சென்னையின் இலக்கியத் திருத்தலங்கள்

சென்னையின் இலக்கியத் திருத்தலங்கள்

Published on

சில பத்தாண்​டு​களுக்கு முன்புவரை சென்னைப் புத்தகக் காட்சி மட்டும்தான் சென்னையின் இலக்கியத் திருத்​தலமாக இருந்தது. புத்தகக் கடையைப் பொறுத்தவரை தி.நகரில் நர்மதா பதிப்​பகத்தால் தொடங்​கப்பட்ட நியூ புக் லேண்ட்​ஸ்தான் தீவிர இலக்கியப் புத்தகங்​களுக்கான ஒரே விற்பனை மையம் எனச் சொல்லலாம். பரிசல் செந்தில்​நாதன் புத்தகங்களை சைக்கிள் ஓட்டமாக விற்றுக்​கொண்​டிருந்​தார். ஆனால், இன்றைக்கு சென்னையில் இலக்கி​யங்​களுக்கான திருத்தலங்​களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியிருக்​கிறது. தேவநேயப் பாவணர் நூலகக் கட்டிடத்​திலும் புக் பாய்ண்ட்​டிலும்தான் பெரும்​பாலும் கூட்டங்கள் நடைபெறும். இன்றைக்கு அதுவும் விரிவடைந்​துள்ளது.

புத்தகக் காட்சி நடைபெறும் ஜனவரி மாதம் தவிர்த்து, மற்ற மாதங்​களில் இலக்கியச் சந்திப்பு என்பது மிக அரிதான விஷயமாகத்தான் இருந்தது. தொடர் இலக்கியச் சந்திப்பு​களுக்கான வெற்றிடம் இருந்​து​வந்தது. சமீபத்தில் அதிகரித்​துள்ள இலக்கிய வாசிப்பு, அதற்கான மையங்கள் உருவாக வேண்டிய தேவையை உணர்த்தியது. இதற்கான தொடக்​கப்புள்ளி டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்​பனிடம் இருந்து வந்தது. இலக்கிய வாசகரான இவர் 2009இல் இந்தக் கடையைத் தொடங்​கினார். இன்றைக்கு இலக்கிய​வா​திகள், சினிமா கலைஞர்கள் தினந்​தோறும் கூடும் திருத்​தலமாக டிஸ்கவரி புக் பேலஸ் விளங்​கு​கிறது. கே.கே.நகர் முனுசாமி சாலையின் முன்பகு​தியில் உள்ள டிஸ்கவரி புத்தகக் கடை வளாகத்தில் தேநீரகம், இளைப்​பாறு​வதற்கான வசதி, வெளி அரங்கம், உள் அரங்கங்கள் என முழுமையான இலக்கிய மையமாக உள்ளது. ஆகுதி போன்ற இலக்கிய அமைப்புகள் இங்கு வாரந்​தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்திவரு​கின்றன.

இணையப் புத்தக விற்பனையில் ஈடுபட்டு​வரும் தடாகம் பதிப்​பகத்​தினர் பனுவல் என்னும் பெயரில் திருவான்​மியூரில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்​கி​னர். இக்கடை கணினித் துறையில் பணியாற்றிவரும் இளைஞர்​களால் தொடங்​கப்​பட்​டுள்ளது. பனுவல் என்னும் பெயரில் இணையப் புத்தக விற்பனையைச் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததன் தொடர்ச்​சியாக, அதே பெயரில் இந்தப் புத்தகக் கடை தொடங்​கப்​பட்​டது. வாசக சந்திப்​பிற்கான இடம் வேண்டும் என முன்திட்​டத்​துடனே தனி அரங்குடன் இந்தக் கடை தொடங்​கப்​பட்டது.

வேளச்​சேரியில் யாவரும் பதிப்​பகம், பி ஃபார் புக்ஸ் என்கிற பெயரில் ஒரு கடையைத் தொடங்​கியது. இந்தக் கடை வேளச்சேரி பகுதி வாசகர்​களுக்கான மையமாக இருக்​கிறது. இயக்குநர் பா.ரஞ்​சித்தின் நீலம் பதிப்​பகம், எழும்பூர் குழந்தைகள் மருத்து​வ​மனைக்கு எதிரில் விற்பனை மையத்தைத் தொடங்​கியது. இங்கும் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்​பட்டு இதுவும் இலக்கிய மையமாக ஆகியுள்ளது.

இவை அல்லாமல், வளசரவாக்​கத்தில் உள்ள கூகை திரைப்பட இயக்க மையமும் ஒரு கூடுகைக்கான இடமாக உள்ளது. திரைப்​படங்கள் குறித்த விமர்​சனம், புத்தக விமர்சனம், நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்​சிகள் இங்கே தொடர்ந்து நடத்தப்​படு​கின்றன. மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றம் இலக்கியக் கூடுகைக்கான முக்கியமான இடமாக உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மனுஷ்யபுத்​திரன், அகரமுதல்வன், நரன், லஷ்மி சரவணக்​குமார் ஆகியோரின் நிகழ்ச்​சிகள் இங்குதான் பெரும்​பாலும் நடத்தப்​படு​கின்றன.

எழும்பூர் அருங்​காட்​சி​யகத்​துக்கு எதிரில் உள்ள இக்சா மையமும் இலக்கியக் கூட்டங்களுக்கான இடமாக இருக்​கிறது. தேனாம்​பேட்​டையில் உள்ள பாரதி புத்த​கால​யத்தின் அரும்பு அரங்கும் கோடம்​பாக்கம் பதிப்புக் குழுமப் படைப்பு அரங்கும் இந்த வகையில் குறிப்​பிடத்​தகுந்தவை. கோட்டூர்​புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கு, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவணர் அரங்கு ஆகியவற்றில் இப்போது கூட்டங்கள் நடைபெறுகின்றன. நுங்கம்​பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி நூலகத்தில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி, அதையும் ஓர் இலக்கிய மையமாக சால்ட் பதிப்பகம் ஆக்கி​விட்டது.

அறிவியலின் வளர்ச்​சியால் மனிதத் தொடர்பு என்பதே அருகிப் போய்விட்டது. சந்திப்புகள், உரையாடல்கள் என அனைத்தும் நவீன அறிவியல் கருவி​களின் துணை​கொண்டு நடை​பெறுகின்றன. இச்​சூழலில், ​முப்பது பேர் கூடிச் சந்​திப்ப​தே ஓர் அரிய நிகழ்வு​தான். ஒரு சுதந்​திரமான சமூகத்​திற்​குக் கலந்​துரை​யாடலும் வாசிப்பும் அவசி​யம். சென்னை​யின் புதி​ய ​திருத்​தலங்கள்​ இதைச் சாத்​தியப்​படுத்​தி வருகின்​றன எனலாம்​.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in