

தனது சொந்த ஊரின் பெருமைகளைப் பிறரிடம் பேசுவது எல்லோருக்கும் பிடித்தமானது. அதே நேரம் ஒரே ஊர்க்காரர்கள் வெளியூரில் சந்தித்து உரையாடும் போது ஊரின் குறைகளை, போதாமைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்கிறார்கள். நமது ஊரை, யாராலும் மாற்ற முடியாது என்று சலித்துக் கொள்கிறார்கள். ஊர் ஒவ்வொருவர் நினைவிலும் ஒருவிதமான வடிவம் கொண்டிருக்கிறது.
பழமையில் ஊறித்திளைத்த உத்தரபிரதேச கிராமம் ஒன்றின் கதையைச் சொல்கிறது தர்பாரி ராகம் நாவல். 1977-ல் வெளியான இதனை இந்தி எழுத்தாளர் ஸ்ரீலால் சுக்ல எழுதியுள்ளார். சரஸ்வதி ராம்நாத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நாவலின் தலைப்பை வைத்து இது இசையைப் பற்றிய கதையாக இருக்குமோ என ஒரு வாசகர் நினைத்தால் ஏமாற்றமே அடைவார். தர்பார் எனப்படும் அதிகார மையத்தின் அபஸ்வரம் பற்றியதே நாவல்.