

கலிங்கப்போரில் கொடூரமாக மாண்டுபோன வீரர்களின் சடலங்களையும் போர் ஏற்படுத்திய சீரழிவையும் பார்த்த அசோகர், போரைக் கைவிட்டு அமைதியைப் போதிக்கும் பௌத்தத்தைத் தழுவியதற்கு ஒருபடி மேலே உயர்ந்து நிற்கிறார் பாரி.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; சிறு சிறு புல்பூண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்குமானது என்பது பாரியின் சிந்தனை. அந்தச் சிந்தனையின் வழிநின்று முல்லைக்கொடிக்குத் தேரை அளித்த பாரியின் அறம் குறித்துச் சங்கப் பாடல்களின் துணையோடு அனைவரும் அறியும் வகையில் கவிதையாக்கியுள்ளார் அறிவுமதி. ஓவியர்கள் ஏ.பி.தர், ரவி பேலட் இருவரது ஓவியங்கள் கண்ணைவிட்டு அகலவில்லை.
தேர் எப்படி உருவாக்கப்பட்டது, அதன் வேகம் என்ன, அது ஏற்படுத்தும் இழப்புகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டே பழந்தமிழர் ஆண்ட காலத்துக்கு ஆசிரியர் நம்மை அழைத்துச் செல்கிறார்.
தேர் என்னும் ‘பயணக் கருவி’ எப்படிக் ‘கொலைக் கருவி’யாக மாறுகிறது என்பதைத் தமிழ்ப் புலவர்களின் சொற்கள் வழியே விளக்குகிறார்.
தேர்கள் செல்லும் பாதையில் அறுபடும் கொடிகளும் கிழியும் இலைகளும் உதிரும் பூக்களும் மனிதக் கொலைகளுக்கு நிகரானவை என நாம் கவனிக்கத் தவறுகிற உயிர்களின் வாதையை அறிவுமதியின் கவிதை வரிகள் வேதனையோடும் அளவற்ற பரிவோடும் உணர்த்துகின்றன.