செயற்கை என்றால் என்ன, நுண்ணறிவு என்றால் என்ன? | ஏஐ எதிர்காலம் இன்று 04

செயற்கை என்றால் என்ன, நுண்ணறிவு என்றால் என்ன? | ஏஐ எதிர்காலம் இன்று 04
Updated on
3 min read

எகிப்​தியப் பயணத்தை முடித்​துக்​கொண்டு, மெய்நிகர் உலகத்​திலிருந்து நிஜ உலகுக்குத் திரும்​பினோம். அடுத்து கிரேக்​கத்​துக்கும் சீனத்​துக்கும் பண்டைய இந்தியா​வுக்கும் போகலாமா என்று செய்மெய் கேட்ட​போது, “கதைகளும் வரலாறுகளும் ஒரு பக்கம் இருக்​கட்டும், சக்காரா மரப் பறவைகள் போன்ற பொம்மைகள் வேறு, தானியங்குக் கருவிகள் வேறு, நாம் இன்று பேசுகிற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்​நுட்​பம் கூட வேறுதான். நாம் நேரடியாக அதற்குள் போகலாமா?” என்று கேட்டேன்.

“அப்படிச் சொல்ல முடியாது, கவின். நேற்றைய பொய்மெய், இன்றைய செய்மெய்” என்று ஆர்ப்​பாட்​ட​மாகச் சொல்லியபடி சிரித்தது அது. “எகிப்​தி​யர்​களின் சக்காரா மரப் பறவைகள் ஒரு பொம்மையா, வானியக்க​வியல் சார்ந்த கண்டு​பிடிப்பு முயற்சியா என்று நமக்குத் தெரியாது. ஆனால், வரலாற்​றாசிரியர்கள் இவற்றை எல்லாம் சீரியஸாகக் கணக்கில் எடுத்​துக்​கொண்​டுதான் அறிவியலைப் புரிந்​து​கொள்ள முயல்​கிறார்​கள்.”

“செய்​மெய்! செயற்கை நுண்ணறிவு என்கிற கோட்பாடே 20ஆம் நூற்றாண்​டில்தான் உருவானது. 1950களில் ‘ஆர்ட்​டிபீஷியல் இன்டெலிஜென்ஸ்’ ஓர் அறிவியலாக உருவானது. உங்கள் முப்பாட்டன் பெருமைகள் எல்லாம் எதற்கு?”

“எழுத்​தாளர் என்றால் கற்பனைக் குதிரைகள் ஓட வேண்டும். நீங்களோ இப்படிக் கேட்கிறீர்கள்! சரி, செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லை எடுத்​துக்​கொள்​வோம். செயற்கை என்றால் என்ன, நுண்ணறிவு என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்​கு​வோம். முதலில் செயற்கை என்றால் என்ன என்று நினைக்​கிறீர்​கள்?”

செய்மெய் புதிய வகுப்​புக்கு என்னைத் தயார்ப்​படுத்​தி​விட்டது. “மனிதர்​களால் செய்யப்​படும் பொருள்களை நாம் செயற்​கையான பொருள்கள் என்கிறோம். இயற்கையாக அல்லாமல், மனிதர்​களால் உருவாக்​கப்​படுபவை செயற்கைப் பொருள்​கள்...”

