

எழுபதுகளில் வேலூரில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அந்தப் பகுதியிலிருந்த மலைகளில் ஏறிச் சுற்றித் திரிவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. புதிதாக வாங்கியிருந்த பைக்கும் என் மனைவி எனக்கு பரிசாகக் கொடுத்த பெண்டாக்ஸ் காமிராவும் தூண்டு விசைகளாக அமைந்தன.
வேலூரில் வேலப்பாடி என்ற பகுதியில் உள்ள பகவதி மலை எனக்குப் பிடித்த ஓர் இடம். சுமார் முந்நூறு மீட்டர் உயரம்தான். படிகளும், ஒற்றையடிப்பாதையும் உண்டு. எளிதாக ஏறி விடலாம். உச்சியில் பல தொல்லியல் எச்சங்கள் உண்டு. அவைகளில் இரண்டை சிறப்பாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒன்று, பாறையில் செதுக்கப்பட்ட சமணசின்னமான இரு பாதங்கள். இரண்டாவது, ஒருபாறையில் பொறிக்கப்பட்டுள்ள ராஷ்ட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் காலத்து கல்வெட்டு.
இம்மலையிலுள்ள தொல்லியல் எச்சங்களில் பழமையானது சமணம் சார்ந்தது. ஓர் இயற்கையான குகையினுள் இரு பாறைப் படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல மலைகளில் நாம் காணக்கூடிய இரு பாதங்கள் – ஸ்ரீபாதம் – இங்கே உள்ளன. இவை சமணத் துறவிகள் இங்கு இருந்ததற்கான அடையாளம். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலும் இரு கற்பாதங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உண்டு. அதேபோல இங்கு பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் படிகளும் அந்த இடத்தில் துறவிகள் இருந்ததற்கு அடையாளம். இந்த தொல்லியல் எச்சங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளன.