Last Updated : 07 Feb, 2018 08:56 AM

 

Published : 07 Feb 2018 08:56 AM
Last Updated : 07 Feb 2018 08:56 AM

கல்வி வியாபாரமும் வேலை ஏலமும்

பா

ரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதையொட்டிக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தமிழ்நாட்டின் கல்வித் துறைச் சீரழிவை எடுத்துச்சொல்லும் மற்றொரு நிகழ்வு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வித் துறை ஆகிய நிறுவனங்களின் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தானாக முன்வந்து கடந்த ஜன.30 அன்று விசாரணைக்கு வழக்காக எடுத்துள்ளது. இதற்கு முன்னரே அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர் நியமன முறைகேடு கடந்த டிசம்பரில் வெளிவந்து, சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவருகிறது.

பெரியார் பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் மேல் ஊழல் புகார் எழுந்ததுடன், அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியும் டிசம்பரில் வெளிவந்தது. பாரதியார் பல்கலைக் கழகப் பணி நியமனம் மற்றும் நிர்வாக முறைகேடு குறித்து 2016 நவம்பரிலேயே செய்தி வெளிவந்தது. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தாளாளருக்கு முகவராக ஒருவர் செயல்பட்டு, கோடிக்கணக்கில் நன்கொடைப் பணம் புழங்கியதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இப்படித் தொடர்ச்சியாக கல்வி நிறுவன ஊழல்கள் கவனத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் வெளிவராத கல்வி நிறுவன ஊழல்கள் எத்தனையோ. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் நடைபெற்ற பணிநியமனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் வியாபார மையங்களாக மாறிவிட்டதையும் அதன் கொடுமைகளையும் அவ்வப்போது நிகழும் மாணவர்களின் தற்கொலைகள் படம்போட்டுக் காட்டுகின்றன.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசுக் கல்லூரிகளையும், அரசின் நிதி சார்ந்து மட்டுமே நடக்கும் பல்கலைக்கழகங்களை நம்பியே உள்ளனர். இந்த நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் கடந்த 10 ஆண்டுகால மாணவத் தலைமுறை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. சுயநிதிக் கல்வி வியாபாரத்துக்குப் பலியான விழுப்புரம் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அவனியாபுரம் லெனின், மாநிலக் கல்வி உரிமை பறிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட அனிதா.

கல்வித் துறை ஊழலாலும் சீர்கேட்டாலும் பலியான இளைஞர்கள் ஒருபக்கம். வேலைவாய்ப்பை இழந்த இளைஞர்கள் மறுபக்கம்... சீரழிவு இனியும் தொடரக் கூடாது.

- ப.சிவகுமார்,

அரசு கலைக் கல்லூரி மேனாள் முதல்வர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x