

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கும் மேலாக எழுதி வந்திருக்கும் ராஜம் கிருஷ்ணன், தனக்கென்று தனித்துவமான பாதையை வகுத்துக் கொண்டார். புனைவை உணர்ச்சியின் வெளிப்பாடாக மட்டும் பார்க்காமல், புனைவுக்குள் இருக்கும் களமும் காரணமும் ஆராயப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முற்றிலும் கற்பனைப் பொதியாக இருக்கும் புனைவை ஏற்றுக் கொள்ளாமல், எதார்த்தங்களைக் கண்டடைவதற்காகப் பயணப்பட்டுக் கொண்டே இருந்தார்.
அதற்கான மெனக்கெடலின் விளைவாகத்தான் புனைவினூடே ‘காலந்தோறும் பெண்’, ‘காலந்தோறும் பெண்மை’, ‘இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை’, ‘உயிர் விளையும் நிலங்கள்’, ‘புதியதோர் உலகம் செய்வோம்’, ‘நட்புறவின் அழைப்பு’, ‘காலம்’ முதலிய அல்புனைவுகளை எழுதினார்.