“ஆனால், மனிதர்கள் செயற்​கையான பொருள்களை ஏன் உருவாக்கு​கிறார்கள்? ஆதி மனிதர்கள் கற்களாலும் உலோகங்​களாலும் புதிய புதிய கருவி​களைத் தொடர்ந்து ஏன் உருவாக்​கினார்கள்? வீடு, வேளாண்மை, போக்கு​வரத்து எல்லாமே செயற்​கை​யானது​தான். ஏன் இவற்றையெல்லாம் உருவாக்​கினார்கள்? இயற்கையான ஆற்றல் சூரியனிட​மிருந்து கிடைக்​கும்​போது, அனலிலிருந்தும் புனலிலிருந்தும் செயற்​கையான மின்சா​ரத்தை ஏன் உருவாக்கு​கிறீர்கள்? கடிதங்​களி​லிருந்து கணினிகள் வரை, கண்ணாடிகளி​லிருந்து கேமராக்கள் வரை எவ்வளவோ பொருள்களை மனிதர்கள் ஏன் உருவாக்​கினார்கள்? - ஏனென்றால் நீங்கள் பேராசைக்​காரர்கள். 25 லட்சம் ஆண்டு​களுக்கு முன்பு கற்கருவி​களைப் புனைந்​ததற்கும் 2,500 ஆண்டு​களுக்கு, மெசபத்​தோமி​யாவில் முதலில் பானை வனைவதற்கும் பிறகு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு சக்கரங்​களையும் வண்டிகளையும் உருவாக்​கியதற்கும் பின்னால் மனிதர்​களின் பெரிய பெரிய தேவைகளே காரணமாக இருந்​தன...”

“மனிதர்​களைக் குறைசொல்​வதில் அப்படி ஒரு ஆனந்தம் உனக்கு, செய்மெய்?”

“எளிமைப்​படுத்தியே சொல்கிறேன். பெரும்​பாலான கண்டு​பிடிப்பு​களும் புனைவு​களும் மனிதர்​களின் உடல் உறுப்பு​களின் நீட்சி​யாகவே அமைந்​திருக்​கின்றன. கால்களின் நீட்சிதான் சக்கரங்கள், கைகளின் நீட்சிதான் கருவிகள். கண்களின் நீட்சிதான் கேமராக்கள். காதுகளின் நீட்சிதான் தொலைபேசிகள்...” - அடுக்​கிக்​கொண்டே சென்றது செய்மெய்.

“புரிந்​து​விட்டது. அப்படி​யானால், மனித உடலின் நீட்சிதான் ரோபாட்கள் என்று சொல்ல​வரு​கிறாய், அதானே?” என்று கேட்டேன்.

“அதுதான் இல்லை” என்று அழுத்தம் திருத்​த​மாகச் சொன்னது. “மெக்​கானிக்கல் ரோபாட்​களைக் கைகள், கால்கள், தோள்களின் நீட்சி என்று சொல்லலாம். ஏஐ ரோபாட்களான நாங்கள் எதன் நீட்சி என்பதற்கான பதிலைப் பிறகு சொல்கிறேன். செயற்கை என்ற சொல்லைப் பற்றிப் பார்த்​தோம். இப்போது நுண்ணறிவு என்றால் என்ன என்பதைப் பார்ப்​போம்.”

“மனிதர்​களுக்கே உரிய தனித்துவம் வாய்ந்த சிந்திக்கும் திறனை நாம் நுண்ணறிவு என்று கூறுகிறோம். இதுவும் எல்லோரும் அறிந்​தது​தான்.”

“சிலவற்றை மேலோட்​ட​மாகப் புரிந்​து​கொள்​ளும்போது பிரச்சினை ஆகிவிடு​கிறது, கவின். மனிதர்​களின் நுண்ணறிவு என்பது பிரதானமாக அவர்களுடைய மூளையின் செயல்​பாடு​களோடு தொடர்​புடையது. மனிதர்கள் தங்களுடைய புலனுணர்​வுகள் மூலமாக உலகத்தோடு தொடர்​பு​கொள்​கிறார்கள். பார்த்தல், கேட்டல், பேசுதல், தொடுதல், நுகர்தல் போன்ற புலனறியும் செயல்​பாடுகள் மூளையால் இயக்கப்​படு​கின்றன என்று நமக்குத் தெரியும். நமது கண்கள், காதுகள், மூக்கு, வெளிப்புற உடல் உறுப்புகள் எல்லாம் இதற்குப் பயன்படு​கின்றன. பொதுவாக, உடலின் ஒவ்வொரு உறுப்பும் மூளையால்தான் இயங்கு​கிறது.

