

அண்மையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்றொரு விழாவை நடத்தியது. அரசுக் கல்வி நிலையங்களில் இருந்து, சிறப்பாகக் கல்வி பயின்று, உயர்வை அடைந்த மாணவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விழா. இதைத் தொடர்ந்து பொது வெளியில், தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் எல்லாம் இல்லை; பள்ளி மாணவர்களின் கல்வி வெளிப்பாடுகள், பல மாநிலங்களைவிட மோசமாக உள்ளன என்னும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள், ஒரு தொண்டு நிறுவனம் தயாரிக்கும் அசர் (ASER) என்னும் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.
அண்மையில், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசின் திட்டக் குழுவின் உதவியோடு மாநிலம் தழுவிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அது 3, 5, 8ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களில், 60% மாணவர்களிடம் கல்வி வெளிப்பாடுகளை அறிவியல்பூர்வமாகக் கணித்த ஆய்வு.