Published : 17 Nov 2017 09:19 AM
Last Updated : 17 Nov 2017 09:19 AM

இப்படிக்கு இவர்கள்: செயலால் முன்னேறுவோம்!

டுப்பக்கத்தில் வெளியான ‘குடிநீர் வழங்கலும் கழிவுநீர் அகற்றலும்: சுகாதாரத்தின் இரு கண்கள்!’ கட்டுரை அரிய பல தகவல்களை மிக எளிய முறையில் கூறியது. குடிநீர்க் குழாய் உடைந்து நீர் வெளியேறினால், அதனைச் சரிசெய்ய இலவசத் தொலைபேசி எண்களை அளிக்கலாம். இதன்மூலம் பொதுமக்களே பாதிக்கப்பட்ட இடத்தைப் பணியாளருக்குத் தெரிவிப்பார்கள். இவ்வாறு செய்தால் நீர் வீணாகாது, கழிவுநீரும் கலக்காது. வீட்டுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வாங்கும்போதே பழுதடையும் சாலையைச் சரிசெய்யும் பணியைச் சம்பந்தப்பட்ட வீட்டினருக்கு வழங்குவதால், ஓரளவு சாலை பழுதாவதைத் தவிர்க்கலாம். கழிவுநீர் பிரச்சினையைச் சமாளிக்க நவீன கருவிகளை வாங்கலாம். கூடுதல் பணியாளர்களை நியமிக்கலாம். திட்ட மதிப்பீட்டை ஆராய்ந்து முழுமையாய் ஒரு பகுதியைத் தன்னிறைவு பெற்ற பின் பிற பகுதிகளில் வேலையைத் துவங்கலாம். ‘யுக்தியும் செயலும் இல்லாவிடில் நாம் எங்கே நிற்கிறோமோ அங்கேயே தங்கிவிடுகிறோம்’ என்ற காந்தியின் வாக்கு நிதர்சனம்.

- மணிகண்டபிரபு, திருப்பூர்.

இதைப் பரிசீலிக்கலாமே?

சென்னை போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இயக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஆனால், வழித்தட எண்கள் சம்பந்தமில்லாமல் இருப்பதை மாற்றி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. பஸ் கடைசியில் போய்ச்சேரும் இடத்துக்கு உரிய பின்கோட் எண்ணை உபயோகப்படுத்தி வழித்தட எண்ணை ஏற்படுத்தலாம். அதாவது, கடைசியில் போய்ச் சேரும் இடம் மந்தைவெளி என்றால் 28, அடையார் - 20, மயிலை - 4, சைதாப்பேட்டை - 15, மாம்பலம் - 33, தி நகர் - 17 எனக் குறிப்பிட்டால், பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ‘போஸ்டல் பின்கோட்’ பழக்கத்தில் இருப்பதால், இந்த ஆலோசனையை சுலபமாக அமல்படுத்த முடியும்.

- ஆர்.எஸ்.ராகவன், பெங்களூர்.

தொடரும் இழிசெயல்

நவ. 15-ம் அன்று வெளியான ‘முடக்கப்படும் உரிமைக் குரல்கள்’ கட்டுரை படித்தேன். போராளிகளை வன்முறையாளர் என்ற முத்திரை குத்தி, அவர்களை மௌனம் ஆக்கும் இந்தச் செயலைக் காவல் துறையும், அரசும் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது. நீதிமன்றம் பலமுறை கண்டித்தும் இந்த இழிசெயலை ஆட்சியாளர்களும் காவல் துறையும் நிறுத்தவில்லை. இதனால், நியாயமான போராளிகள் ஒடுங்கிவிடுவதில்லை. நியாயமான போராட்டம் நெடுநாள் நடைபெற்றாலும் வெற்றிபெறுவது உறுதி. மதுரை வழக்கறிஞர் முருகன் தரப்பில் நியாயம் இருப்பின், நீதிமன்றம் உரிய தீர்ப்பு வழங்கும். உரிமைக்குக் குரல்கொடுப்பதற்குக் கூட இந்தியாவில் போராட வேண்டியுள்ளது.

- ஜீவன். பி.கே.கும்பகோணம்.

விழித்துக்கொள்வோம்!

தமிழை மொழிகளின் தாய் எனப் போற்றுகிறோம்... தமிழன்தான் உலகுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தான் எனச் சிலாகிக்கிறோம்... கீழடியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று புலம்புகிறோம். ஆனால், நம் தாய்மொழியாம் தமிழை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்திச் செல்வதற்கான எந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் நாம் செய்யவில்லை என்பதற்கு சர்வதேசப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்பகங்கள் பங்கேற்கவில்லை என்பதே சாட்சி.

- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.

நவ.16 அன்று வெளியான சர்வதேச அளவில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் ஒரு தமிழ் பதிப்பகம் ௯டப் பங்கேற்பு செய்யவில்லை என்ற செய்தி மிகுந்த வருத்தம் தந்தது. தமிழை வளா்க்கிறோம் என்று சொல்லும் அரசு, உலகில் பெரும் புத்தகக் காட்சியில் நமது தமிழ் எழுத்தாளர்களின் பெருமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவறவிட்டது ஏன்?

- யசோதா பழனிசாமி, ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x