Published : 19 Jun 2018 10:47 AM
Last Updated : 19 Jun 2018 10:47 AM

அப்பாவின் எருமை மாடு

ஊர் நிறைந்திருக்கும் எருமை மாடுகளில்

தன் சிகரெட்டைத் திருடிய

மாடு எதுவென்று

அப்பா அறிவார்

அப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்

அப்பாவிற்கு இரு முறை

இதயம் நின்று மீண்டதும் தெரியும்

அப்பா புகைக்கக்கூடாதென்றும் தெரியும்

ஒடுங்கிய மார்புக்கூடோடு

பரபரக்கும் கைகளோடு

அப்பா சிகரெட்டைத் தேடும்போது

மாடு சிலசமயம்

திருடிய சிகரெட்டை நீட்டும்

பற்ற வைத்தும் கொடுக்கும்

அப்பாவின் சிரிக்கும் கண்களை

பேதமையோடு பார்த்து நிற்கும்

ஏன் என் சிகரெட்டைத் திருடினாயென

அப்பாவும் கேட்டதில்லை

எருமை மாடும் சொன்னதில்லை

எருமை மாடு சிகரெட் பிடிக்காதென்று

எல்லோருக்கும் தெரியும்தானே

ஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்

என் எருமை புகைக்காதென

உண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று

அப்பா எழுந்திருக்கவேயில்லை

அந்த சிகரெட் திருடியதில்லைதானே

('நீர் அளைதல்' கவிதைத் தொகுதியிலிருந்து...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x