

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் தெரியாமலேயே பணிபுரியும் சூழல் நிலவுவது குறித்து உயர் நீதிமன்றம் அண்மையில் கவலை தெரிவித்திருக்கிறது. நியாயமான இந்தக் கவலை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறுவது அவசியம். தேனியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக 2018இல் பணியில் சேர்ந்த எம்.ஜெயக்குமார், தமிழ் மொழியில் படிக்கவும் எழுதவும் தெரியவில்லை என்கிற காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடும்படி 2022இல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜெயக்குமார் தமிழர் என்பதால் அவரைப் பணியில் சேர்க்கும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மின்சார வாரியம் மேல்முறையீடு செய்தது. அதற்கான வழக்கை மார்ச் 10 அன்று ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.