Published : 27 Nov 2017 09:59 AM
Last Updated : 27 Nov 2017 09:59 AM

இப்படிக்கு இவர்கள்: தவறுகளில் இருந்து பாடம்!

தவறுகளில் இருந்து பாடம்!

வ.25-ம் தேதி ‘தி இந்து’வில் வெளியான இரண்டு செய்திகள் என்னைப் பெரிதும் பாதித்தன. ஒன்று, சென்னையில் அரைகுறையாகக் கட்டப்பட்ட பாலத்தின்மீது சென்று கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தது. மற்றொன்று, பள்ளி ஆசிரியை பெற்றோரை அழைத்துவரச் சொன்னதால் நான்கு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது. பாலம் கட்டும் பணி முடிவடையவில்லை என்பதை உணர்த்தும் வகையில், அங்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரை சினிமா படப்பிடிப்பு நடத்தியவர்கள் அகற்றியுள்ளனர். ஆனால், பொறுப்பே இல்லாமல் அதை அப்படியே திறந்தபடி விட்டுச்சென்றிருக்கிறார்கள். மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் பெற்றோருக்கும் பங்கிருக்கிறது. தம் பிள்ளைகள் முறையாகப் பள்ளி செல்கிறார்களா.. ஒழுங்காகப் படிக்கிறார்களா என்று தாமாக முன்வந்து அடிக்கடி பள்ளிக்குச் சென்று கவனிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. அதைச் செய்திருந்தால், நேரடியாக மாணவிகளின் தவறு குறித்து ஆசிரியர்கள் பெற்றோரிடமே கூறியிருக்க வாய்ப்புண்டு. அதேநேரத்தில், ஆசிரியைகள் மாணவிகளை அவமானப்படுத்தும் அளவுக்குக் கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் தவறு. இவ்விரு சம்பவங்களும் முழுக்க முழுக்க மனிதத் தவறுகளால் நிகழ்ந்தவை. இந்த இழப்புகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இதுபோன்ற தவறுகள் இனிமேலும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

மரிக்கவில்லை மனிதநேயம்!

ரா

மேஸ்வரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மனநலம் குன்றியோருக்கான காப்பகம் குறித்த செய்தியை (நவ.26) படித்து நெகிழ்வடைந்தேன். ரத்த பந்தங்களால் நிராகரிக்கப்பட்டு, ஆதரவற்று வீதிகளில் திரிந்துகொண்டிருப்பவர்களைக் கருணை உள்ளத்தோடு அரவணைத்துத் தங்க இடமும் உணவும், அவர்கள் குணமடைய மருத்துவ சிகிச்சைகளும் அளித்துவரும் மணிகண்டன் பாராட்டப்பட வேண்டியவர். இவர்களுக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு இது என்று அவர் பெருமிதம்கொள்வது ஆபூர்வமான விஷயம். இவை மனிதநேயம் இன்னும் மரித்து விடவில்லை என்பதையே உணர்த்துகிறது. செய்தியை ‘தி இந்து’வில் படித்ததுமே அவரைத் தொடர்புகொண்டு ரூ.1 லட்சம் வழங்கிய மதுரை வாசகியும், மற்றொரு வாசகரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பது அவர்களின் பெருந்தன்மையையே காட்டுகிறது.

- மு.செல்வராஜ், மதுரை.

ராகுலின் முன்மாதிரிகள்

கா

ங்கிரஸ் தலைவராகத் தேர்வுசெய்யப்பட உள்ள ராகுல் காந்தி, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய தலையங்கம் (நவ.24) வாசித்தேன். ராகுலின் சமீபத்திய செயல்பாடுகள் தலைமைப் பொறுப்புக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுவருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்களாட்சியில், வாரிசாக இருப்பது நுழைவுச் சீட்டாகப் பயன்படுமே தவிர, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் துருப்புச் சீட்டாகிவிடாது என்பதை அவர் இந்நேரம் உணர்ந்திருக்கக் கூடும். தனக்கு முன்மாதிரிகளாக இந்திரா காந்தியையும், ஜவாஹர்லால் நேருவையும் கொண்டால் நல்லது. அவர்களது படிப்பறிவு, கடின உழைப்பு, மக்களிடம் பேணிய நெருக்கமான உறவு, நாடாளுமன்றச் செயல்பாடுகள் எல்லாம் அவர் செல்ல வேண்டிய திசைக்கு விளக்காய் இருந்து வழிகாட்டும்.

- நா.புகழேந்தி, பழனி.

உள்நோக்கம் உடைத்த கட்டுரை

பொ

துநல மருத்துவர் கு.கணேசன் எழுதிய ‘ரத்த அழுத்தம்: புதிய கோட்பாடுகளும் சிக்கல்களும்’ கட்டுரை (நவ.24) மிகச் சரியான நேரத்தில் வந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்ற இரண்டு வார்த்தைகளையும் கேட்டே மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் பலருண்டு. இந்தக் கட்டுரையின் மூலம் பலர் ரத்த அழுத்தம் பற்றிய பயத்திலிருந்து தெளிவார்கள். பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படும் சில மருத்துவர்களின் கயமைத்தனத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் இக்கட்டுரை உதவும்.

- முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x