Published : 13 Aug 2014 12:00 AM
Last Updated : 13 Aug 2014 12:00 AM

எபோலாவின் பிடியில் ஆப்பிரிக்கா

உலகமே எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய பெரும் பிரச்சினை இது!

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3 வரையிலான நாட்களைக் 'கருப்பு வாரம்' என்று லைபீரிய மக்கள் அச்சத்துடனேயே அழைக்கின்றனர். அந்த நாட்களில்தான் எபோலா வைரஸ் தாக்கியதால் 94 பேர் உயிரிழந்துள்ளனர், 173 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். போகப்போக இது எவ்வளவு தீவிரமடையும் என்பதை மக்கள்தான் ஊகித்துக்கொள்ள வேண்டும்.

லைபீரியத் தலைநகரான மன்ரோவியாவுக்கு வெளியே ஜான்சன்விலி என்ற இடத்தில் கடந்த வாரம் சுமார் 36 உடல்கள், சடலங்களை வைக்கும் பையுடனேயே புதைக்கப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து மக்கள் திரண்டுவந்து விரட்டியதால், கையுறை உள்ளிட்ட சாதனங்களைப் போட்டதுபோட்டபடி டாக்டர்களும் மருத்துவ உதவியாளர்களும் ஓடிவிட்டனர். எபோலா வைரஸ் கிருமிகளுடன் புதைக்கப்படும் உடல் களால் தங்கள் பகுதிக்கும் வைரஸ் பரவி, தங்களுடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் இப்படி விரட்டியுள்ளனர்.

நெருக்கடி நிலை

மன்ரோவியாவில் அரசாங்கமே என்ன செய்வ தென்று திகைப்படைந்திருப்பதுடன் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால்தான் அது நாடு முழுக்க (மருத்துவ) நெருக்கடி நிலை நிலவுவதாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனால், ராணுவம் ஏராளமான பகுதிகளை, மற்றவர்கள் எளிதில் அணுக முடியாத பகுதிகளாக அறிவித்து நடமாட்டத்தைத் தடுத்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் எபோலா வைரஸ் கிருமி பரவியுள்ளது என்று கூறியபோதெல்லாம் அரசுகள் அதை அப்பட்டமாக மறுத்தன அல்லது தகவல்கள் வெளியே வராமல் மறைக்கப் பார்த்தன. இதனால், எபோலா குறித்து அளவுக்கு அதிகமாக அச்சப் பட்டவர்களும் உண்டு; அதனால் ஒன்றும் நேராது என்று அலட்சியப்படுத்தியவர்களும் உண்டு. இந்தத் தகவலை பத்திரிகையாளர்கள் வெளியே கொண்டுவரக் கூடாது என்று முதலில் அவர்களுக்குத்தான் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். விளைவு, எபோலா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவில்லை.

எபோலா தாக்கப்பட்டவரை கடந்த ஜூன் மாதமே பார்த்தேன். அதன் பிறகு, எபோலாவால் இறந்தவர்களை அடக்கம் செய்யும் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தினேன். இறுதியாக, சுகாதாரத் துறை உதவி அமைச்சர் ஒருவர் ஒப்புதல் தந்ததால் பேனல்விலி மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் கென்ட் பிரான்ட்லி, திருச்சபைப் பணியாளர் நான்சி ரைட்போல் என்ற இரண்டு அமெரிக்கர்கள் அங்கே சிகிச்சை பெற்றனர். இருவரும் இப்போது அமெரிக்கா சென்றுவிட்டனர்.

புதைக்க நேரமில்லை!

அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த போது சடலத்தை எடுத்துவரும் அனைவரும் நோய்க் கிருமிகள் தாக்காதபடிக்குப் பாதுகாப்புக் கவச உடை அணிந்திருந்தனர். எபோலாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துவந்திருப்பதாக ஒருவர் என் காதில் கிசுகிசுத்தார். “என்னுடைய அங்கிள் எபோலாவால் இறக்கவில்லை. உயர் ரத்த அழுத்தத்தால்தான் இறந் தார்” என்று ஒருவர் மறுத்துக் குரல் கொடுத்தார். டாக்டர் பிரான்ட்லி வந்து, இறந்தவர் எபோலாவால் இறக்கவில்லை என்று கூறிய பிறகே குழப்பம் தீர்ந்தது. உடனே, எல்லோரும் கவச உடைகளைக் களைந்தனர். அப்போது, சடலங்களைப் புதைக்கும் குழுவின் தலைவர் குறுக்கிட்டு, “எபோலாவால் இறந்தவர்களை இந்த இடத்தில் இனி புதைக்க நேரமில்லை” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தார் அனைவரையும் விரட்டியடித்தனர்.

