

அரசியல் கட்சிகள் பேரணி, பொதுக் கூட்டம் போன்றவற்றைப் பாதுகாப்பாக நடத்துவதற்கான பரிந்துரைகளைத் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைவும் அவசியமாகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரைப் பயணத்துக்குப் பாரபட்சம் காட்டாமல் அனுமதி கிடைக்கச் செய்ய டிஜிபிக்கு உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்குத் தொடுத்தது. இதையடுத்து, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்துகிற வகையிலான விதிமுறைகளை வகுக்கும்படி நீதிபதி என்.சதீஷ்குமார் தமிழகக் காவல் துறைக்கு செப்டம்பர் 18இல் உத்தரவிட்டார்.
இந்தச் சூழலில், செப்டம்பர் 27இல் கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள் உருவாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அக்டோபர் 27 அன்று விசாரணைக்கு வந்தபோது, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedures) அடுத்த பத்து நாள்களுக்குள் உருவாக்கும்படி தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.