Last Updated : 26 Oct, 2018 09:30 AM

 

Published : 26 Oct 2018 09:30 AM
Last Updated : 26 Oct 2018 09:30 AM

முத்துசாமி ஓர் இயக்கம்: நாசர் பேட்டி

நாடகப் பின்புலத்திலிருந்து திரைத் துறைக்கு வந்து வெற்றிபெற்ற நடிகர் நாசர், கூத்துப்பட்டறையுடன் ஆரம்பகாலத்திலிருந்து தொடர்பில் இருப்பவர். கூத்துப்பட்டறைக் கலைஞர்களைத் திரைத் துறைக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களில் முதன்மையானவர். ந.முத்துசாமியுடன் நெருக்கமான நட்பைப் பேணிய நாசர், முத்துசாமி தொடர்பான நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

கூத்துக்கும் நவீன நாடகத்துக்கும் இடையே ஒரு பாலமாக கூத்துப்பட்டறையை உருவாக்கினார் ந.முத்துசாமி. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வந்த நீங்கள் இந்தப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நடிப்பின் மீது ஆர்வத்துடன் இருந்த நான், நடிப்புத் துறை சார்ந்த விஷயங்களில் தீவிரத் தேடலில் இருந்தபோது  ந.முத்துசாமி நடத்திவந்த ‘கூத்துப்பட்டறை’ எனக்கு அறிமுகமானது. நான் கூத்துப்பட்டறையின் அங்கத்தினனாக இருந்ததில்லை. எனினும், அவர்களுடைய செயல்பாடுகள், பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்துவந்தேன். நவீன நாடகத்தில் தெருக்கூத்து வடிவங்களைக் கொண்டுவந்து பரீட்சித்தவர் ந.முத்துசாமி. நவீன நாடகத்துக்குள் மரபுக் கூறுகளும் இருக்க வேண்டும் என்று மிகவும் பிரயத்தனப்பட்டார். அதன் வழியாக, தெருக்கூத்தை மீட்டெடுக்கும் பணியாகவும் அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன. அந்த வகையில், நவீன நாடகத்துக்கும் கூத்துக் கலைகளுக்கும் மிக முக்கியப் பங்காற்றியவர் ந.முத்துசாமி!

கூத்துப்பட்டறையில் சேர விரும்பியிருக்கிறீர்கள். அது ஏன் சாத்தியமாகவில்லை?

எண்பதுகளில் கூத்துப்பட்டறை இயங்கிய விதம் வேறு. அப்போதெல்லாம் அங்கேயே முழு நேர நடிகராக இருக்க வேண்டும். அது எனக்கு உடன்பாடு என்றாலும், வேறு சில காரணங்களால் என்னால் அதில் சேர முடியாமல் போய்விட்டது. குறிப்பாக, செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வந்த எனக்குப் பிரதான நோக்கமாக சினிமா இருந்ததும் ஒரு காரணம்.

விஜய் சேதுபதி போன்ற நடிகர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதுகூட கூத்துப்பட்டறையின் பங்களிப்பையும் தாண்டி, இயல்பாகவே அவர் ஒரு நடிகர் என்று முத்துசாமி குறிப்பிடுகிறார். நடிகர்களை அடையாளம் காண்பதில் அவரது திறமையைப் பற்றிச் சொல்லுங்களேன்..

நடிகர்களை அடையாளம் காண்பது எனும் விஷயத்தையெல்லாம் தாண்டி, தன்னைத் தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சிறப்பான பயிற்சியளித்து முன்னுக்குக் கொண்டுவந்துவிடுவார் முத்துசாமி. அரிச்சுவடியே அறியாதவர்கள்கூட அவரிடம் பயிற்சி பெற்று மிகப் பெரிய நாடகக் கலைஞர்களாகியிருக்கிறார்கள்.

நீங்கள் இயக்கிய படங்களில் கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் பலரைப் பயன்படுத்தியிருந்தீர்கள். அதற்கு முத்துசாமி எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்?

நடிப்பின் எல்லா வகைகளையும் ஒரு நடிகன் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்று கருதியவர் முத்துசாமி. கூத்துப்பட்டறையிலிருந்து நான் பயன்படுத்திக்கொண்ட பசுபதி, கலைராணி போன்றோர் பத்தாண்டுகளுக்கும் மேலாக நாடகத்தில் மட்டுமே இயங்கிவந்தவர்கள். நானும் நாடகத்திலிருந்து வந்தவன் எனும் முறையில், அந்த ஊடகத்தில் ஒரு நிலையை அடைந்திருப்பவர்கள் எனும் அடிப்படையில் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டேன். அவர்களும் மிகச் சிறப்பாகப் பரிமளித்தார்கள். இதில் முத்துசாமிக்கும் பெரு மகிழ்ச்சிதான்!

நீங்கள் இயக்கிய முதல் படமான ‘அவதாரம்’ கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசியது. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு முத்துசாமி என்ன சொன்னார்?

தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ‘அவதார’மும் ஒன்று என்று முத்துசாமி சொல்லியிருக்கிறார்.

முத்துசாமியின் மறைவுக்குப் பிறகு, திரைத் துறைக்கும் கூத்துக்கலைகள் – நவீன நாடகங்களுக்குமான உறவு இனி எப்படி இருக்கும்? குறிப்பாக, திரைத் துறையில் கூத்துப்பட்டறையின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

முத்துசாமி எப்போதுமே தனிநபராக இயங்கியதில்லை. ஒரு இயக்கமாகவே இயங்க வேண்டும் என்று நம்பியவர். அப்படித்தான் கூத்துப்பட்டறை இயங்கியது. அதில் விவாதங்கள், முரண்பாடுகளுக்கும் இடமிருந்தது. முத்துசாமியின் மகன் நடேஷ் இனி கூத்துப்பட்டறையின் செயல்பாடுகளை முன்னெடுத்துச்செல்வார் என்று நினைக்கிறேன். கூத்துப்பட்டறை நிறுவப்பட்ட நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டு அது தொடர்ந்து இயங்கும் என்றும், திரைத் துறைக்கு அதன் பங்களிப்பு தொடரும் என்றும் உறுதியாக நம்புகிறேன்!

- வெ.சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x