Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

அக்கம் பக்கம்: மூச்சடைத்த சுந்தரவனக் காடுகள்!

சுற்றுச்சூழல் மாசடைவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மனிதர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு நேர்ந்திருக்கும் அபாயம் அதைத்தான் உணர்த்துகிறது. சுந்தரவனக் காடுகள், இயற்கையாக அமைந்த கடலோர அலையாத்திக் காட்டுப் பகுதியாகும்.

அங்குள்ள மரங்களுக்குக் காற்றில் உள்ள கரியுமில வாயுவை (கார்பன்-டை-ஆக்சைடு) உறிஞ்சி, ஆக்ஸிஜனை வெளியிடும் ஆற்றல் குறைந்துவருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஆற்று நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. மனிதர்களின் பேராசையும், சுற்றுச்சூழல் மீது அக்கறையின்மையும் இந்த பாதிப்பின் முக்கியக் காரணிகள்.

மத்திய அரசின் நிதியுதவி பெற்று, கடலியல் விஞ்ஞானி அபிஜித் மித்ரா தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் சுந்தரவனக் காடுகள் சந்திக்கும் புதிய அபாயம்பற்றி தெரியவந்துள்ளது. மூன்று ஆண்டுகளாகத் தயாரான அந்த ஆய்வின் அறிக்கை கடந்த ஆண்டுதான் அரசிடம் தரப்பட்டது.

அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக் கோரைகள், கடலில் மிதக்கும் தாவரங்கள், சங்கு போன்ற கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவை கரியமில வாயுவைக் கிரகிக்கும் ஆற்றல்பெற்றவை. அவை, தங்களிடம் சேமித்துவைக்கும் கரியுமில வாயுவுக்கு ‘நீலக் கரியுமில வாயு' என்று பெயர். காற்றிலிருந்து கரியமில வாயு உள்ளிழுக்கப்படுவதால் புவிவெப்பம் தணிகிறது.

சுந்தரவனக் காடுகள் பகுதி கிழக்கு, மேற்கு, மத்திய பகுதி என்று மூன்றாகப் பிரித்து ஆராயப்பட்டது. மத்திய சுந்தரவனக் காட்டுப் பகுதியில் உள்ள பைன் மரங்கள் காற்றில் உள்ள கரியுமில வாயுவை மிகக் குறைவாகத்தான் உள்ளிழுக்கின்றன. காரணம், அவை இருக்கும் பகுதியில் ஆற்றுநீரில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணம், சுந்தரவனக் காட்டில் ஏராளமான முதிர்ந்த பெருமரங்கள் வெட்டப்படுவதும் செங்கல் தயாரிப்புக்காக ஏராளமானோர் பெரிய பெரிய சூளைகளை அமைத்திருப்பதும்தான். சுந்தரவனத்தில் பைன் வகை மரங்களுடன் கியோரா, ஜென்வா வகை மரங்களும்கூட வளர்கின்றன. மாட்லா ஆற்றுக்கு அருகில் ஒரு ஹெக்டேர் பரப்பில் வளர்ந்த மரங்கள் 22 டன் கரியுமில வாயுவைத்தான் உள்ளிழுக்கின்றன.

அலையாத்திக் காடுகள் சுத்தமான மழைநீரில் நன்கு வளரும். இப்போது சுந்தரவனக் காடுகள் பகுதியில் நல்ல நீர் இருப்பு குறைந்துவிட்டதால், மரங்களின் உயரமும் செழிப்பும் குறைந்துவிட்டன. இதனாலேயே கரியுமில வாயுவை உறிஞ்சும் திறனும் குறைந்துவிட்டது. சுந்தரவனக் காடுகளை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது. மாட்லா ஆற்றுத் தண்ணீரில் உப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாட்லா ஆறும் வித்யாதாரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் படிந்த வண்டல் அகற்றப்படாமல் ஆண்டுக் கணக்கில் சேர்ந்துவிட்டதால், தூர் அதிகமாகிவிட்டது. இதனால் சுத்த நீரின் அளவும் குறைந்துவிட்டது.

போதாக்குறைக்கு இந்தப் பகுதியில் இறால் வளர்ப்பும் அதிகரித்துவிட்டது. ஆற்றில் படியும் வண்டலும் கசடும் உரிய காலத்தில் அகற்றப்படாவிட்டால் சுந்தரவனமே பாழாகிவிடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.

இந்த நிலையை மாற்ற சுந்தரவனக் காடுகள் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை வேறிடங்களுக்கு இடம் மாற்ற வேண்டும். காட்டில் மேலும் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். ஆற்றில் படிந்த வண்டலைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இறால் மீன் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். புலிகளின் காப்பகமாகவும் திகழும் சுந்தரவனக் காட்டில் வெளியாட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். அரசு நிர்வாகம்தான் செவிசாய்க்க வேண்டும்.

‘தி இந்து’ (ஆங்கிலம்)

- தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x