அடுத்த நாள் காலை அங்கு சென்றேன். இறந்த ஒருவரின் மூன்று உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஒரு இளைஞனுக்கு 20 வயது இருக்கும். வெள்ளுடை அணிந்தவர்கள் சடலத்தைக் கொண்டு வந்தனர். ஒருவர் அந்தப் பையின் ஜிப்பை அவிழ்த்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஏதோ ஒரு மருந்தைச் சடலத்தின் மீது பீய்ச்சி அடித்தார். சடலம் அந்தப் பையிலிருந்து எடுக்கப்படாமலேயே தரையில் கிடத்தப்பட்டது. மூன்று பேரும் எட்டிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர், இறந்தவரைப் புகைப்படம் எடுத்தார். பிறகு, மீண்டும் ஜிப்பை இழுத்து, சடலம் வெளியே தெரியாதபடி மூடினர். எனக்கு அச்சமாக இருந்தது. எல்லாவற்றையும் தொலைவிலிருந்து படம் எடுத்தேன். என்னுடைய படமும் செய்தியும் பத்திரிகையில் பிரசுரமானது. இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவியது. லைபீரியாவில் எபோலா பரவியதைக் காட்டும் முதல் புகைப்படம் அது. அதன் விளைவு பெரியது. லைபீரிய நாட்டு மக்கள் அனைவருமே தங்கள் நாட்டிலும் எபோலா பரவிவிட்டதைத் தெரிந்துகொண்டனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்னாலேயே…

ஐந்து மாதங்களுக்கு முன்னாலேயே எபோலா பரவிவிட்டது. நாட்டின் வடக்குப் பகுதியில் கிராமப்புறத்தில் உடல்நிலை சரியில்லாத உறவினரைக் கவனித்துவந்த பெண் ஒருவர், மன்ரோவியா நகருக்கு வந்தார். டாக்சியில் வரும்போது திடீரென வாந்தியெடுத்தார். பிறகு, இறந்துவிட்டார். டாக்சி டிரைவர் அவர் வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கொடுத்து உதவினார். அவருக்கும் எபோலா தொற்றிக்கொண்டது. அந்தப் பெண்ணின் கணவர், இரண்டு வயதுக் குழந்தை, அவருடன் பைக்கில் வந்த ஒருவர், இன்னும் சிலர் என்று அந்தப் பெண் மூலமே பலருக்கும் பரவியது.

அதற்குப் பிறகுதான் நோயால் பீடிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், நோய்த் தொற்றுக்குப் புதிதாக ஆளானவர்கள் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது தெரிய ஆரம்பித்தது. ஆனால் அரசு, எபோலா நோயாளி களுக்கு அருகில் பத்திரிகையாளர்கள் போகவே கூடாது என்று கடுமையாக எச்சரித்துத் தடுத்தது. “அருகில் போய் விசாரிக்காதீர்கள், உங்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும்'' என்று சுகாதார அமைச்சர் வால்டர் வெணிகலே நிருபர்களைக் கேட்டுக்கொண்டார். உண்மையில் அவருடைய நோக்கம், எபோலா பற்றிய தகவல், குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி மற்றவர் களுக்குத் தெரியாமல் தடுப்பதுதான்.

நாங்கள் அமெரிக்கத் தூதரகத்திடம் தொடர்பு வைத்திருந்ததால், ஏப்ரல் 4 முதலே ஆப்பிரிக்கா வரும் அமெரிக்கர்கள் எச்சரிக்கப்பட்டுவந்தது தெரிந்தது. மே மாதத்தில் நோய் தொற்றும் வேகம் குறைந்தது. ஆனால், அதன் பிறகு பலமடங்கு அதிகரித்தது.

எதிரி நாட்டவர்களின் சதியா?

இதையடுத்து கினி, சியாரா லியோன் நாடுகளுடனான எல்லை மூடப்பட்டது. எல்லைகளை மூடாதீர்கள், பொருளா தாரம் பாதிக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மிளகு விலை அதிகரித்துவிடும் என்றுகூட வருத்தப்பட்டார்கள். மக்களுடைய அறியாமையே ஆட்சி செய்தது. எதிரி நாட்டவர்களின் சதியாகக்கூட இது பார்க்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து உரிய மருத்துவ உதவி வந்துவிட்டதாகக்கூட அரசு பொய் சொல்லத் தொடங்கியது. இந்த நோயின் தீவிரம் அறிந்து பீதியில் உறைந்த பல நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே அடைந்துகிடந்து நோயை முற்றவைத்துக்கொண்டனர். எபோலா வந்து இறந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்குக்கு முன்னால் வழக்கம்போலப் பலர் குளிப்பாட்டினர். கிறிஸ்தவப் பாதிரியார்கள் சடலத்தைத் தொட்டு இறுதி ஜபம் செய்தார்கள். இதனால், மேலும் பலருக்கு நோய் பரவியது.

இந்த நோயின் தன்மையை அதிபர் எல்லன் ஜான்சன் சரியாகப் புரிந்துகொண்டார். தேசிய நெருக் கடி நிலையை அறிவித்தார். பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டார். போர்க்காலத்தில் எடுக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார். இவையெல் லாம் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகளே, ஆனால் காலம் கடந்தவை. நோயாளிகளுக்கு உதவ வந்த அமைப்பினர் வெளியேறிவிட்டனர். விமான நிறுவனங்கள் லைபீரியாவுக்கு வரும் சேவைகளைக் குறைத்துக்கொண்டேவருகின்றன. நோய் பரவுவது ஓயும் என்று தோன்றவில்லை. அமெரிக்காவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இருவரையும் அந்நாட்டில் காப்பாற்றிவிட்டால், அந்த சிகிச்சை முறையைத் தெரிந்துகொண்டு, அதே மருந்துகளை இங்கும் பயன்படுத்திப் பார்க்கலாம். காரணம், எபோலா இங்கிருந்து உலகுக்குப் பரவும் ஆபத்து இருக்கிறது.

- © தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x