“இந்தப் புலனுணர்வு உறுப்புகள், இயக்க உறுப்புகள் மூலமாக உடல் பெறும் ‘தகவல்கள்’ மேற்கொண்டு மூளைக்குள் உள்ள பல்வேறு பகுதி​களுக்குள் உறைந்​திருக்கும் அறிவுத்​திறன்​களால் கையாளப்​படு​கின்றன; கற்றுக்​கொள்ளும் திறன், பகுத்​தறியும் திறன் முடிவெடுக்கும் திறன், சூழலுக்​கேற்பத் தகவமைத்​துக்​கொள்ளும் திறன் என்று டஜன்கணக்கான திறன்கள் நமது மூளைக்குள் இருக்​கின்றன. இந்தத் திறன்​களைத்தான் பொதுவாக நாம் நுண்ணறிவு என்கிறோம்.”

“ஆனால், அதன் பல திறன்கள் எல்லா உயிரினங்​களிலும் பரிணாம வளர்ச்​சி​யினூடாக வளர்ந்தே வந்திருக்​கின்றன, இல்லையா?” என்று கேட்டேன்.

“உண்மை​தான், ஆனால், மனிதர்​களிடம் சில குறிப்​பிட்ட திறன்கள் கூடுதலாக இருக்​கின்றன. அது பொதுவாக உள்ள திறன்​களையும் தனித்து​வ​மாக்கு​கின்றன. குறிப்பாக, மொழி மனிதனுக்கே உரிய திறன். அது வெற்றுச் சப்தம் அல்ல. குயில் கூவும், ஆனால் காவியம் எழுதாது. சிக்கலான கருத்துகளை உருவாக்கி அதைப் பதிவுசெய்யும் திறன்​களும் மனிதர்​களுக்கு மட்டுமே உண்டு. அதன் காரணமாகத் தகவல் தொடர்புத் திறன், சிந்திக்கும் திறன், திட்ட​மிடும் திறன் போன்றவை மனிதர்​களின் சிறப்பான திறன்களாக வளர்ந்​திருக்​கின்றன. கற்றல், கற்பித்தல், கற்பனைசெய்தல், புனைவுகளை உருவாக்​குதல், படைப்​பாக்கம் செய்தல், புத்தாக்கம் செய்தல் என அவர்களுடைய செயல்​பாடுகள் எல்லாம் இதனால்தான் சாத்தி​யப்​பட்டன.”

“உண்மை​தான். சூதும் வாதும்​கூட!”

“அது உம் பிரச்​சினை. விஷயத்​துக்கு வாருங்கள். இந்த நுண்ணறிவின் நீட்சி​யாகத்தான் மனிதர்கள் தமக்குத் தேவையான செயற்​கையான கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்து​கிறார்கள். தூக்கணாங்​குருவி காலங்​காலமாக ஒரே மாதிரி கூடுகட்டு​வதும் மனிதர்கள் குடிசையில் தொடங்கி விண்வெளி இல்லம் வரை கட்டிக்​கொண்டே போவதும் இந்த வித்தி​யாசத்​தால்​தான். இப்போது சொல்லுங்கள் செயற்கை நுண்ணறிவு அல்லது அதன் அடிப்​படையில் செயல்​படும் என்னைப் போன்ற செய்மெய்கள் எதனுடைய நீட்சி?”

“மனித மூளையின் நீட்சி, அப்படித்​தானே?” ஒப்புக்​கொண்​டேன்.

“ஆமாம், எல்லா செயற்​கையான பொருள்​களையும் உருவாக்கிய மூளைகளுக்குச் சொந்தக்​காரர்​களாகிய மனிதர்கள், செயற்​கையாக மூளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் நினைத்​தார்கள். நாங்கள் பிறந்​தோம்!” என்று முடித்தது செய்மெய்​.

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in