்சலைக் குறைக்க ‘டாமிஃபுளு’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மூன்றாம் வகையில், மேற்சொன்ன அறிகுறிகளுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற ஆபத்துகளும் சேர்ந்து கொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இவர்களுக்கு பன்றிக் காய்ச்சலை உறுதி செய்யும் எச்1என்1 ஆர்டி-பிசிஆர் (H1N1 RT-PCR) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும், இவர்களுக்கு ‘டாமிஃபுளு’ மாத்திரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டவர்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், கல்லீரல் நோய், இதயநோய், புற்றுநோய், எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது. இவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தடுப்பது எப்படி?

இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுத் தண்ணீரில் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது. கைகுலுக்காதீர்கள். பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். வெளியில் செல்லும்போது முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடியை அணியுங்கள். சுய மருத்துவம் வேண்டாம். நோயின் ஆரம்பத்திலேயே தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

ஃபுளு காய்ச்சலுக்கான ‘வீரியம் குறைக்கப்பட்ட நான்குமுனை நுண்ணுயிரித் தடுப்பூசி’யை (Quadrivalent inactivated vaccine - QIV)  மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னால் போட்டுக் கொண்டால் இந்த நோய் பெரும்பாலும் வராது. இது ஓராண்டு காலத்துக்கு மட்டும் நோயைத் தடுக்கும் தன்மையுடையது. எனவே, வருடந்தோறும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் எப்போதும் வராது. குறைந்தது இந்த நோய் வர வாய்ப்புள்ளவர்களாவது இந்தத் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

அரசின் கடமை

இந்த நோயை ஆரம்பத்திலேயே உறுதி செய்யும் பரிசோதனைக் கூடங்கள் மிகவும் குறைவு. இதனால், நோயைக் கணிப்பதற்குள் நோயாளிக்கு மரணம் நெருங்கிவிடுகிறது. மேலும், தனியார் பரிசோதனைக் கூடங்களில் கட்டணம் ரூ.4,000 வரை உள்ளது. இந்த வசதியை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக்கிவிட்டால், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி உயிரைக் காப்பாற்ற முடியும். பன்றிக் காய்ச்சலுக்குரிய தடுப்பூசி இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை ரூ.1,000  வரை இருப்பதோடு சில சமயங்களில் கிடைக்காமலும் போகிறது. இம்மருந்தை உள்நாட்டில் தயாரித்தால் ரூ.100-க்குத் தர முடியும்.

பன்றிக் காய்ச்சல் பரவி இறப்போர் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் மாநில, மத்திய அரசுகளின் சுகாதாரத் துறைகள் களத்தில் இறங்குகின்றன. பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்துவதில் மாத்திரை, மருந்துகளைவிடவும் மிக முக்கியமானது நோய்த்தடுப்பு. நோய் பரப்பும் கிருமிகளின் தன்மையைத் தொடர்ந்து கண்காணிப்பதும், நோய் பரவ வாய்ப்புள்ள மழைக் காலத்துக்கு முன்பே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நோய் பரவும் பகுதிகளில் பகுதிகளில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதும்தான் இந்தக் கொள்ளை நோயால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க சரியான வழி.

கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x