

மக்களவைத் துணை சபாநாயகர் பதவி கடந்த ஆறு ஆண்டுகளாகக் காலியாக இருப்பது, அரசியல் விவகாரங்களில் தீவிரமாகக் களமாடுபவர்களின் கவனத்துக்கே வராமல் இருக்கிறது. உண்மையில், நாடாளுமன்ற அமைப்பில் மிக முக்கியமான ஒரு பதவி, இத்தனை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களின் அடிப்படையிலும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலும் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.
அரசமைப்பு என்ன சொல்கிறது? - அரசமைப்புச் சட்டத்தின் 93ஆவது கூறின்படி மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த சில நாள்களில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களும் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினரைத் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் இருந்திருக்கிறது. துணை சபாநாயகர் பதவி என்பது ஒரு சம்பிரதாயமான பதவி அல்ல. துணை சபாநாயகர் கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருக்கிறது.